தற்குறிப்பேற்ற அணியும், சகுனமும்
பொறுப்பு அறிவித்தல் :
நல்ல நேரம்,கெட்ட நேரம் மற்றும் சகுனம் இவைகளிலே நம்பிக்கையுள்ளவர்கள் இந்த இடுகையை தவிர்ப்பது நலம்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொல் அணிக்கு சொம்பு அடிச்சேன், மறுபடியும் ஒரு அணியோட அணியில்லாம வந்து இருக்கேன்.சும்மா அணியோட வந்தா நல்லா இருக்காதேன்னு கூடவே சகுனத்தையும் ௬ட்டிட்டு வந்து இருக்குறேன், அதுமட்டுமில்லாம கடையிலே ஆராய்ச்சி மணி அடிச்சி ரெம்ப நாள் ஆகிவிட்டது என்று யாருமே கேட்காததாலே சகுனத்தையும், தற்குறிப்பேற்ற அணியையும் வைத்து ஒரு சின்ன ஆராய்ட்சி.சரி இப்ப தற்குறிக்கு வருவோம். நான் வல்லவன், நல்லவன், இலக்கியவாதி, எழுத்தாளர் இப்படின்னு சுயமா சொம்பு அடிச்சா, அதுக்கு பேரு தற்பெருமை. என்னையப் பத்தி தெரியாதவங்க கிட்ட இப்படி சொம்பு அடிக்கலாம், என்னைய நல்லா தெரிஞ்சவங்க கிட்ட இப்படி சொம்பு அடிச்சா, அடிக்கிற சொம்பை பிடிங்கி மண்டையிலே ரெண்டு போடுவாங்க.
தற்குறிப்பேற்ற அணியும் கிட்டத்தட்ட இதே வகைதான்(?), சாதாரணமா நடக்கிற விஷயத்தை மசாலா தடவி, ரெண்டு குத்து பாட்டு போட்டு எழுதிட்டா அதுவே தற்குறிப்பேற்ற(?) அணியாகி விடுகிறது, அந்த வகையிலே பார்த்தா எழுத்தார்களின் எழுத்துகள் எல்லாமே தற்குறிப்பேற்ற அணி தான், சாயங்காலம் ஆறு மணி ஆச்சின்னா யாரு எந்த வழி போனாலும் சூரியன் மறைந்து விடும். மாசத்திலே வளர் பிறையும், தேய் பிறையும் வருவது வழக்கம்.
இந்த சாதாரண நிகழ்வை கவிஜர் என்ன சொல்லுவாருன்னா உன்னைய காணாம நான் மட்டுமல்ல நிலவும் தேயுதுன்னு வீட்டிலே இறைச்சி பிரியாணியும், மீன் வருவலும் சாப்பிட்டிட்டு சொல்லுவாரு,அவுக ஆள் வெளியே வரலைன்னா உலகமே இருட்டு ஆகிடும்,எனக்காக இல்ல, இந்த உலகத்துக்காகவாது நீ குளிக்காம வெளியே வா, இப்படி பல பொய் பாட்டுகளைப் பாடி, போட்ட துண்டை உறுதியாக்கி கொள்வாரு. இதையே சாதாரண வாழ்க்கையிலே ஒப்பிட்டு பார்த்தோமானால் நல்ல நேரம் காலை ஒன்பதிலே இருந்து பத்து மணி வரைக்கும் நாள் காட்டியிலே எழுதியதை பார்த்துவிட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் சகுனம் சரி இல்லை". என்று சொல்லி வீட்டுக்குள்ளே சென்று நல்ல நேரம் முடியும் வரை வீட்டுக்குள்ளே இருக்கிறோம்(?) .
இலக்கியத்திலே இருந்தும் ஒரு உதாரணம் சொல்லாம விட்டுட்டா நாளைக்கு இலக்கியவாதி பட்டம் கிடைக்காம போய்டும் என்று கொலை வெறியிலே சொல்லிக்கிறேன்.சிலப்பதிகாரத்திலே மாதவியோட குத்தாட்டம் போடப் போய், மஞ்ச துண்டு போட்டு மறுபடி கண்ணகிட்ட சரண் அடைந்து , உள்ளுரிலே பொழைக்க வழி இல்லாம கண்ணகியோட மதுரைக்கு புறப்பட்டு போறார். அவங்க மதுரை மாநகரம் நுழையும் முன்னே காற்றிலே மேலும்,கீழும் ஆடிய கொடி,இவர்களை வர வேண்டாம் என்று சொல்வதைபோல இருந்ததாக இளங்கோவடிகள் சொல்லுகிறார்.இப்ப இதையும் சகுனத்தையும் ஒன்று படுத்திப் பாருங்க, ரெண்டுமே சாதாரண நிகழ்வுதான். .
ஒரு நாளைக்கு 24 மணி நேரமா இருந்தாலும், இவங்க நல்ல நேரம் ஆரம்பிக்கிறது காலையிலே ஆறு மணியிலே இருந்து, அரை மணி நேரத்துக்கு ஒண்ணுன்னு பிரிச்சி, நாள் காட்டியிலே குறிச்சி வச்சிடுறாங்க.சாதரணமாக இருக்கிற நேரங்களை எல்லாம் நல்ல நேரம், கெட்ட நேரம், கிழக்க சூலம், மேற்கே சூலம்னு சொல்லி வச்சி இருக்காங்க.இதை எல்லாம் படிக்கிறவங்களும் உண்மைன்னு நம்பி,சென்னையிலே இருக்கிறவங்க கிழக்காம போன சகுனம் நல்லா இருக்கும்னுன்னு கள்ளத்தோணி ஏறி இலங்கை வரைக்கு போற அளவுக்கு இருக்கு.இதை எல்லாம் படிச்சி பின்பற்றுகிறவங்க பலன் பெறுறாங்களோ இல்லையோ,நல்ல நேரம்,கெட்ட நேரமுன்னு குறிச்சி, அதை நாள்காட்டியிலே போட்டு விற்கிறவங்க நல்லாவே கல்லா கட்டுறாங்க.
நல்ல நேரம், கெட்ட நேரம் இல்லன்னா பூமியே சுத்தாது என்ற அளவுக்கு ஆகி இருக்கு, இதையே நம்பி நம்ம ஆளுங்க பிறக்கும் குழந்தை சி செக்சன்னு(அதான் வயத்தை அறுத்து வெளியே எடுக்கிறது) தெரிஞ்ச உடனே, நல்ல நேரம் குறித்து கொடுக்கிற சாமியிடம் ஒரு நேரத்தை குறித்து கொடுக்க சொல்லி, இந்த நேரம், இந்த நிமிசத்திலே கத்திய வையுங்கன்னு மருத்துவரிடம் சொல்லிடுறாங்க, இப்படி நல்ல நேரத்திலே பிறந்தவங்க எல்லாம் ஒரு சி(கோடி), ரெண்டு சி ன்னு சம்பளம் வாங்குவாங்க, மத்தவங்க எல்லாம் ஒரு சென்ட் ரெண்டு சென்ட்கு சிங்கி அடிச்சிகிட்டு தெருவிலே இருப்பார்களாம்(?).இந்த நல்ல நேர ஆர்வத்திலே செத்தாலும் நல்ல நேரத்திலே சாவனும்னு நினைக்கிற அளவுக்கு ஆகிபோச்சி.
தற்குறிப்பேற்ற அணியிலே பார்த்த எல்லா உதாரணங்களும் சகுனத்துக்கும் பொருத்தமாக இருக்கிறது(?),ஆகவே சகுனம்,நல்ல நேரம்,கெட்ட நேரம் என்று சொல்வதெல்லாம் தற்குறிப்பேற்ற அணி என்று சொல்லி வாய்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.