Thursday, November 25, 2010

தற்குறிப்பேற்ற அணியும், சகுனமும்

பொறுப்பு அறிவித்தல் :
நல்ல நேரம்,கெட்ட நேரம் மற்றும் சகுனம் இவைகளிலே நம்பிக்கையுள்ளவர்கள் இந்த இடுகையை தவிர்ப்பது நலம்.


கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொல் அணிக்கு சொம்பு அடிச்சேன், மறுபடியும் ஒரு அணியோட அணியில்லாம வந்து இருக்கேன்.சும்மா அணியோட வந்தா நல்லா இருக்காதேன்னு கூடவே சகுனத்தையும் ௬ட்டிட்டு வந்து இருக்குறேன், அதுமட்டுமில்லாம கடையிலே ஆராய்ச்சி மணி அடிச்சி ரெம்ப நாள் ஆகிவிட்டது என்று யாருமே கேட்காததாலே சகுனத்தையும், தற்குறிப்பேற்ற அணியையும் வைத்து ஒரு சின்ன ஆராய்ட்சி.சரி இப்ப தற்குறிக்கு வருவோம். நான் வல்லவன், நல்லவன், இலக்கியவாதி, எழுத்தாளர் இப்படின்னு சுயமா சொம்பு அடிச்சா, அதுக்கு பேரு தற்பெருமை. என்னையப் பத்தி தெரியாதவங்க கிட்ட இப்படி சொம்பு அடிக்கலாம், என்னைய நல்லா தெரிஞ்சவங்க கிட்ட இப்படி சொம்பு அடிச்சா, அடிக்கிற சொம்பை பிடிங்கி மண்டையிலே ரெண்டு போடுவாங்க.

தற்குறிப்பேற்ற அணியும் கிட்டத்தட்ட இதே வகைதான்(?), சாதாரணமா நடக்கிற விஷயத்தை மசாலா தடவி, ரெண்டு குத்து பாட்டு போட்டு எழுதிட்டா அதுவே தற்குறிப்பேற்ற(?) அணியாகி விடுகிறது, அந்த வகையிலே பார்த்தா எழுத்தார்களின் எழுத்துகள் எல்லாமே தற்குறிப்பேற்ற அணி தான், சாயங்காலம் ஆறு மணி ஆச்சின்னா யாரு எந்த வழி போனாலும் சூரியன் மறைந்து விடும். மாசத்திலே வளர் பிறையும், தேய் பிறையும் வருவது வழக்கம்.

இந்த சாதாரண நிகழ்வை கவிஜர் என்ன சொல்லுவாருன்னா உன்னைய காணாம நான் மட்டுமல்ல நிலவும் தேயுதுன்னு வீட்டிலே இறைச்சி பிரியாணியும், மீன் வருவலும் சாப்பிட்டிட்டு சொல்லுவாரு,அவுக ஆள் வெளியே வரலைன்னா உலகமே இருட்டு ஆகிடும்,எனக்காக இல்ல, இந்த உலகத்துக்காகவாது நீ குளிக்காம வெளியே வா, இப்படி பல பொய் பாட்டுகளைப் பாடி, போட்ட துண்டை உறுதியாக்கி கொள்வாரு. இதையே சாதாரண வாழ்க்கையிலே ஒப்பிட்டு பார்த்தோமானால் நல்ல நேரம் காலை ஒன்பதிலே இருந்து பத்து மணி வரைக்கும் நாள் காட்டியிலே எழுதியதை பார்த்துவிட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் சகுனம் சரி இல்லை". என்று சொல்லி வீட்டுக்குள்ளே சென்று நல்ல நேரம் முடியும் வரை வீட்டுக்குள்ளே இருக்கிறோம்(?) .

இலக்கியத்திலே இருந்தும் ஒரு உதாரணம் சொல்லாம விட்டுட்டா நாளைக்கு இலக்கியவாதி பட்டம் கிடைக்காம போய்டும் என்று கொலை வெறியிலே சொல்லிக்கிறேன்.சிலப்பதிகாரத்திலே மாதவியோட குத்தாட்டம் போடப் போய், மஞ்ச துண்டு போட்டு மறுபடி கண்ணகிட்ட சரண் அடைந்து , உள்ளுரிலே பொழைக்க வழி இல்லாம கண்ணகியோட மதுரைக்கு புறப்பட்டு போறார். அவங்க மதுரை மாநகரம் நுழையும் முன்னே காற்றிலே மேலும்,கீழும் ஆடிய கொடி,இவர்களை வர வேண்டாம் என்று சொல்வதைபோல இருந்ததாக இளங்கோவடிகள் சொல்லுகிறார்.இப்ப இதையும் சகுனத்தையும் ஒன்று படுத்திப் பாருங்க, ரெண்டுமே சாதாரண நிகழ்வுதான். .

ஒரு நாளைக்கு 24 மணி நேரமா இருந்தாலும், இவங்க நல்ல நேரம் ஆரம்பிக்கிறது காலையிலே ஆறு மணியிலே இருந்து, அரை மணி நேரத்துக்கு ஒண்ணுன்னு பிரிச்சி, நாள் காட்டியிலே குறிச்சி வச்சிடுறாங்க.சாதரணமாக இருக்கிற நேரங்களை எல்லாம் நல்ல நேரம், கெட்ட நேரம், கிழக்க சூலம், மேற்கே சூலம்னு சொல்லி வச்சி இருக்காங்க.இதை எல்லாம் படிக்கிறவங்களும் உண்மைன்னு நம்பி,சென்னையிலே இருக்கிறவங்க கிழக்காம போன சகுனம் நல்லா இருக்கும்னுன்னு கள்ளத்தோணி ஏறி இலங்கை வரைக்கு போற அளவுக்கு இருக்கு.இதை எல்லாம் படிச்சி பின்பற்றுகிறவங்க பலன் பெறுறாங்களோ இல்லையோ,நல்ல நேரம்,கெட்ட நேரமுன்னு குறிச்சி, அதை நாள்காட்டியிலே போட்டு விற்கிறவங்க நல்லாவே கல்லா கட்டுறாங்க.

நல்ல நேரம், கெட்ட நேரம் இல்லன்னா பூமியே சுத்தாது என்ற அளவுக்கு ஆகி இருக்கு, இதையே நம்பி நம்ம ஆளுங்க பிறக்கும் குழந்தை சி செக்சன்னு(அதான் வயத்தை அறுத்து வெளியே எடுக்கிறது) தெரிஞ்ச உடனே, நல்ல நேரம் குறித்து கொடுக்கிற சாமியிடம் ஒரு நேரத்தை குறித்து கொடுக்க சொல்லி, இந்த நேரம், இந்த நிமிசத்திலே கத்திய வையுங்கன்னு மருத்துவரிடம் சொல்லிடுறாங்க, இப்படி நல்ல நேரத்திலே பிறந்தவங்க எல்லாம் ஒரு சி(கோடி), ரெண்டு சி ன்னு சம்பளம் வாங்குவாங்க, மத்தவங்க எல்லாம் ஒரு சென்ட் ரெண்டு சென்ட்கு சிங்கி அடிச்சிகிட்டு தெருவிலே இருப்பார்களாம்(?).இந்த நல்ல நேர ஆர்வத்திலே செத்தாலும் நல்ல நேரத்திலே சாவனும்னு நினைக்கிற அளவுக்கு ஆகிபோச்சி.

தற்குறிப்பேற்ற அணியிலே பார்த்த எல்லா உதாரணங்களும் சகுனத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது(?),ஆகவே சகுனம்,நல்ல நேரம்,கெட்ட நேரம் என்று சொல்வதெல்லாம் தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லி வாய்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.


Sunday, November 21, 2010

புதுமைப்பெண்

பொறுப்பு அறிவித்தல்:
இடுகையிலே உள்ள சம்பவங்களும், நிகழ்வுகளும் உலகமஹா மொக்கை கற்பனையே என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன், பூலோகம், சந்திர மண்டலம், மற்றும் செவ்வாய் கிரகத்திலே உள்ள யாரையும் குறிப்பிடுவன இல்லை


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு 
என்று கேட்டதால் 
முதுநிலை பட்டம் படித்து 
வாயு அடுப்பிலே சமைத்து 
கட்டு கட்டாக அடுக்கி 
இணையத்திலே இணைத்து 
பொங்கி பலரும் பயன் பெற
பெருமை சேர்க்கிறேன் பெண்மைக்கு 

இப்படி ஒரு கவுஜையை நான் எழுதி இருந்தா எனக்கு இன்னையிலே இருந்து வீட்டு சாப்பாடு கிடைக்காது, இந்த கவுஜையை எழுதிய புண்ணியாவான் யாரோன்னு நினைச்சி இந்த கதையின் நாயகி கொலைவெறி கோபத்திலே இருந்தபோது, அவளுடைய உரையாடியிலே இருந்து அழைப்பு வருகிறது.

"ஹலோ எப்படி இருக்கீங்க"  சத்தத்தை கேட்டவுடனே பதிலுக்கு "இருக்கேன்"

"என்ன ஆங்கிரியா, நீங்க செஞ்ச ஜாங்கிரி சாப்பிட்டீங்களா ?"


"நீ வேறப்பா ஒருத்தன் எழுதின கவுஜையப் பார்த்து கொலைவெறியிலே இருக்கேன், நீ வேற ஜாங்கிரி பண்ணச்சொல்லுற?"

"ஜாங்கிரின்னதும் எனக்கு ஞாபகம் வந்திரிச்சி, நீங்க போன வாரம் போட்ட சமையல் குறிப்பு படம் சரியா இல்லையே,செய்ய ட்ரை பண்ணி சோ சோகமாகிட்டேன்"

"என்ன அப்படியா, இப்ப நீ ஏதும் வேலையிலே பிஸியா?"

"எப்போதுமே வெட்டிதான்"

"அப்படியே வெப் காம் ஆன் பண்ணு, நான் உனக்கு லைவ் டெமோ காட்டுறேன்"

"ஒ.. ரியலியாவா , நீங்க சோ ஸ்வீட்"

"கொஞ்சம் இரு உயர்லெஸ் கன்னேட் பண்ணுறேன், என்கிட்டே ஐ பைவ் பிராசசர் வச்சி இருக்கேன், ஹை ஸ்பீட் நெட் இருக்கு"

"இருக்கட்டும், அடுப்ப ஆன் பண்ணுங்க"

"இதோ ஒரு நொடியிலே பண்ணுறேன்"

"சமையல் குறிப்பு ஐட்டம்ஸ் ரெடியா?"

"இருக்கு, நீங்க டெமோக்கு ரெடியா?"

"ஹே முக்கியாமா கருவேப்பிலை, நல்லா பச்சையா இருக்கணும்" 

"வேப்பிலை மாதிரி நல்லாவே பச்சையா இருக்கு?"

"சரி, ஒரு நிமிஷம் வெயிட், நானும் எல்லாத்தையும் வெட்டிக்கிறேன், நீயும் வெட்டு"

சரி (அடுத்த ஐந்து நிமிடத்திலே)

"வெப்காம்ல கிட்சன் சட்டி தெரியுதா?"

"சரியா தெரியலையே"

"என்ன செய்ய என் வீட்டிலே டூ மெகா பிக்சல்ஸ் தான் இருக்கு, அதான் கொஞ்சம் மங்கலாவே தெரியும், எதுக்கும் நீ உன்னோட பவர் கிளாஸ் போடு, நல்லா தெரியும்"

"ஓகே.. ஓகே.. இப்ப கொஞ்சம் நல்லா தெரியுது"

"இரு அடுப்புக்கு உள்ளே கணனியை எடுத்திட்டு போறேன்" 

"இது ஒன்னும் லப்டாப் பொறியல் இல்லையே ?"

"இல்லப்பா, இன் பில்ட் வெப் காம், அதான் உள்ளே எடுத்திட்டு போறேன்"

"எண்ணெய் கொதிக்கிறது தெரியுதா?"

"ஒ.. நல்லா தெரியுது"

"இப்ப வெட்டி வச்ச வெங்காயம் போடு"

"போட்டுட்டேன்" 

"கொஞ்சம் நேரம் நல்லா கிளறி விடு"

"உங்க சேவையோ சேவை..வாழ்க சமையல் கலை, வளர்க உங்க குறிப்புகள்" 

"கூல் .. கூல் .. அடுப்பு சூடா இருக்கு, வெங்காயம் அங்க எப்படி இருக்கு?"

"தக தகன்னு இருக்கு"

"உங்க அடுப்பு ரெம்ப ஸ்பீட் போல இருக்கே"

"ஆமா நாலு அடுப்பு ஒரே செட்டுல, முன்னால உள்ள ரெண்டு அடுப்பு முன்ணூறு டிகிரி, பின்னாடி உள்ளது ஐணூறு டிகிரி"

"தட் இஸ் ஆவ்சம், சரி இப்ப கருவேப்பிலைய போடு"

"போட்டுட்டேன், கமகம ஸ்மெல்.. டூ குட்"

"எல்லாம் என்னோட கை குறிப்பு பக்குவம் தான்"

"நல்ல பாரு என் எண்ணெய் சட்டியை,இதே நிறத்திலே அங்க இருக்கா?"

"அல்மோஸ்ட் இருக்கு"

"சரி அடுப்பை அமைத்து அம்புட்டுதான்"

"சோ நைஸ், இதுக்கு என்ன தலைப்புப்பா கொடுத்தீங்க?"

"தாளிப்பது எப்படி"

"அருமையான தலைப்பு" 

"இன்னொன்னு சொல்ல மறந்திட்டேன், நீங்க போன போன வாரம் போட்ட, ரொட்டிக்கு சீனி தக்காளி தொக்கு தடவுவது எப்படி ரெம்ப நல்லா இருந்தது, தலைப்புக்கு ஹட்ஸ் ஆப், தமிழ்ல வொன்டர் புல்லா பேரு வைக்கீங்க"

"அது ப்ளட்ல இருக்கு" 

"இன்னொரு வாசகர் விண்ணப்பம்"

"நோ பீல், நோ ஷை, சொல்லுப்பா?"

"அவிச்ச முட்டைக்கு தோல் எடுப்பது எப்படின்னு விரைவிலே குறிப்பு எழுதனும்முன்னு கேட்டுகிறேன்"

"அதை எழுதனுமுன்னு நினைச்சி இருந்தப்ப ஒரு கவுஜ கண்ணிலே பட்டு மூடு போச்சி"

"அப்படி என்ன தான் எழுதி இருக்கான்"

"நாம எல்லாம் பெரிய படிப்பு எல்லாம் படிச்சிட்டு இன்னும் சமையல் கலையத்தான் பிரபலப் படுத்துறோம்னு சொல்லி இருக்கான்" 

"என்ன சொன்னீங்க?"

"நாம இன்னும் சமயகட்டை விட்டு வெளியே வரலையாம்"

"அவனை எல்லாம் பூரி கட்டையால ரெண்டு தட்டு தட்டனும்"

"நானும் யாரு என்னன்னு விசாரிச்சிகிட்டு இருக்கேன், தகவல் கிடைச்சா சொல்லி அனுப்புறேன்"

நீங்களும் தகவல் கிடைச்சா கொஞ்சம் சொல்லுவீங்களா?


Sunday, November 7, 2010

முத்தயியல்

நான் ஆண்கள் கல்லூரியிலே படித்தாலும், எனக்கு ஒரு காதலி இருக்கிறாள்.௬ட படிக்கிற நண்பர்கள் எல்லாம் எனக்கு ரெண்டு காதலி இருக்கா, மூணு காதலி இருக்கான்னு சொல்வதை கேள்விப்பட்டு, நான் ஒண்ணை பிடிக்கவே நாய் படாத பாடு படுறேன், எப்படி ரெண்டு மூணுனு யோசித்தே என்னையும் துண்டு போட வைத்து விட்டார்கள். என்னோட காதலி மருத்துவம் படிக்கிறாள்,அதனாலவோ என்னவோ எனக்கு கல்லூரியிலே நல்ல பேரு, மருத்துவச்சிக்கு துண்டு போட்ட மாவீரன்னு பட்டம் எல்லாம் கொடுத்து இருக்காங்க, ஆனா உண்மையிலே என் காதலி எங்க ஊரிலே பீடி சுத்திகிட்டு இருக்கிறாள் ,காதல் புலிகளைப் பார்த்து சுடு போட இந்த பூனைக்கு ஆள் கிடைக்காதலே,காதல் ஏழைக்கு ஏத்த காதலி எள்ளுருண்டையா உள்ளுர்லே கொஞ்சம் வெள்ளையா இருந்த வளவளத்தாவுக்கு துண்டு போட்டேன், ஆரம்பத்திலே உலக வசவுகள் எல்லாம் வாங்கி ஒரு வழியா உசார் பண்ணிட்டேன். 

நண்பர்களிளிடையே ஒரு அந்தஸ்து இருக்க வேண்டும் என்பதற்காக, பீடி சுத்துற வளவளத்தாவை மருதுவச்சின்னு சொல்லி வச்சி இருந்தேன்,இந்த பொழப்புக்கு ரெண்டு கவுஜ எழுதி பொழைப்பை ஓட்டலாமுன்னு நீங்க நினைச்சாலும், எனக்கு நொங்கு நோகாம தின்னமுடியாதுன்னு யோசனை வருது.இப்படியெல்லாம் பொய் சொன்னாலும் நகரத்து பெண்கள் பின்னாடி எல்லாம் நாய் குட்டியா அலைந்து தேத்துற அளவுக்கு நான் அழகு கிடையாது. 

நான் கல்லூரி விடுமுறைக்கு வரும்போது நான் வளவளத்தாவை சந்திப்பேன், அவ பீடி சுத்தினதை கடையிலே கொடுத்து விட்டு வரும் போது அவளை சந்திப்பேன். இப்படி ஒரு நாள் முட்டு சந்திப்பிலே இரு காதல் பறவைகள் சந்திக்கும் போது, நொங்கு திங்க முடியலையே என்கிற வருத்தத்திலே 

"வளவளத்தா நம்ம காதல், நீ சுத்துற பீடியிலே இல்லாதா தூள் மாதிரி இருக்கு, உன் பீடியை குடிக்கிறவன்தான் உன்னைய திட்டு திட்டுறான், உன்னைய காதலிக்கிற நானும் உன்னைய திட்டனுமா?"

"காக்கா,தோட்டத்திலே கத்தரிக்கா பிடுங்க போனவகிட்ட காதல் கடிதாசி கொடுத்து காலிலே விழுந்து என்னை ஏத்துகோன்னு கெஞ்சி என் மனசை ஆட்டைய போட்டவன் நீ, உனக்கு இதுவே பெரிய விஷயம் "

"வளவள, கல்லூரியிலே முத்தயியல் படிச்சதிலே இருந்து, அதை சோதனை செய்யணுமுன்னு வாய் அரிக்குது"

"இந்த சுவத்திலே வாய வச்சி தேயி சரியாப்போகும்"

"நான் சொல்லுறது உன் உதட்டிலே வாய் வச்சி தேய்க்கிறது"

"கருவாய் ரெம்ப நீளுது இன்னைக்கு"

"வளவள முத்தயியல் பெரிய கடல், இருந்தாலும் ஒண்ணு ரெண்டாவது சோதனை செய்தத்தான், பரிட்சைக்கு நல்லது, உன் செல்ல காக்கா, பரிட்சையிலே தோல்வி அடைஞ்சா உன் அப்பன் எனக்கு பெண் கொடுப்பானா?"

"நீ தேர்ச்சி அடைஞ்சாலும் என்னைய உனக்கு கட்டி கொடுப்பான் என்பது சந்தேகமே, இருந்தாலும் பாவம் பச்சை புள்ள ஆசையா கேட்குது என்னன்னு சொல்லு"  ன்னு சொன்னதும் மூட்டு சந்திலே ஆள் நடமாட்டம் அதிகமா வந்துட்டாங்க, நான் ஓசி படம் காட்டுவேன்னு நினைச்சாங்களோ என்னவோ, உடனே அவளைப் போகச்சொல்லிவிட்டு நாளைக்கு சந்திக்கலாம் என்று அனுப்பிவிட்டேன், இரவு கனவிலே முத்தமா வந்தது, எப்படியும் நாளைக்கு நொங்கு திங்கலாமுன்னு படுத்து தூங்கிவிட்டேன், மறுநாள் மாலை மீண்டும் எங்கள் சந்திப்பு மூட்டு சந்திலே 

"காக்கா நீ முத்தமுன்னு சொன்னதும் நேத்து எனக்கு கனவே வரலை"

"அதான் நேரிலே சொல்லைப் போறேனே, அப்புறம் கனவு எதுக்கு, முத்தத்திலே ரெண்டு வகை ரெம்ப முக்கியம், அதுல ஒண்ணு மாட்டு முத்தம்?"

"மட்டு சாணிய அள்ளி மாத்தி மாத்தி முகத்திலே எறியணுமா?"

"இல்ல வளவள" 

"புரியுற மாதிரி சொல்லு?"

"மாடு எப்படி தண்ணி குடிக்கும்?" 

"நல்லா கழுத்தை நீட்டி தண்ணியை உறிஞ்சி மண்டும்"

"நாமளும் அதே மாதிரி தலைய நீட்டி, உதட்டோட உதட்டு வச்சி?"

"எச்சிய மண்டனுமா?"

"இல்ல பக்கி, நாக்கை நல்லா சுழட்டி சுழட்டி, உன் வாயிலே இருக்கிற எச்சை நானும், என் வாயிலே இருக்கிற எச்சையும், அடி பம்பிலே தண்ணி அடிக்கிற மாதிரி அடிக்கணும்,ரெம்ப வேகமா உரிய௬டாது, அப்புறம் குடல் வெளியே வந்து, கின்னஸ் புத்தகத்திலே இடம் கிடைக்கும்" 

"ஆக மாடு தண்ணி குடிக்கிற மாதிரி எச்சியை குடிச்சி,உன் பல்லை நானும், என் பல்லை நீயும் விளக்கத்துக்கு பேரு மாட்டு முத்தமா ?"

"தமிழ்ல மாட்டு முத்தம் ஆங்கிலத்திலே லிப்லாக்"

"அவ்வளவு தானா ?"

"இன்னொன்னு சுடுநாய் முத்தம், அதுக்கு நாம ரெண்டு பேரும் ஒத்தை காலிலே கொக்கு மாதிரி நிக்கணும்"

"நின்னு மறுபடியும் மாடு மாதிரி மண்டனுமா?"

"இல்ல உதட்டிலே வெள்ளை அடிக்கணும்"

"சுண்ணாம்பு அடி முத்தமுன்னு பேரு வைக்க வேண்டியதானே, அது என்ன சுடு நாய்?"

"வெளி நாட்டிலே எல்லாம் சுடு நாய் விக்குறவங்க, தெருவிலே இப்படித்தான் கொடுப்பாங்களாம், அங்க எல்லாம் இலவச முத்தக் கல்வி தெருவிலே கிடைக்குமாம், நம்ம ஊரிலே இன்னும் துரை மாதிரி வரலைன்னு பாடமா வச்சி இருக்காங்க"

"காக்கா இம்புட்டு வேலை செய்வதற்கு பதிலா நல்ல பற்பசை வாங்கி ரெண்டு பேரும் பல் விளக்கலாம்,உன் வாயிலே இருக்கிற கிருமியை எல்லாம் என் வாயிலே அள்ளிப்போட்டு இலவசமா நோய் இழுத்துவிடுற இந்த விளையாட்டு தேவையா?"

"அதையெல்லாம் பாடம் முடிஞ்ச உடனே யோசிக்கலாம், பரிசோதனையை ஆரமிக்கலாமா ?"

"நீ ஊருக்கு போயிட்டு அடுத்த தடவை வரும் போதுதான், அதுவரைக்கும் நீ சொன்னதை எல்லாம் நான் மனப்பாடம் பண்ணி வச்சி இருக்கேன்னு சொல்லிட்டு போய்ட்டா?" 

ஆட்டையப் போட வழி இல்லாமா, நானும் கல்லூரிக்கு போயிட்டேன், அடுத்த ரெண்டு மாதம் ஊருக்கு வர முடியலை, முத்தாக கனவு நனவு ஆகுமுன்னு திரும்பி வந்தேன், வளவளத்தா வீட்டு முன்னே பெரிய ௬ட்டம், நான் பக்கத்திலே போய் விசாரித்தேன், பதிலை கேட்டு என்னால பேச முடியலை, அன்று மாலையிலே முட்டு சந்திலே போன தடவை கொடுத்த தூள் இல்லாத கட்டை பீடியை குடித்துக்கொண்டு இருக்கும் போது, வளவளத்தா வந்தாள். 

"ஏய் காக்கான்னு சொல்லவந்தவ, என் பேரை சொன்னாள்.

"கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?"

"ம்ம், நான் என்ன செய்ய என்னைய தான் கட்டுவேன்னு ஒத்தை காலிலே நிக்காரு எங்க அமெரிக்க மச்சான், அங்க தொழில் அதிபரா இருக்காராம்,உனக்கு என்னைய மாதிரி பீடி சுத்துறவ  கிடைப்பா,ஆனா எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை கிடைப்பாரா?"

"நான் அமெரிக்கா போகவே மாட்டேன்னு முடிவே பண்ணிட்டியா?"

"நீ இப்பத்தான், மாட்டு தொட்டியிலே தண்ணி மண்ட படிசிகிட்டு இருக்க,நீ என்னைக்கு மாட்டுக்கு தீனி வச்சி, அது வளர்ந்து கண்ணு குட்டி போட்டு, சாணி அள்ளி போட்டு எப்ப வர, உன் ௬ட சேர்ந்து என்னை சாணி அள்ள சொல்லுறியா?, எங்க மச்சான் அங்க சுடு நாய் விக்காரு, இன்னும் ரெண்டு மாசத்திலே கல்யாணம்,பரிட்சை இருக்குன்னு சொல்லிட்டு ஊருபக்கம் வராதேன்னு சொல்லிட்டு போய்ட்டா"

கட்டபீடியை கசக்கி போட்டேன், மனசு கிழிஞ்சி போச்சி என்ன செய்யன்னு தெரியலை, வீட்டுக்கு வந்து வயறு முட்ட சாப்பிட்டேன், ஒரு பேனாவை எடுத்து கிறுக்குனேன் நினைச்சதை எல்லாம், காதல் போய் கவுஜை வந்துவிட்டது,காலங்கள் கடந்தது,நான் பெரிய கவுஞன் ஆகிட்டேன், ஆனா கவுஜைக்கு சொந்தக்காரி அமெரிக்காவிலே என்ன செய்யுறாளோ நினைப்புகள் அப்ப அப்ப வரும், வரும்போதெல்லாம் ௬டவே கவுஜையும் வரும், அமெரிக்காவிலே இருக்கிறவங்க யாராவது வளவளத்தாவை பார்த்தா நான் நல்லா இருக்கேன்னு சொல்லுவியளா?



Monday, November 1, 2010

அமெரிக்காவில் இந்திய தூதரகமும், நம்மவர்களும்

இது ஒரு ஜனகனமன இடுகை, தாய் மண்ணை அள்ளி பையிலே போட்டு இருக்கிறவங்க எல்லாம், கொஞ்சம் நெத்தியிலே பூசிக்கோங்க, கோவத்திலே கணணியிலே அள்ளி எறியவேண்டாம் என அன்போட கேட்டுக்கொள்கிறேன். 

அதாகபட்டதாவது அலுவலகத்திலே வெள்ளையம்மா(?), வெள்ளையப்பன் ௬ட இங்க இருக்கிற கருப்பு அண்ணாச்சி மாதிரி இங்கலிபிசு புரியாம பேசி அலப்பறையை கொடுத்துக்கிட்டு இருந்தாலும், ஊருக்கு போகும் போது காலாவதியான கடவுச்சீட்டை கொண்டு போனா கல்லை கொண்டு எறிந்துவிடுவாங்க என தெரிந்து கொண்டு இந்திய தூதரகத்திடம் நேரிலே சென்று புது கடவுச்சீட்டு வாங்க சென்றேன்.     

காலையிலே ஒன்பது மணிக்கு இருக்கனுமுன்னு சொன்னாலும், நான் வழக்கம் போல பதினோரு மணிக்கு போனேன், இந்திய தூதரகமுன்னு ரெம்ப சுலபமா கண்டு பிடிச்சிட்டேன், மக்கள் வெள்ளம் மலைபோல ஒரு வரிசையே இல்லாம நின்னாங்க, வரிசை இங்கே இருக்கு என்ற குறியிட்ட இடத்திலே  அனைத்து கணித உருவங்களையும் உள்ளடக்கி நின்ற ௬ட்டத்திலே நானும் நுழைந்தேன், கொஞ்ச நேரத்திலே வரிசையிலே நின்றவர்களிடம் வரிசை எங்கே இருந்து ஆரம்பிக்கிறது என்று தெரியாமல் கையை நீட்டியவர்களுக்கு எல்லாம் தூதரக நுழைவு அனுமதி சீட்டை வழங்கினார் அதிகாரி ஒருவர். வாங்கி விட்டு உள்ளே சென்றேன்.


வெளியே நாங்கள் வாங்கின அனுமதி சீட்டு எண் திரையிலே வரும்,நாம்  கையிலே இருக்கும் எண் வரும் போது, நம்மோட விண்ணப்பத்தை எடுத்துக்கொண்டு அதிகாரியை சந்திக்க வேண்டும். திரையிலே வரும் எண் வரிசை முறைப்படியே அலுவலக அதிகாரிகள் விண்ணப்பதார்களை சந்தித்தாலும், அதிகாரிகளின் கவுன்ட்டர் முன்னே எந்திரன் படத்துக்கு சீட்டு வாங்குவது போல ஒரு பெரிய ௬ட்டம், திரையிலே எண் வந்த நபர், இவர்களிடம் தள்ளு பட்டு கவுன்ட்டரை அடைய குறைந்த பட்சம் பத்து நிமிஷமாவது ஆகும். அது என்னனு தெரியலை நம்மவர்கள் எல்லாம், அமெரிக்காவிலே மற்ற இடங்களுக்கு செல்லும் போது வரிசை முறைய கண்ணியமாக கடைபிடிப்பார்கள், இந்தியான்னு பேரைக் கேட்டதும் எல்லாத்தையும் காத்திலே போட்டு விட்டு சந்தைக்கடை போல பாவிப்பார்கள். 

நான் ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகன் என்பதாலே, அருகிலே இருந்த முதியோருக்கு ஒதுக்கப் பட்ட இடத்திலே அமர்ந்தேன், பக்கத்திலே தானியங்கி குளிர்பான இயந்திரம் இருந்தது, அதிலே வந்து காசைப் போட்டு கால் மணி நேரம் காத்திருந்த ஒருவர் இயந்திரம் வேலை செய்யவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டு சென்றார்.அடுத்தடுத்து வந்த நபர்கள் குளிர்பானம் எடுக்கும் முயற்சியிலே படுதோல்வி அடைந்து, இந்திய தூதரகம், அவங்க பாட்டி, தாத்தா எல்லாத்தையும் குறை சொல்லிட்டு போய்ட்டாங்க, நான் தாய் நாட்டிலே இல்லைனாலும், இப்படி வார்த்தைகளை கேட்டு கொதித்து, கொண்டு சென்ற தாள்களிலே ஒன்றை எடுத்து பேனாவை தேடும் முன்னே, அருகிலே இருந்த இன்னொரு நபர், இயந்திரம் வேலை செய்யவில்லை என்று தாளிலே எழுதி ஓட்டிவிட்டு சென்றார்.நோபல் பரிசு வாங்க வேண்டிய ஒரு கலைஞன் அமைதியா அவரைப் பார்த்து சிரித்தேன்,அவரு என்னைப் பார்த்து ஜெய் ஹிந்த் ன்னு சொல்ல, நான் ஜெய் டமில் ன்னு சொன்னேன்.பக்கத்திலே இருந்த மனவாடு ஜெய் தெலுங்கானான்னு சொன்னாரு.  

அடுத்த ரெண்டு நிமிசத்திலே ஒருத்தர், நீங்க சரியில்லை என்று தூதரக அதிகாரிகளை பற்றி குறை சொல்லிக்கொண்டு இருந்தார், அவரு போட்ட சத்தத்திலே ஒரு ௬ட்டம் ௬டி அவரோட பிரச்சனையைப் பேச ஆரம்பித்தார்கள், அவங்க அம்மாவோட கடவுச்சீட்டு காலாவதியாகி விட்டதாம், அதை விசாரிச்சப்ப அதிகாரிகள் சரியா விளக்கம் கொடுக்கலையாம் ரெம்ப வருத்தப் பட்டு புலம்பிக்கிட்டு இருந்தாரு, சரிங்க இப்பத்தான வந்துட்டீங்க, பெருமையா வாங்கிட்டு போங்கன்னு சமாதனம் செய்தார்கள், அவரு சொன்ன பதிலிலே, நான் அந்த இடத்தை விட்டே வந்து விட்டேன், அவங்க அம்மா விமான நிலையத்திலே இருப்பதாகவும்,அவங்க அம்மா பயணிக்க இருந்த விமானம் இன்னும் மூணு மணிநேரத்திலே கிளம்பனுமாம்,அவங்களோட கடவுச்சீட்டு காலாவதியானது விமானநிலையத்திலே தான் அவங்களுக்கு தெரியுமாம்.      

அமெரிக்கா வந்து ஆணி பிடுங்கி போணி பண்ணுறவங்க, கடவுசீட்டுக்கு கடவுளுக்கு கொடுக்கிற மரியாதை கொடுத்து, அது காலாவதி ஆக இன்னும் குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் இருக்கவேண்டும் என்று சரிபார்த்து, அமெரிக்க தூதரகம் செல்லும் முன்னே கோயில் கோயிலா ஏறி பூசை பண்ணி வந்தவங்க, இந்தியாவுக்கு போற மாதிரி இருந்தா இவ்வளவு அலட்சியம் எதற்கு வேண்டும், நம்மளோட அடிப்படை பொறுப்புகளை செய்யாத நிலையிலே இந்தியாவை குறை சொல்லி பயன் என்ன?

இப்படி கொலைவெறி யோசனையோட இருந்த நேரம், இன்னொருத்தர் அதிகாரியிடம் வாக்கு வாதம் பண்ணிக்கொண்டு இருந்தார், அவருக்கு ஒரு கையெழுத்து வேண்டுமாம், அதை உடனே முடித்துகொடுக்க வேண்டும் என்று சொன்னார், அலுவலக அதிகாரி அவரிடம், காலையிலே விண்ணப்பங்களை வாங்கிவிட்டு மாலையிலே தான் பட்டுவாடா செய்வோம் என்று பதில் சொன்னார். ஒரு கையெழுத்துக்கு நாலு மணி நேரம் காத்து இருக்கனுமா என்று சலிப்போடு சண்டையைப் போட்டார்.

 அமெரிக்க தூதரகமா இருந்தா இப்படி எல்லாம் அதிகாரிகளிடம் பேசுவோமா, அவரு வணக்கமே சொல்லலைனாலும்,அவருக்கு காலை,மாலை, இரவு என்று பல்வேறு வணக்கங்களை வைத்து விட்டு, அவங்க தாத்தா, பாட்டி, முப்பாட்டன் வரை எப்படி இருக்காங்கன்னு விசாரிப்போம், அவரு விண்ணப்பத்தை சரி பார்க்க பத்து மணி நேரம் ஆனாலும், இப்பத்தான் பால் குடிச்சி முடிச்ச பாப்பா மாதிரி அமைதியின் திருவுருவமா நிப்போம்.     

இழுத்துக்கிட்டு இருக்கிற மனுஷனுக்கு மருத்துவர் எழுதிகொடுத்த மருந்து சீட்டை மருந்து கடையிலே கொடுக்கும் போது,அவர் ரெம்ப சாந்தமா அரைமணி நேரம் கழித்து வாங்கன்னு சொல்லுவாரு, சாகுறதுக்கு முன்னாடியாவது கொடுங்கன்னு சொல்லிட்டு பொறுமையாய் காத்து இருப்போம், காத்திருப்பும், பொறுமையும் தலையாய கடமையா இருக்கிற இடத்திலே, இந்திய தூதரகம் என்ற உடனே  காலிலே வெந்நீர் விட்டது போல, பொறுமை இழந்து பொங்கி எழ வேண்டிய அவசியம் என்ன?
  
நினைச்சதுக்கெல்லாம் நாட்டை குறை சொல்லும் முன், நம்முடைய ஒரு சில குறைகளையும் களைந்தால் நமக்கும், நாட்டுக்கும் நல்லதுதானே, இவ்வளவு சொன்ன நான் அவங்க கேட்ட புகைப்பட அளவு இல்லாமால், நான் வேறு ஒரு அளவு புகைப்படம் கொடுத்தேன், இருந்தாலும் எனக்கு புது கடவுச்சீட்டு கொடுத்தார்கள், என்னோட விண்ணப்பத்தையும் நிராகரித்து  இருந்தால் நானும் இந்தியாவை திட்டி இருப்பேனோ?!!!