எனது குப்பைகள் - நூல் வெளியீட்டு விழா
ஒரு அழகிய தருணத்தை எதிர்பார்த்து வழி மேல் கல்லை வைத்து காத்து இருக்கும் என்னுடைய பலகோடி(?) ரசிகப் பெருமக்களுக்கு விருந்தாக வருகிறது "எனது குப்பைகள்" நூல். குப்பை என்று பெயர் வைத்தால்,ஒருமையை கொடுத்து நான் ஒரு சுயநலவாதி என்ற பிம்பம் தந்து கம்பத்திலே கட்டி வைத்து அடிக்க வாய்ப்பு இருப்பதாலே, "குப்பைகள்" என்று பன்மை சேர்த்து நானும் ஒரு பொதுநலவாதி என்பதை அடிக்கோடிட்டு சுட்டி காட்டவே "கள்" சேர்த்து இருக்கிறேன்.
கல்லூரி சாலையிலே "கள்" குடித்துவிட்டு கட்டை மாட்டு வண்டியிலே சென்றாலும், கார வீட்டு கார் பிடித்து அமெரிக்கா சென்று, என்ன வேலை செய்கிறோம் என்று தெரியாமல் இருந்தாலும், தமிழுக்கு அறிய பல தொண்டுகள் செய்து "கொண்டியாரங்கள்ளி" என்ற வரலாற்று காவியம் படைத்த குடுகுடுப்பையார்,எனது குப்பைகள் நூலின் அறிமுக ஏற்புரை எடுப்பதாக கட்சி கொடியின் மேல் சபதம் செய்து இருக்கிறார்.அவரின் அறிமுக உரையின் முன்னோட்டம் இதோ
"ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாது என்பதற்கான இலக்கணமே இந்த எனது
குப்பைகள்,குப்பை என்பது களையப்பட வேண்டிய ஒன்று இந்த புத்தகத்தைப் போல".
வாழ்க்கையிலே தான் சந்தித்த கதாபாத்திரங்களை வெளியிட்டு கலைத்தாயின் தீராப் பசியை மணிமேகலை வைத்து இருந்த அமுதசுரபியை கந்து வட்டிக்கு கடன் வாங்கி தீர்த்துக்கொண்டு இருக்கும் பதிவுலக மன்னன் எங்கள் அண்ணன், இல்லாத கட்சிக்கு பொல்லாத மாணவர் அணித்தலைவர், இருண்டு விடாதே என்று வானத்தைப் பார்த்து பாடிய கவுஜையாலே வானம் மயங்கி, வனம் போல மப்பும், மந்தாரமுமாக, கொப்பும் கிளையுமாக இருக்கிறது, பாலகன்(?) போல இருப்பதாலே அவரை பாலா அண்ணன் என்று அழைக்கிறோம்(?).இவ்வளவு புகழுக்கு சொந்தக்காராக இருந்தாலும், எனது குப்பைகளுக்கு ஏற்புரை வழங்குவதாக காசு வாங்காம வாக்கு கொடுத்து இருக்கிறார்.அவரின் ஏற்புரையின் முன்னோட்டம் இதோ உங்கள் பார்வைக்கு
"தொல்காப்பியத்துக்கு பிறகு தமிழிலே சிறந்த இலக்கண நூல் வெளிவரவில்லை என்பது உலகறிந்த உண்மை, அப்பேற்பட்ட பெருமை கொண்ட தொல்காப்பியர் இந்த குப்பையைப் படித்தால் நிச்சயம் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும், ஆமா கொலை பண்ணினா ஆயுள் தண்டனை தானே கொடுப்பாங்க(?)".
இவரை தெரியும் என்பதிலே எனக்கும், டமிழ் மம்மிக்கும் பெருமை, சொல்லின் செல்வர், தமிழை வில்லாக்கி, வார்த்தைகளை அம்பாக்கி, படிப்பவர்களை கவரும் தமிழ் அம்பு. வட்டார சொல், வழக்குச்சொல் மற்றும் வழக்கு ஒழிந்த சொல் ஒவ்வொன்றையும் நேர் வரிசையாகவும், குறுக்கு வரிசையாகவும் அடுக்கி கட்டம் கட்டி சொடக்கு போட்டு சொடுக்கு விளையாடுவார். ஊர்ப்பழமை பேசுவதிலே பெருசுகளுக்கு இணையானவர்.
"ஒரு புத்தகம் எப்படி இருக்கோனுமுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா என்ற ஊர்ப்பழமையைப் படிங்(க), ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாதுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா இந்த குப்பைப் படிங்(க) ன்னு எங்க அப்பச்சி கனவிலே கவி காளமேகம் வந்து சொல்லி இருக்".
ரஜினி படம் போல புத்தகம் வெளிவரும் முன்னே, உலகெங்கிலும் உள்ள ரசிகர் பெருமக்கள் புத்தகம் வாங்க அலை அலையாய் இணையத்திலேயும், வலையிலேயும் ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிவித்து உள்ளது. இப்படி ஒரு புத்தக அலையைப் பார்த்ததில்லை என மன்னார் பதிப்பகம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக முகிலன் புத்தகத்தின் பிரதிகளை சாக்குமுட்டையிலே வைத்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.விளக்கம் கேட்டு மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவிலே கலவரம் மிகுந்த பகுதியாகிய மைலாப்பூரிலே பொது மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற விதூஷ் பக்கோடாவை விட புத்தக எண்ணிக்கை அதிகமாக விற்கும் என தகவல் கிடைத்ததாலே,முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விதூஷ் ஐயாயிரம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து, தோட்டாக்கள் போன்ற பக்கோடாவை புத்தகத்தாள்களை கிழித்து சுத்தி கொடுக்க யோசனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பப்புவிடம் வாங்கிய பல்புகள் பளிச்சென மின்னுவதாலே, அந்த ஒளியை குறைக்க ரெண்டாயிரம் பிரதிகளுக்கு சந்தனமுல்லை முன் பதிவு செய்து இருப்பதாக பப்பு ரசிகர்மன்ற அமெரிக்க கிளை தெரிவித்து உள்ளது .
இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் புத்தக அலை புயல் அலையாக இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது, குறிப்பாக அவுஸ்திரேலியாவிலே முன் அறிவிப்பு ஏதுமின்றி தமிழகத்தின் மின் அறிவிப்பு போல கடைய ஆட்டயப் போட்ட கூகிள் ஆண்டவரிடம் பல தெருமுனை போராட்டங்களை நடத்தி,கடை திரும்ப கிடைக்க போராடி வரும் தங்க மங்கை, வைர மங்கை இப்படி பல பட்டப்பெயர்கள் இருந்தும், தங்கமும், வைரமும் வெங்காய விலைபோல இருப்பதாலே, அதை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு அவுஸ்திரேலியா கும்மி கழக தலைவி என்ற ஒரு பட்டத்தை மட்டும் வைத்து இருந்த/இருக்கும் சின்ன அம்மிணி, ஒரு லட்சம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து இருப்பதாக ஏஜென்சி செய்திகள் கூறுகிறது.
தில்லி தமிழ் சங்கத்தின் சார்பாக கோடை வெப்பம் தணிக்க புத்தகம் இலவசமாக வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மாபெரும் நூல் வெளியீட்டு திருவிழாவை நேரடி ஒலி,ஒளி(ழி) பரப்பு செய்ய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டா போட்டி போடுகின்றனர். விழாவிலே ௬ட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலே தமிழக மற்றும் இந்திய காவல்துறைகளுக்கு கிரகம் சரியில்லாததாலே அனுமதி வழங்கவில்லை, அதனால் விழா செவ்வாய் கிரகத்திலே நிகழும் 23345 வருடம், தை 30 ம் தேதி நடைபெறுகிறது. அனைவரும் கல்லோடு வந்து விழா(லா) வை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.