Sunday, February 10, 2013

பக்கத்து உறவு

உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க நினைக்கிற அளவுக்கு பிடிக்காதுன்னு சுமி சொன்னதை கேட்டு எனக்கு என்ன செய்யன்னு தெரியலை. வெளியே வந்து வானத்தை பார்த்தேன். காஞ்சி கருவாடான காவிரி ஆறு போல வெட்ட வெளிச்சமா இருந்தது.

என்னோட சோகத்துக்கு என்னால தான் அழமுடியலை. வானத்தை பார்த்தால் ’ஓடியே போய்டு, ஒன்னை கொன்னே புடுவேன்னு’ சொல்லுறமாதிரி இருந்தது. அக்கம் பக்கம் சுத்திப் பார்த்தேன். எல்லாரும் என்னைவிட வெட்டியா இருந்தாலும் கோழி பிரியாணி சாப்பிட்ட மாதிரி தெள்ள தெளிவா சிரிக்குறாங்க.. என் சோகத்துக்கு அழ யாருமே இல்லையான்னு சோகம் ரத்த குழாயை பிச்சிகிட்டு வருது. எதிர்த்த வீட்டை ஆர்வமா பார்த்தேன். பிறந்து ரெண்டு நாளான குழந்தையாவது அழுமான்னு.. சத்தமே இல்லை. என்னோட அலைபேசி மட்டும் சத்தம் போட்டது குறுஞ்செய்தியோட, செய்திய திறந்து பார்த்தேன்

"சோளிங்கநல்லூர் ஆலோப்ட்க்கு வரவும். அன்புடன் சோழன் "
.
தண்ணி வாங்கி குடிக்க வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சி குடிக்கிற இடமாச்சேன்னு வந்த செய்திய உறுதிப்படுத்த அழைத்துவிட்டு, அடுத்த அரை மணி நேரத்திலே குடிமகன்களின் உறைவிடத்திலே சோழனை தேடினேன். ஆறு கோழி தொடை சந்துகளை கையிலே வைத்துகொண்டு ஆறுகால் அலங்காரம் செய்து கொண்டு இருந்த்தவரின் கையிலே இருந்து ஒரு காலையும் மிச்சம் வைத்து இருந்த சரக்கையும் கண நேரத்திலே குடித்து விட்டு அமர்ந்தேன்.

எச்சிக்கையிலே காக்கா விரட்டுனா அதிலே இருக்கிற இருக்கிற ஒட்டி இருக்கிற இறைச்சி வீணா போய்டும்னு நக்கி சாப்பிடுற நீர் இங்க எப்படி


"நான் அமெரிக்கா போறேன் நசர்"

"சொல்லவே இல்லை"

"நீதான் சென்னையில்  ஈசியா பிக்கப் பண்ணி ஈ சி ஆர் ரோடு போக முடியலை, பெங்களூர்ல பார்க்ல புல்  மேய போற ஆடு, மாடு எல்லாம் உசார் பண்ணன்னு ஓடிபோய் ஒரு வருசமாச்சே  "

"போனதுக்கு நல்லா படிச்சிக்கிட்டேன்"

"கன்னடாவா"

"இல்ல..உள்ளுர்ல விலை போகாத துண்டு எங்கேயும் போகாதுன்னு"


உண்மையா இருந்தாலும் அடுத்த நாலு ரவுண்ட்க்கு அப்புறமாத்தான் ஒத்துகிட்டேன்.


வீட்டுக்கு வரும்போது கடைசியா சோழன் சொன்னது மட்டும் ஞாபகம் இருந்து

’உன் கூட இருந்த வரைக்கும் டீக்கடைக்கும்  ஆபீசுக்கும் நடந்து நடந்தே கால் தேஞ்சி போச்சி, இப்ப அந்த தேஞ்ச காலை கோழி கால் போட்டு முட்டு கொடுக்க எனக்கு ஒரு ஆள் இருக்குன்னு’ சொன்னபோது  என் துண்டு போனதும் இருந்த கவலையை விட அவருக்கு துண்டு கிடைச்ச கவலை நூறு மடங்கு அதிகமானது. ரெண்டுபேருமே எலிக்கு சிக்ஸ் பாக்  வச்சது மாதிரி இருப்போம்.அழகிலிலே!  அழகனுக்கும், பேரழகனுக்கும் உள்ள வித்தியாசம் தான்.

வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன்.


சுமி வந்து கதவை திறந்தாள். என் கேள்வியை அறிந்தது போல எனது பதிலுக்கு எதிர் பார்க்காமல்

"மழை வருகிறமாதிரி இருந்ததுன்னு அத்தை தங்கிட்டு போக சொல்லிட்டாங்க" ன்னு சொல்லிட்டு போய்ட்டா.

என்னசொல்லுறதுன்னு யோசிச்சி பேசுற அளவுக்கு நிதானம் இல்லை. மாடி ஏறின ஞாபகம் மட்டும்தான் இருக்கு. மட்டையான ஞாபகம் இல்லை. எவ்வளவு மட்டையானும் மனசிலே நிம்மதி இல்லைனா தூக்கம், தொலைந்து போன புளியங்குடி ஆறு மாதிரி தொலைந்து விடும் என்று பேரிலக்கவாதி நசர் பிசிர் சொன்னதைப் போல காலை ஐந்து மணிக்கெல்லாம் என்ன செய்வதுன்னு தெரியாமல் கொசுவத்தி சுத்த போறேன்.

நான் சென்னையிலே வேலைக்கு போய் ரெண்டு வருஷம் கழித்து வேலை தேடி ஊரிலே இருக்கு பக்கத்து உறவு பெண் சுமி எங்க வீட்டு வந்தாள்.  முறைக்கு முறைப்பெண்ணாக இருந்தாலும்,, நான் ஒரு நவநாகரிக இளைஞன், கைலி கட்டிக்கொண்டு வெளியே சென்றால் எந்த கட்டிட வேலைக்கு போற தம்பி? டவுசர் போட்டு போனால் குப்பை வண்டி இன்னும் எங்க தெருவுக்கு இன்னும் வரைலைன்னு சொல்லுற அளவுக்கு, அளவுக்கு அதிகமான அழகு இருந்ததினாலே தானே வடக்கூர் காரியை கல்யாணம் முடிச்சி இந்த சமுதாய ஓட்டைய  அடைக்கனும்னு கொலைவெறியிலே துண்டை வைத்து சுத்திகிட்டு அலைஞ்சேன்!

வீட்டிலே சுமி ரெம்ப நாள் இருந்தா எங்க ரெண்டு பேருக்கும் முடிச்சி போட்டுருவாங்கன்னு, அவளை சீக்கிரம் வேலைக்கு அனுப்பணுமுன்னு சுமிக்கு படிக்க நிறைய உதவி செய்வேன். நேர்முகத் தேர்வுக்கு பயிற்சி கொடுப்பேன். , நான் சொல்லுகிற விசயங்களை சொல்லி ஆச்சயரியபடுற அவளைப் பார்த்து

’ஏன் உன் முகத்தை கண்ணாடியிலே பார்த்த மாதிரி அதிர்ச்சியா பார்க்குறன்னு’ கேட்பேன். அப்ப அவ சிரிக்கும் போது கொஞ்சம் சப்பையா இருக்கும். இப்ப எனக்கு அவ சிரிக்கும் போது என் முகத்தை நான் கண்ணாடியிலே பார்த்த மாதிரி வலிக்கிறது. இந்த ஒரு வருட இடைவெளியிலே அவள் அழகு ஆலிவுட் நடிகை அளவுக்கு உயருமுன்னு எதிர்பார்க்கலை. பக்கத்திலே பக்கோடா இருக்கும்போது பல்லை கடிச்சிட்டு எலக்கியவாதியா  இருந்திட்டேன். எவனோ ஒருத்தன் பக்கோடாவை ஆட்டையப் போட்டுவிட்டான். இப்ப பல் காட்டியும் பக்கடா கொடுக்க ஆள் இல்லை.


காலையிலே அம்மாவின் வற்புறுத்தலின் பேரிலே சுமியை பேருந்து நிறுத்தத்துக்கு கூட்டி சென்றேன். ரெண்டு பேரும் பேசலை. கொஞ்ச நேரம் கழித்து அவள்

"என் மேல கோபம் இல்லையே "

"இருக்குன்னு சொன்னா, ரோஜா பூவையும், மஞ்ச கயிறையும் வாங்கி இப்பவே தாலி கட்டுங்கன்னு சொல்லுவியோ"

"சொல்லுவேன், ஆனா உங்க கிட்ட இல்ல"

"ம்ம்ம்.. புரியுது"

"உங்க அம்மாகிட்ட சொல்லுங்க ஓவரா கனவு கானுறாங்க"

எனக்கும் சேர்த்துச் சொன்னமாதிரியே இருந்தது.சுமியை பேருந்திலே அனுப்பி விட்டு சோழனுக்கு செய்தி அனுப்பினேன். பாரிமுனையிலே கருவாட்டு கடையிலே மீன் பிரியாணி சாப்பிட போக இருப்பதாக இருந்த திட்டத்தை மாற்றி வளசரவாகத்திலே நண்டு பிரியாணி நல்லா இருக்கும் என்று சொன்னேன். அடுத்த ஐந்து நிமிடத்திலே வீட்டுக்கு வந்து விட்டார்.

நண்டு பிரியாணின்னு  சொல்லி ஏமாத்தினாலும், நாலுகாடை பிரை நாலு குவாட்டரும் வாங்கி கொடுத்து பசியை அடக்கினேன். இருவரும் கடையிலே போட்ட அலப்பறையிலே கடைக்காரர் எங்க புகைப்படத்தை எடுத்து வைத்து கொண்டு, இனிமேல இவனுக ரெண்டு பேரும் வந்தா உள்ளே விடவே கூடாதுன்னு சொல்லிடாரு. அடுத்த ரெண்டு வாரத்திலே சோழன் அமெரிக்கா சென்று விட்டார். விமான நிலையத்திலே எனக்கு அவரோட நண்பியை அறிமுகம் செய்துவைத்தார். பதினாறு பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு பெருசு மாதிரி வாழ்த்து சொல்லிவிட்டு வந்தேன். அடுத்த ரெண்டுமாததிலே அம்மா சுமியை திட்டி கொண்டுருந்தாள்.விசாரித்த போது அவளுக்கு என்னை கல்யாணம் பண்ண பிடிக்கலைன்னு சொல்லிவிட்டாள் என தெரிந்து கொண்டேன். துண்டை என் சங்கில் போட்டு இறக்கிய வலி.


நிராகரிப்பின் வலிக்கு
நிரந்தர நித்திரை
மருந்து அல்ல

என்று ஒரு வரிகவிஞர் சொன்னது ஞாபகம் வந்தது. அடுத்த ஆறுமாதத்திலே சுமி அவன் காதலனை திருட்டுத் திருமணம் செய்து கொண்டாள். தற்போது கணவருடன் அமெரிக்காவிலே வசித்து வருகிறாள். எப்பவாவது மின்னஞ்சல் வரும் சுமியிடம் இருந்து, அவள் முடிக்கும் முன் உங்க முகத்தை கண்ணாடியிலே பார்த்த மாதிரி அதிர்ச்சி அடையாதீங்க என்று சொல்லுவா... மன்னிக்கணும் சொல்லுவாங்க.

சோழன் இப்ப குடுகுடுப்பையாகி இருக்காரு,  வெள்ளையம்மாவிடம் ஓசி முத்தம் பெறுவது எப்படின்னு கிளப்ல சேர்ந்து அவரு காதலை  அவரு அமெரிக்கா போன ஒரு வருசத்திலே கள்ளு பானைய போல உடைத்துவிட்டார். எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது. இன்னும் இருக்கிறது. சாதி, மதங்களை விட்டு கட்டுடைக்க நாங்க தயாரா இருந்தாலும் எங்களுக்கு கால் கட்டு போட இன்னும் யாருமே தயாரா இல்லை.

அளவுக்கு அதிகமா அழகா இருந்தா இப்படியும் பிரச்சனைகள் வரலாம் என்பதற்கு நாங்கள் ஒரு உதாரணம் என்று சொல்லி கொண்டு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றிகூறி விடை பெறுகிறேன். நன்றி! வணக்கம்.


Monday, October 24, 2011

குடுகுடுப்பை என்ற சத்குரு

ஒரத்தநாட்டு வாய்க்காலில் துண்டை போட்டு மீன் பிடித்து சுட்டு தின்னுபுட்டு, உத்திராபதியோடு எருவமாடு மேய்ச்சிகிட்டு,கணினியிலே எருவமாடு படம் வரைய படித்ததாக ஒரு சர்டிஃபிகேட்டும் வச்சிருப்பாரு.பெயிண்டும், பைப்பும் விற்கும் ஹார்ட்வேர் கடைக்கு சிவி அனுப்பி நோகாம நொங்கு திங்க வேலையா குடுங்கன்னு சாஃப்ட்வேர் வேலை தேடிய மகான். பறப்பன ஊர்வன நடப்பன எல்லாம் இந்திரா அம்மையார் இளைய மருமக மேனகா காந்திக்கு மொட்டை கடிதாசி எழுதி இந்தாளு இங்க இருந்தா எங்க இனத்துக்கு பாதுகாப்பு இல்லைன்னு ஒப்பாரி வச்சதாலே அமெரிக்காவிலே தெலுங்கு படிக்க நாடு கடத்தப்பட்டவர்.

ஊரில் ஒரு எருவமாட்டுக் கன்னுக்குட்டியை ஆட்டையப் போட்டு வரும்போது எதிரில் ஆட்டயப்போட்ட மாட்டுக்கு சொந்தக்காரன் வந்ததால் போர்த்துக் கொண்டிருந்த போர்வையை அதன் மேல் போர்த்தி குடுகுடுப்பைக்காரன் போல் நடித்து எஸ்ஸானதை மறைத்து எங்கேயோ இவர் போட்ட பின்னூட்டத்தை குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் உள்ளது என்று நெஞ்சை நக்கியதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டதாக புருடா விடுபவர்.

பாயசத்தில் ஏலக்காய் போடுவது பார்ப்பனீயம், அதனால் சேமியா பாயசத்தில் சென்னாக்குன்னி பவுடர் போட வேண்டும் என்று அடம் பிடித்து தங்கமணி கடுப்பாகி சட்டுவத்தால் போடு போடு என்று போட்ட பிறகு அடங்கினதை இவர் மறைத்தாலும் அமெரிக்க உளவுத் துறையில் பதிவாகி இருக்கிறது. ரண்டு டாலர் விலை குறைவு என்பதற்காக சிக்கன் புளி சோறு வாங்கி பிரியாணி என்று ஃப்ரீசரில் வைத்துத் தின்றதை மறந்து தாய்த் தமிழ்நாட்டின் பிரியாணியை மஞ்சா சோறு என்று நக்கலடித்தவர்.

நடிகைக்கு நாய் பேர ஊழலில் ஆட்டை போட்டதை தேம்ஸ் நரி அதுசரி கண்டு பிடித்து விட்டதால் சட்டத்துறைத்தலைவர் என்ற டம்மி போஸ்ட் கொடுத்து சரிக்கட்டப் பார்த்து முடியாமல் கூட்டாக பங்கு போட்டுக் கொண்டவர். அந்தப் பணத்தை இருவரும் சுவர்த் தெருவில் முதலீடு செய்வதும் வெள்ளிக் கிழமையானால் ஜட்டியோடு நிக்கேன் என்று இவரும், நான் கோவணமும் போய் கையால் பொத்திக் கொண்டு நிக்கேன் என்று அவரும் பஸ் விட்டாலும், திங்கள் கிழமை இருக்கும் காசை திரும்பவும் சுவர்த் தெருவில் முதலீடு செய்வார்கள். திங்கள் ஜட்டி, செவ்வாய் பனியன், புதன் கால் சட்டை, வியாழன் மேல் சட்டை, வெள்ளி டை என்று முழு உடை அணிவதும் மாலையில் சுவர்வீதிக்காரன் உருவிக் கொண்டு அனுப்புவதும் வாரா வாரம் நடக்கும் காமெடி.

சொந்தமாக தோசை சுடத் தெரியாமல் பெண் கவிஞர்கள் யாராவது ஒரு தோசை சுட்டால் அசந்த சமயம் ஆட்டையப் போட்டு ஒரு தோசை சுட்டு திருப்பிப் போட்டு எதிர்த்தோசை என்று விளம்பரம் போடுவார். கல்லூரி ஆஸ்டலிலும், மேன்சனிலும் தாழ்ப்பாள் இல்லாத கழிப்பறையில் பாதுகாப்புக்காக விசிலடித்துப் பழகியதை கவினை மிரட்ட பயன்படுத்தி என்னமோ கதிரி கோபால் நாத்திடம் பயிற்சி பெற்ற வித்துவான்போல் பீலா விட்டு வீடியோ எடுத்து பஸ்ஸில் மிரட்டுகிறார்.

ரௌத்திரம் பழகும் கலகலப்ரியாவே இந்த வீடியோவைப் பார்த்து பாதி நாட்கள் தூக்கத்தில் அலறி பாரதி படத்தை தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்குவதாக ஸ்விஸ் உளவுத்துறை கண்டனம் தெரிவித்திருக்கிறது.

எங்காவது மதச் சண்டை நடந்தால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கையரிப்பு தாளாமல் ஒரு கமெண்ட் போட்டு விட்டு இரவெல்லாம் தூங்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பல்லு கூட விளக்காமல் வேலைக்குப் போய் ட்ராஃபிக்கில் தூங்கி ஆக்ஸிடண்ட் ஆக்கி பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்று பதிவு போடுவார்.

சமீபகாலமாக திமுக தீவிரவாதி அபிஅப்பா, அதிமுக அராஜகவாதி உ.த. அண்ணன், நாம் எந்த கட்சிக்கு ஆதரவு என்று அவ்வப்போது தங்கபாலுவுக்கு ஃபோன் போட்டு உசாராக அதன் படி சப்போர்ட் செய்யும் சஞ்சய்காந்தி, மரம்வெட்டி, தண்ணிதொட்டி, சிவப்புகட்டி கட்சி எல்லாம் குரவளையைக் கடித்துக் கொண்டு குத்துயிரும் குலை உயிருமாய் அடித்துக் கொண்டிருக்கும்போது நம்ம தலைவர் அங்கே வடிவேலு மாதிரி போவார். ‘எச்சூஸ் மீ! வைகோ ரெம்ப நல்லவர். நீங்களெல்லாம் ஆதரவு கொடுத்தால் அவர்தான் அடுத்த பிரதமர்’ என்று ஒரு பிட்டு போடுவார். ஸ்டன் பாமில் அடிபட்டவர்கள் போல் சித்தம் தடுமாறி அபிஅப்பா ரத்தத்தின் ரத்தமே என்றும் உ.த. அண்ணன் உடன் பிறப்பே என்றும் சஞ்சய் எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் இளங்கோவனுக்கு நம்பர் மாத்தி அடிப்பதும் என்று தெறித்து ஓடும்போது கிக்கிக்கீ என்று சிரிப்பார்.

மனவாடு மொழி கற்றுக் கொள்கிறேன் என்று அவர்கள் மொழியைக் கொல்லுவதும், தெலுங்குப்படம் பார்ப்பதும் என்று இவர் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் தெலுங்கானாவுக்கு கடத்திவிடுவோம் என்று மிரட்டியதின் பேரில் இப்போது அய்யா அடங்கி இருப்பதை சி.ஐ.ஏ. கண்டு பிடித்துள்ளது.மீள் பதிவு, மீள் மீள் பதிவு, மீள் மீள் மீள் பதிவுன்னு மீள் பதிவு மட்டுமே 200+ போட்டு அசத்திய ஒரே ஆள் குடுகுடுப்பை தான், குறிப்பா டியூஷன் டீச்சர் விமர்சனத்தை 49 தடவை மீள்பதிவிட்டவர்

வீட்டிலே சட்டியிலே சோறு இல்லை என்பதற்காக சட்டிகுரு எழுத்துப்பிழையாக சத்குருவாக மாறிவிட்டது.என்ன இருந்தாலும் பதிவுலகில் என் மூத்தவர். இவரைப் பார்த்துதான் நான் பிழையோடு எழுதக் கற்றுக் கொண்டேன் என்று நன்றியுடன் பெருமை கூர்ந்து வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.



வசனம் உதவி :பாலா அண்ணன் 


Sunday, August 14, 2011

சுதந்திர தின சிறப்பு செய்தி


நண்பர்களே இந்த இனிய இரவிலே பொதுஜன்மான நான் பொதுவான அறிக்கைய ஓசியிலே கூகிள் ஆண்டவர் வழியாக நள்ளிரவிலே சொல்லகடமைப் பட்டுள்ளேன். இரவு செய்திக்கு பின்னால் இந்தியா இரவிலே சுதந்திரம் அடைந்தது என்பதை தவிர வேறு ஏதும் இல்லை. சுதந்திரம் என்பது சுசியம் போல சாப்பிட சாப்பிட இனிப்பாக இருக்கும் என்று சுசியம் பெருமாள் கூறியுள்ளார். இந்த பொன்னான நாளிலே தலைவர்கள் மட்டுமே யாரோ எழுதிகொடுத்ததை மனப்பாடம் பண்ணாமல் வரி வரியாக படித்து அறிக்கை விட முடியும் என்ற ௬ற்றை பொய்யாக்கவே இந்த சொந்த சரக்கு அறிக்கை.

இலக்கியம் கெட்ட கேட்டுக்கு படிப்பா, இந்தியா கெட்ட கேட்டுக்கு சுதந்திரமா என்று பக்கத்து தெரு பாயா விற்கும் ஆயா கேட்டுகொண்டிருந்தாள். தொலைகாட்சிகளிலே சினிமா நடிகைகளின் கன்னிபேட்டிக்கும், கவர்ச்சி உடைக்கும் இடையிலே உலவி வருகிறது இந்த சுதந்திரம்.நானும் இத்தகைய பேட்டிகளை கண்ணை மூடாமல் பார்த்து இருக்கேன்.இப்ப ஆலமரத்துக்கு கீழே சொம்பை வச்சி நாட்டாமை பண்ணுவதாலே இந்த விளிம்பு நிலை எதிப்பை கடைநிலையிலே இருந்து காட்டவில்லை என்பதை சொல்லிகொள்கிறேன். வில்லங்கம் வரும்போது வில்லனாக இருக்க வேண்டும், சத்தம் இல்லாதபோது சூப் சாப்பிட வேண்டும் என்ற ரஷ்ய பழமொழிக்கு ஏற்ப நாமும் நடந்தால் நாடும் வீடும் எருக்கம் செடிபோல தண்ணி ஊத்தாமலே செழித்து வளரும்.

அறிக்கை விடும் ௬ட்டமும்,அதைப் படிக்கும் ௬ட்டமும் அதிகம் இருப்பதினாலே வெத்திலை போடும் வாயும் அறிக்கைவிடுகிறது இந்தியாவுக்கு வாஸ்து சரீல்லை என்று, வீட்டுக்கு வாஸ்து சரீல்லை என்றால் இடித்துகட்டலாம்,நாட்டுக்கே வாஸ்து சரில்லை என்றால் இடித்தா கட்டமுடியும் என்று பகுத்தறிவு பகலவன் பல்குடிக்கி கேட்கிறார்.சுதந்திரம் என்பது சுதந்திரமாக போகவும் வரவும் வேண்டும். சுதந்திர தினம் என்று குண்டு துளைக்காத மேடையைப் போட்டு கம்பிகளுக்கு நடுவிலே இருந்து அச்சா அச்ச்சாசோ என்று பேசுவது சிறை அதிகாரி கைதிகளிடம் பேசுவது போல் இல்லை, ஒரு கைதியின் பேச்சை கேட்க நாட்டு மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது போல இருக்கிறது.

எவ்வளவு நாளைக்குதான் இந்த புளிப்பு மிட்டாயை வாங்கி சாப்பிட சீருடையில் செல்லவேண்டுமென மாணவரணி கேட்கிறது, மாணவரணியாக இருந்தாலும் மகளிர் அணியாக இருந்தாலும் பதில் ரெண்டுதான்தான் பல் இருக்கவன் பக்கடா திங்கான் மற்றும் நோகாம நொங்கு திங்க முடியாது.

குத்தூசி முதல் கோணிப்பை வரை ஊழல்களை வைத்துகொண்டு சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடையிலே இருந்து கொண்டு பாரத் மாதாவுக்கு ஜெ  என்று லா லா பாடிக்கொண்டு இருந்தால் லாலி பாப் ௬ட கிடைக்காது.சுதந்திர தேவி சிலையை தற்காலிகமாக மூடிவிட்டதைப் போல சுதந்திரத்தையும் தற்காலிகமாக மூடிவிட்டு இன்றைய தினத்திலே ஆகும் செலவை ஊழலிலே முதலீடு செய்தால் நாடு இன்னும் பத்துவருசத்திலே வல்லரசாகும் என்பதை தெரிவித்து கொண்டு வாய்பளித்த அனைவருக்கும் நன்றி ௬றி விடைபெறுகிறேன்.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு தேசியார்வம் பொங்கிவழிந்தால் அருகிலே உள்ள கொடி ஏற்றும் மேடையை அணுகவும்.  


Friday, July 22, 2011

வாசகர் கடிதம்

அன்புள்ள மூத்த பதிவர் நசரேயன் அவர்களுக்கு,

வணக்கம். வெகுநாட்களாக உங்களுக்கு மடல் வரைய வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும், மூத்த பதிவராகிய தங்களைப் பாராட்டும் தகுதியோ வயதோ எனக்கில்லை என்பதால் தயக்கமாகவே இருந்தது. பல நாட்கள் மனப் போராட்டத்துக்குப் பின், தங்களின் கொலவெறி இடுகையைப் படித்தவுடன் இனிமேலும் பாராட்டாமல் இருந்தால் இந்த மெய்நிகர் உலகம் என்னை மன்னிக்காது என்பதால் துணிந்து எழுதுகிறேன்.

நான் வலையுலகத்துக்கு அடி எடுத்து வைத்தவுடன் என் கண்ணில் தென்பட்டது உங்கள் வலைத்தளம் ‘என் கனவில் தென்பட்டது’. அந்தச் சிலிர்ப்பிலே படிக்கத்துவங்கியவுடன் கண்ணில் பட்டது, ’தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்’ என்ற உங்கள் பொன்மொழி. இது கல்வெட்டிலே செதுக்கி புளியங்குடி வரவேற்கிறது என்ற போர்டுக்கு அருகிலே வைக்க வேண்டியது எனக் கருதுகிறேன். உங்கள் இடுகைகளைப் படிக்க ஆரம்பித்த பிறகே, படிக்கும்போது பிழையாக எழுதுவதால், உனக்கு கணக்கன் உத்தியோகம் கூட கிடைக்காது, எருவமாடு மேய்க்கப்போ என்று என் தன்னம்பிக்கையை குலைப்பதை வகுப்புதோறும் நிறைவேற்றிய ஆசிரியர்களின் கடமையால் தாழ்வு மனப்பான்மையோடு இருந்துவந்தேன். எங்கே கையெழுத்துப் போட்டால் பிழை வந்துவிடுமோ என்று, கைநாட்டு வைத்துவந்தேன். உங்கள் இடுகைகள் தந்த ஊக்கத்தால் இன்று பிழையின்றி வானம்பாடிகள் என்று கையெழுத்துப் போட முடிகிறது. இதற்கான பெருமை முழுதும் உங்களையே சாரும். இதற்காக நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

நானும் பல வலைத்தளங்களைப் படித்து வருகிறேன். ஆனாலும், இந்தச் சமூகத்தில் காதல் தோல்வியால் இளைஞர்கள் தாடிவைத்துக் கொண்டு தண்ணி அடித்துக் கொண்டு நாசமாய்ப் போவதை சகிக்காமல், அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டி, காதல் நிலையானதல்ல, துண்டே நிலையானது என்ற உயர்ந்த தத்துவத்தை போதித்து இன்று பல இளைஞர்களை துண்டும் கையுமாக அலையவிட்டிருப்பதிலே உங்களின் சமூக அக்கரையும், இளைஞர்கள்பால் உங்கள் நம்பிக்கையையும் எந்த ஒரு அரசியல் கட்சிக் கூட செய்ததில்லை.

அதே போல், அமெரிக்காவில் தாங்கள் பணிபுரிந்த காலத்தில், நொங்கு தின்னும் கலாச்சாரத்துக்கு எதிராக பொங்கி, நகைச்சுவையோடு அதனை விமரிசததை இந்தத் தமிழ்கூறும் நல்லுலகம் கண்டு கொள்ளாமல் விட்டதை நினைக்கும்போது மனம் கனத்துப் போகிறது. கருவண்டு, எருவமாடு போன்ற சொற்களை சொல்லுக்கடங்கா மன உறுதியுடன் எதிர்கொண்டு, துரைசானிகளுக்கு துண்டு வீசி சமத்துவத்தை நிலை நாட்டி, ‘சமச்சீர் துண்டு’ப் புரட்சி செய்ததை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை.

படிப்படியாக பதிவுலகம் என்பது மொய் சார்ந்த மெய்யுலகம் என்பதையும் உங்கள் மூலம்தான் கற்றுக் கொண்டேன். ஒரு நாளில் எத்தனை இடுகைகளைப் படித்துப் பின்னூட்டமிடுகிறார் என்ற வியப்பு, உ.த அண்ணனின் ஒன்னரை குயர் இடுகைக்கு பதிவிட்ட ஒரு நிமிடத்தில் ‘ம்ம்’ என்ற உங்கள் மறு மொழி பார்த்ததும்தான் பதிவுலகில் யார் பதிவெழுதினாலும், எந்திரன் ரோபோ போல் ஒரே பார்வையில் ஸ்கேன் செய்யும் திறனிருப்பதை அறிய முடிந்தது. தங்களைப் பின்பற்றி நானும் பல இடங்களில் மொய் விருந்து வைக்கக் கற்றுக் கொண்டேன்.

இப்படி இருக்கும்போதே கூகிள் பஸ்ஸில் தங்களின் ஒன்னு கீழ ஒன்னு போட்டிருக்கேன், என்னான்னு சொல்ல வேண்டியதில்லை என்ற தன்னடக்க அறிவிப்புடன் வந்தவைகளைப் படித்து கிலியாகி, கவுஜ என்ற ஒன்று தமிழ் இலக்கியத்தில் இருப்பதை அறிந்தேன். அந்த மகிழ்ச்சியில் என் பள்ளி ஆசிரியர்களிடம் கவுஜ என்று ஒன்று இருப்பதைச் சொல்லிக் கொடுக்காமல் விட்டதற்காக சண்டை போடப் போய், அவர்கள் கீழ்ப்பாக்கத்துக்கு பிடித்துக் கொடுத்த போது, அந்த மருத்துவரிடம் உங்கள் கவுஜ ஒன்றைச் சொன்ன உடன் அவரே போய் ஒரு செல்லில் அடைந்து கொண்டு நான் இருக்கும் வரை வெளியே வரமாட்டேன் என்று ஒளிந்து கொண்டதையும், பிறகு மருத்துவத்துறை செயலாளர், அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்கி, வெளிநடப்புச் செய்தேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. நேற்று, தற்கொலையைத் தடுக்க ஒரு சேவை மன்றம் அவசியம் என்ற உங்கள் இடுகையை வாசித்தவுடன் புல்லரித்துப் போயிற்று. அதிலும் கடைசியாக நீங்கள் சொன்ன புதிர் இராத்தூக்கம் இல்லாமல் அடித்துவிட்டது. நமது மாண்புமிகு முதல்வர் உடனடியாக இந்தத் திட்டம் செயலாக்கப்பட வேண்டும் என்றும் உலக அளவில் இது குறித்தான ஆலோசனை மையம் அமைத்து ஆலோசனை அளிப்பதற்கு வழி செய்யவேண்டுமென்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதாக அறிந்தேன். இந்தத் துறைக்கு உங்களைத் தலைவராக அழைப்பார்கள் என்று நம்புகிறேன்.

உங்களின் சேவையைப் பாராட்டி, ஜனாதிபதி அவர்களும், ஒபாமா அவர்களும் ‘நசுங்குன சொம்பு நசரேயன்’ என்ற விருது அளிக்கப் போவதாகவும், அந்த விழாவுக்கான பாடலை, கவிஞர். பா.ரா. எழுதி, ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவரப்போவதை தாங்கள் ஏன் சொல்லவில்லை? எப்படியோ, தாங்கள் குற்றாலம் போகவிருப்பதாக அறிகிறேன். ஒரு பதிவர் கூட்டம் ஏற்பாடு செய்து, உங்கள் தோட்டத்திலிருந்து எலுமிச்சம்பழம் இலவசமாகக் கொடுத்து குளிக்கவைத்தால், உங்கள் பதிவின் பாதிப்பு சற்று மட்டுப்படலாம்  என்ற அவாவோடு இக்கடிதத்தை முடிக்கிறேன்.

அன்புள்ள
வானம்பாடிகள்





பொறுப்பு அறிவித்தல்:

இதெல்லாம் ஒரு பொழப்பு போன்ற டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் மட்டறுக்கப்பட்டது


Thursday, July 21, 2011

தற்கொலை தடுப்பு சேவை மையம்


தற்கொலை தடுப்பு வாசகர் சேவைக்கு அழைத்து இருக்கும் வாடிக்கையாளரே நீங்க ஏற்கனவே டிக் 20, இல்ல மூட்டை பூச்சி மருந்து குடித்து இருந்தால் உடனே சவ ஊர்தி வண்டிக்கும், மருத்துவ மனை ஆம்புலன்ஸ் க்கும் அழையுங்க,நீங்க மண்டையப் போடாம இருந்தா திரும்பி வந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் எண் ரெண்டை அழுத்துங்க.

ரெண்டை அழுத்துனத்துக்கு நன்றி, உங்களுக்கும், தற்கொலை தடுப்பு சேவை அதிகாரிக்கும் இடையே உரையாடல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படும்,காரணம் எங்க ௬ட பேசிய பிறகு நீங்க எங்கையாவது போய் மண்டையபோட்டா, உங்களுக்கு சங்கு ஊத நாங்கள் காரணம் இல்லை என்று எங்களை தற்பாதுகாத்துகொள்ள இந்த உரையாடலை சேமித்து வைக்கிறோம் என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன், உங்கள் பெயரை உச்சரித்து எங்களின் விரிவான சேவை பிரிவுகளுக்கு செல்லலாம். தயவு செய்து உங்கள் பெயரி உச்சரிக்கவும்

"என் பெயர் ......."

மன்னிக்கணும் உங்கள் பெயர் புரியவில்லை, மீண்டும் ஒரு முறை ௬றவும், "என் பெயர் ..." , மீண்டும் மன்னிப்பு கேட்கிறோம், உங்க பேரு புரியலை, மறுபடி ஒரு தடவை சொல்லுங்க.. என் பெயர் ... இல்ல புரியலை.. என் பேரு .. புரியவே இல்ல, அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு பொறுமை இழந்த வாசகர்  

உங்க பெயர் இன்னும் புரியலை என்று தானியங்கி குரல் கேட்ட கேள்விக்கு

"அட எளவெடுத்த சனியனே"

நன்றி "அட எளவெடுத்த சனியனே" உங்கள் பெயர் நல்ல பெயர், தயவு செய்து எங்களின் விரிவான சேவைகளை ௬ர்ந்து கேளுங்கள், உங்களுக்கு வேலை வெட்டியே இல்ல, எப்போதுமே சும்மாதான் இருப்பீங்கன்னா எண் ஒன்றை அழுத்துங்கள், வேலைப்பணி அதிகமா இருக்கு, அதனாலே மன அழுத்தம் அதிகமா இருந்தா ரெண்டை அழுத்துங்கள். யோசிக்க எதுவும் இல்ல, அதனாலே உங்களுக்கு தற்கொலை பண்ணுகிற யோசனை இருந்தா எண் மூன்றை அழுத்துங்கள். காதல் தோல்வி இல்ல காதல்கள் தோல்வி இருந்தா எண் ஐந்தை அழுத்துங்கள், கணவன் மனைவி பிரச்சனை, கள்ளக்காதல் பிரச்சனயா இருந்தா எண் எழு, இப்ப சொன்ன எல்லா பிரச்சனையும் இருந்தா 
பூஜ்ஜியம், பிரச்னை எதுவுமே இல்லைனா, தொலைபேசிய கீழே வச்சிட்டு நாங்க அணிப்பி வைக்கிற சேவை கட்டண பணத்தை பார்த்து மாரடைப்பு வராமல் இருந்தா நலம்.

     
 உங்களுக்கு எல்லா பிரச்சனையும் இருக்கிறதா சொல்லி இருக்குகீங்க அட எளவெடுத்த சனியனே, உங்க பிரச்சனையின் வீரியம் அறிந்து உங்களுக்கு சேவை செய்ய ஒரு குழு இருக்கிறது உங்களுடன் உரையாட, அதனாலே நீங்க மனம் விட்டு தாராளமா பேசுங்க. சொல்லுங்க திரு அட எளவெடுத்த சனியன்.

"எப்படி சொல்லன்னு தெரியாம துக்கம் தொண்டைய கவ்வி பிடிக்குது"

"ஐயா கவ்வின கழுதையை எறக்கி வைக்கத்தானே நாங்க இருக்கோம்,நீங்க கவலைய மறந்து அள்ளிப்போடுங்க"

"வாழ்க்கையிலே மண் விழுந்துபோச்சி"

"சோத்திலே விழுந்த மண்ணுக்கும், மனசிலே இருக்கிற புண்ணுக்கும் ஒரே வழிதான், ரெண்டையும் எடுத்து வெளியே போட்டுட்டு பொழைப்பை பார்க்கணும்"

"குத்துவசனம் கேட்க நல்லா இருக்கு,ஆனா நடைமுறைபடுத்த முடியலை"

"வசனத்தையே வாழ்க்கையா பாருங்க, வழி தான்னாலே பிறக்கும்."

"நீங்க எப்போதுமே இப்படி வெட்டியாத்தான் பேசுவீங்களா?"

"ஐயா நீங்க இப்பவரைக்கும் உங்க பிரச்சனை என்னன்னு சொல்லவே இல்ல"

"சொல்லுறேன்.. இவ்வளவு நாளா என் உள்ளத்திலே சுவிஸ் வங்கியிலே ஒளித்து வைத்து இருந்த கருப்பு கள்ளப்பணம் மாதிரி மறைத்து வைத்த எல்லாத்தையும் சொல்லுறேன்"

அரைமணி நேர கொசுவத்திக்கு அப்புறமா மிஸ்டர் அட எளவெடுத்த சனியன் உங்க பிரச்சனைய எப்படி தீர்க்கிறதுன்னு யோசிக்கிறோம். உங்க கோரிக்கைய எப்படி நிறைவேத்துவதுன்னு,ஆனா நீங்க எதிர்பார்க்கிற விஷயம் நடக்குமான்னு தெரியலையே

"வாசகர் சேவை,எல்லாத்தையும் காப்பாத்துவோமுன்னு சொன்னீங்க,என்னைய காப்பாத்துங்க"

சரி எங்க மின் அஞ்சல் முகவரிக்கு உங்க புகைப்படம் அணிப்பு வையுங்க, தசவல் சொல்லுறோம்.அடுத்த நாள் காலையிலே தற்கொலை வாசகர் சேவையிலே இருந்த மணமாகாத பெண்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

பின் குறிப்பு :

கொசுவத்தியிலே நடந்த சம்பவம் என்னன்னு சொல்ல நான் கடைமைபடலை இருந்தாலும் சொல்லவேண்டியது என்னோட கடமை,அதாகபட்டதவது தற்கொலை வாசகர் சேவையை அழைத்த அந்த மாமனிதன், தங்களின் சேவையிலே உள்ள அனைத்து பிரச்சனைகளும் எதிர் காலத்திலேயே எனக்கு வர வாய்ப்பு இருப்பதாலே,அடிக்கடி உங்கள் சேவைக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, உங்கள் தற்கொலை தடுப்பு சேவையிலே வேலை செய்யுற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்னோட வாழ்கையிலே வெளிச்சம் கிடைக்கும்,அதனாலே உங்கள் சேவையிலே இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டார்.சேவை அதிகாரிகளும் அந்த மாமனிதனின் புகைப்படத்தை அனுப்ப சொல்ல, அதை பார்த்த அனைத்து பெண்களும், இப்படி ஒரு அழகான வாலிபருக்கு எதிர் காலத்திலேயே பிரச்சனையா என்று ஏங்கி தற்கொலை செய்துகொண்டனர்.அந்த மாமனிதர் யாரென்றும்,அவர் புகைப்படம் எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை     


Monday, July 18, 2011

ரயில் பயணம்

சென்னை மத்திய ரயில் நிலையத்திலே இருந்து பெங்களூர் செல்லும் லால்பாக் விரைவு வண்டியைப் பிடிக்க வேண்டிய நான், காலையிலே இருந்து பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தேன், ரெண்டு நாளுக்கு தேவையான துணிகளை பையிலே அள்ளி வைத்து விட்டு ரயில் பயணச்சீட்டையும் கவனமாக அணிந்து இருந்த சட்டையிலே வைத்து விட்டு எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களைச் சரிபார்த்தேன்.

காலைச் சாப்பாடு மறந்து போனது. மதியம் வந்த போது பசி தெரிந்தாலும் கிளம்பும் அவரசத்திலே சாப்பாடு தவறி விட்டது. தாம்பரத்திலே இருந்து சரியாக ரெண்டு மணிக்கு புறநகர் ரயிலைப் பிடித்தேன்.    

பூங்கா ரயில் நிலையத்திலே இறங்கி வேகமாக நடந்து சென்னை மத்திய ரயில் நிலையம் வந்தடைய மூன்று பத்து, நிலையத்தின் உள்ளே நுழைந்ததும் பத்தாவது நடை மேடையிலே ரயில் நிற்பதாக அறிவிப்புப் பலகையைப் பார்த்தேன். ரயிலை அடைந்து என்னுடைய இருக்கை இருக்கும் பெட்டியத் தேடினேன் ஐந்து நிமிட தேடலுக்குப்  பின்  இடத்தை  கண்டு பிடித்தேன். இருக்கையிலே ஏறி அமர்ந்துவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தேன். 

இதை தொடர்கதையா எழுதி இருந்தா ரெண்டு முட்டை கண் ஆம்லேட் போடமா வெறிக்க வெறிக்க பார்த்தது, இல்ல வெளிய நான் கண்ட காட்சி நடு மண்டையிலே இல்லாதா மூளை அதிரும் படியாக என்னை உலுக்கியதுன்னு சொல்லிட்டு தொடரும் போடுவாங்க. நானும் தொடருமுன்னு போட்டு உங்களோட கொலைவெறி பொறுமையா சோதிக்கிற அளவுக்கு 
கொடுமைக்காரன் இல்ல. 

வெளியே வேடிக்கைப் பார்த்துகொண்டு இருந்த நான் சாப்பிட எதாவது வாங்க கிளம்பலாம் என்று எண்ணினாலும் வண்டி புறப்பட இன்னும் ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது என்னால் போகமுடியலை, அதானலே வெளியே வேடிக்கை பார்தேன். வண்டி புறப்படும் நேரம் வந்தது, ஆனால் ரயில் கிளம்பலை, ஐந்து, பத்து நிமிடம் ஆச்சி., கடைசியா அரை மணி நேரம் கழித்து கிளம்பியது. நான் இந்திய ரயிலில் பயணம் செய்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்த இடைப்பட்ட அரைமணி நேரத்திலும் என்னாலே சாப்பாடு வாங்க முடியலை,வண்டி எந்நேரம் வேண்டுமானாலும் கிளம்பலாம் என்று வாங்க முடியாமல் போனது. 

வண்டி கிளம்பிய பத்து நிமிசத்துக்குள் நடைபாதை டீ,காபியிலே இருந்து டாஸ்மாக் கடையிலே கிடைக்கும் சரக்கை தவிர அனைத்து சரக்குகளை விற்பவர்கள் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. விற்பவர்களில் சிலர் சீருடை அணித்து இருந்தார்கள். அவர்கள் ஒப்பந்த உழியர்கள் என்று அவர்கள் அடையாள அட்டையை வைத்து தெரிந்துகொண்டேன், இவர்கள் நடைபாதையிலே செல்லும் வேகம் ரயிலின் வேகத்துக்கு கொஞ்சமே குறைவாக இருக்கும். அசதியாக இருக்கிறது என்று சிறிதுநேரம் எழுந்து நடைபாதையிலே நின்றால் ௬ட "சார் சைடு" என்று நொடிக்கொரு முறை உங்களை கடந்து செல்வார்கள் இந்த ஊழியர்கள்.  

சாதாரண நேரமாக இருந்தால் இவற்றை எல்லாம் கவனித்து இருக்க மாட்டேன், நான் ஒரு எழுத்தாளர் என்று போனவாரம் தெரிந்ததாலே கண்ணில் தென்படுபவை எல்லாம் கனவிலே தென்பட்டு எழுத்துக்களாகிறது(எங்க போய் முடியுமோ)

இப்படி ரயில் நடப்புகளை கவனித்து கொண்டு இருக்கும் போது பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார், எனது மின்னணுச் சீட்டைக் காட்டினேன். வாங்கிப்பார்த்துவிட்டு என்னிடம் ஏதோ கேட்டாரு, எனக்கு அவரு பேசுனது புரியவே இல்ல. அவரிடம் 

தமிழ் ஆர் இங்கிலீஷ் ன்னு சொன்னேன், அதற்குள் பக்கத்திலே இருந்தவர் "உன்னோட அடையாள அட்டை கேட்கறாரு என்று சொன்னார், உடனே தேடிப்பார்க்க ஆரம்பித்தேன், தேடாத எல்லாம் கிடைத்தது அடையாள அட்டையைத்  தவிர, நான் தேடி முடிக்கும் முன்னே என்னைய பார்த்தது ஹிந்தியிலே சொல்லிட்டு பக்கத்து இடத்துக்கு போனார், அங்கே இருந்த குடும்பம் ஒன்றும் என்னை மாதிரி மின்னணு சீட்டு வாங்கி இருந்தவர்களிடம் அடையாள அட்டை நகலை கொடுத்ததற்காக வாக்குவாதம் பண்ணிவிட்டு கடந்து போனார்.

  அவர் போனதும் கொஞ்ச நேரத்திலே டீ,காபி விற்பவர்களை எல்லாம் தவிர்த்து இன்னும் சில வீட்டு அத்தியாவசிய பொருட்கள், மற்றும் குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்துகொண்டு வியாபாரம் செய்ய வியாபாரிகள் வந்தார்கள், அந்த வியாபாரிகள் அனைவரும் கிட்டத்தட்ட மாற்று திறனாளிகள், ஒருவருக்கு கண் இருப்பதை கண்டுபிடிப்பதே கஷ்டம், இன்னொருவருக்கு கை மெலிந்து தட்டையாக இருந்தது, இன்னும் சில வித்தியாசமான முக அமைப்பு கொண்ட மனிதர்கள்,இவர்களின் உழைப்பு திறனை பாராட்டுவதா இல்லை இவர்களைப் பார்த்தது பரிதாப்படுவதா என்று யோசித்துக்கொண்டே நான் எந்த பொருளும் வாங்கவில்லை. என்னைமாதிரி மற்ற பயணிகளும் நினைத்தார்களோ என்னவோ,அவர்களும் எந்த பொருளும் வாங்கவில்லை. 

வண்டி சோலார்பேட்டை தாண்டியதும்,சிறிது நேரத்திலே நான் இருந்த ரயில் பெட்டி முன்பதிவு செய்யாத பெட்டியைப்போல ௬ட்டம் நிறைந்து வழிந்தது. எனது  அருகில்  இருந்த காலி இடத்தை துண்டு போட்டு பிடிக்க இருவர், இருவரில் ஒருவர் வென்றுவிட, என் அருகிலே இருந்தவரிடம் கேட்டேன். நீங்க முன்பதிவு செய்தீங்களா என்று, அவரு அதற்கு இல்லைன்னு பதில் சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார்.

பசிமயக்கம்  கண்களை பிறட்டிகொண்டு வந்தாலும், ஏனோ ரயிலில் விற்பனை செய்யப்பட்ட தின்பண்டங்களை வாங்கி சாப்பிட பிடிக்கவில்லை. கண்களை  மூடிக்கொண்டு இருந்த சிறிது நேரத்திலே பசி மயக்கத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை. எனது  சட்டைய பிடித்து இழுப்பது போன்ற உணர்வு, எழுந்தால் எனக்கு எதிரே பயண சீட்டு பரிசோதகர் நின்றுகொண்டு எனது அடையாள அட்டையை கேட்டுக்கொண்டு இருந்தார்,நான் எனது பக்கத்திலே இருந்தவரைப் பார்த்தேன். அவர் இல்லாமல் வேறொருவர் அமர்ந்து இருந்தார்.

பசிமயக்கம், தூக்க கிறக்கம் ரெண்டிலும் வந்த ஆத்திரத்திலே எதிரே நின்ற  
இவ்வளவு நேரமும் மாட்டு சந்தை மாதிரி பயணச்சீட்டு எடுத்தும், எடுக்காமலும் ரயில் பெட்டி முழுவதும் மக்கள் வெள்ளமா இருந்தது,அவங்களை எல்லாம் பார்த்து ஒரு வார்த்தை பேசாத நீ உண்மையிலே முன்பதிவு செய்து சீட்டு வாங்கிய என்னையப் பார்த்து அடையாள அட்டை கேட்கிற உனக்கு மனசாட்சி இல்ல என்று சொன்னேன், கொஞ்ச நேரத்திற்கு எதிரில் நின்றவர் மட்டுமல்ல, அந்தப் பெட்டியிலே இருந்த அனைவரும் அமைதியானார்கள், பரிசோதகர் என்னிடம் 

தம்பி இது உங்க பையிலே இருந்து விழுந்த கடவுசீட்டாய் இருக்கும், உனது புகைப்படத்தை பார்த்து நான் உன்னிடம் திரும்பி கொடுக்க வந்துள்ளேன் என்று சொன்னவரிடம் வேறவொன்றும் பேசாமல் கடவுச்சீட்டை வாங்கிவிட்டு அமைதியாக அமர்ந்தேன்.அதுவரை பக்கத்திலே இருந்தவர்களிடம் இந்தியன் ரயில்வே யை குறைசொல்லிகொண்டு வந்த நான் எதுவுமே பேசவில்லை, கொஞ்ச நேரத்திலே என் ரயில் பயணம் முடிந்துவிட்டது,ஆனால் இன்னும் வாழ்கைப்பயணம் முடியவில்லை.    
  
         


Sunday, May 15, 2011

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் கடிதம்!


சட்ட மன்ற தேர்தலில் தோல்வி, ஆட்சியில் தோல்வி, வளர்ச்சியில் தோல்வி, வாழ்கையில் தோல்வி என எங்கும் தோல்வி எதிலும் தோல்வி என துரத்தப்படும் உடன்பிறப்பே! இது தோல்வியல்ல, கடும் பணிசுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வு.

மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டனர்.சிறிது இளைப்பாறி மீண்டும் மக்கள் பணியை  தொடர்வோம்.ஒய்ந்து விட்ட நாம் வீழ்ந்துவிடவில்லை.ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது.வீழ்ந்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தவர்களை வெற்றி பவனியில் அரவணைக்கும் காலம் வரும்.

விடையில்லா கேள்விகளுக்கும் பதில் "மூன்று" எழுத்து, பதிலை பகுக்கும் "அறிவு" மூன்று எழுத்து, அறிவுக்கு உரமிடும் "ஆசான்" மூன்று எழுத்து,அனைத்திற்கும் வித்திட்ட "அன்னை" மூன்று எழுத்து, அவள் ஊட்டிய ”தமிழ்” மூன்று எழுத்து, தமிழோடு மக்களுக்கு செய்யும் ”தொண்டு” மூன்று எழுத்து,அதனை சார்ந்து செய்யும் கழகத்தின் பெயர் மூன்று எழுத்து.இதை கண்டு எடுத்த ”அண்ணா” மூன்று எழுத்து.இவைகள் இணையும் சக்தியிலே ௬டும் வெற்றியும் மூன்று எழுத்து, அந்தகனியை கனியை நாம் மட்டும் சுவைத்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழி பொய்த்து விடும்.மாற்று கட்சியினரும் வெற்றிக்கனியை சுவைக்க நாம் தோல்விக்கு தோள் கொடுத்துள்ளோம்.
   
தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம். கழக வரலாற்றிலே, காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப்போவதில்லை, ஒப்பாரி வைத்து, ஓலமிடும் அளவுக்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல. முயன்றோம்-நின்றோம்-தோற்றோம்!முயல்வோம்-நிற்போம் -வெல்வோம்!கழகம் அழிந்துவிட்டது, கழகத்தை அழித்துவிட்டோம் என்று ஆனந்தக் ௬ச்சலிடும் அன்பர்கள் வரலாற்றை புரட்டிப்பார்க்க நினைவுபடுத்துகிறேன். தடம் புரண்ட வரலாறுகளை உலுக்கி,குலுக்கி திருத்தி இருக்கிறோம், இன்று தடம் புரண்டதையும் திருப்பி எடுத்து, திருத்தி எழுதுவோம்.

விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்திலே சூரியன் அழிந்து விட்டது என்பது சொல்வது,கண்ணை மூடிக்கொண்டு கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம். இந்த தோல்வி வெற்றிக்கான அழிவில்லா விதைகளை விதைத்துள்ளது.விதைக்கப்பட்ட விதைகள் உயிர் பெற்று மரமாகி விண்ணை முட்டும் அளவு வளரும் தூரம், கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரத்தைப் போல நெடியதல்ல, இரவுக்கும், பகலுக்கும் இருக்கும் நேர இடைவெளியைப் போல மிகவும் குறுகியது.

கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும்.பொறுத்திரு உடன்பிறப்பே! காதுகளை ௬ர்மையாக்கி, புத்தியை தீட்டி வைத்து கொண்டு மக்கள் பணி செய்ய காத்திரு! அண்டத்தின் சுழற்சியிலே ராத்தூங்கும் நம்மோடு சூரியன் தூங்குவதில்லை.  இன்னுமொரு உதயத்திற்கு காத்திரு, புது உலகம் நமக்காக காத்து இருக்கிறது சரித்திரமும், சாதனையும் படைக்க!