Tuesday, May 4, 2010

மடை திறந்த மடல்


மடல் எழுதவா வேண்டாமா என்று பலநூறு தடவை எல்லாம் யோசிக்கலை, தமிழ்ல எழுதி ரெம்ப நாளாச்சி, அதனாலே எழுதுறேன், எழுத்துப் பிழை இருக்கும், அது இந்த மொக்கை எழுத்தாளருக்கு களங்கம் ஏற்ப்படுத்தலாம்,விதி வலியது வேற என்ன சொல்ல.

எங்கேயோ பிறந்தோம், எப்படியோ சந்தித்தோம், சந்தித்த உடனே காதல் கொள்ளும் அழகு என்னிடம் இருந்தாலும், நான் அவனை கொஞ்ச நாள் கழித்தே காதலனாக ஏற்று கொண்டேன்.காதலிக்கும் போது பின் விளைவுகளைப் பற்றி யோசிக்க நேரமில்லை, பெரும் நிகழ்வாக எங்கள் இருவரையும் என்னோட அப்பா பார்த்து விட்டார்.

பார்த்தவர் என்னுடன் அவனை அழைத்து வரச்சொன்னார், அவனும் வந்தான், அவனுடையை புள்ளி விவரங்களை சேகரித்து கொண்ட என் தந்தை, எனது மதிப் பெண்களையும், அவனது மதிப் பெண்களையும் கேட்டு தெரிந்து கொண்டார். நான் எல்லாப் பாடத்திலேயும் 90 சதவீதக்கு மேல எடுத்து இருந்தேன், அவனோ பல பாடங்களிலே தேர்ச்சி பெறவில்லை.

அவனிடம் "நாங்க எல்லாம் அறிவாளியாக பிறந்தவர்கள், நீ இன்னும் படிக்கவே ஆரம்பிக்க வில்லை, நீ கல்லூரி முடிக்கும் முன்னே, என் மகளை விட அதிக மதிப் பெண் எடுத்து காட்டிவிட்டு என்னை வந்து பார் என்று சொல்லி விட்டார்.இதை கேட்டு நீ என்ன நினைச்சி இருப்பன்னு தெரியும், "யோவ் பொண்ணு தர முடியாதுன்னு நேரடியா சொல்ல வேண்டியதானே" என்று 

எங்க வீட்டிலே பேசிவிட்டு நீ உன்னோட அறை நண்பர்களோட வீர வசனம் பேசினதை நீ மறந்து இருக்கலாம், நான் இன்னும் மறக்க வில்லை.

"மாப்பள அவங்க அப்பன் மண்டையை உடைக்கணும், அதும் என்கையாலே"

"மாப்ள, அவங்க அப்பன் பேசும் போது உன் ஆளு என்ன பண்ணிக்கிட்டு இருந்தா"

"அவ என்னடா பண்ணுவா, அவங்க அப்பன் அவ வாயை அடைச்சி வச்சி இருப்பான்,நெருப்போட விளையாடுறான் அவன்"

"கருப்பு நெருப்போடவாடா?"

"டேய் அவனுக்கு என்னையை பத்தி தெரியாது அவங்க அப்பனுக்கு, ஊரிலே என்னைய நேருக்கு நேர நின்னு பார்த்தா நெத்தியிலே அடிப்பேன்,பின்னாடி பார்த்தா பிடதியிலே அடிப்பேன்"

"டேய் முதல்ல பீடி அடிடா" 

 அப்படின்னு பேசி முடிக்கும் போது, கல்லூரி மூத்த மாணவர் வந்து 

"டேய் ...கருவாலி, உன்னைய கல்லூரி முடிஞ்ச உடனே என்னையை பார்க்க சொல்லி இருந்தேன், ஏன்டா வரலை"

"எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது"

"என்னது வேலையா" ன்னு கேட்டுகிட்டே செவுள்ள ரெண்டு அடி, முதுகிலே ரெண்டு அடி அடிச்சி, சட்டையை பிடித்து உலுக்கி கீழே தள்ளி விட்டு 

"இனிமேல நான் ௬ப்பிட்டு வரலை, உன் சங்கை கடிச்சி துப்பி புடுவேன்" அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார்.

அவர் போன உடனே நான் "மச்சான், அவளோட அப்பன் மண்டையை உடைக்கணும்" ன்னு சொல்லிட்டு திரும்பி பார்த்தப்ப, நண்பன் ஒருத்தன் 
"டேய் உன்னை இப்பத்தான் நாய் அடிக்கிற மாதிரி அடிச்சிட்டு போறான் ஒருத்தன்"

"மாப்பள ரெம்ப தெரிஞ்சவன் என்பதாலே விட்டுட்டேன், வேற எவனும் என் மேல கைய வைக்க முடியுமா?"

"அப்படியா நாங்க எல்லாம் உன்னைய ரெம்ப ரெம்ப தெரிஞ்சவங்க என்று சொல்லி" உன்னை கும்மி எடுத்தார்கள் என்று கேள்விப் பட்டேன்.

எங்க அப்பா மேலதானே கோபம், நீ என்னைப் பார்க்க கண்டிப்பாக வருவாய் என்று வழி மேல விழி வைத்து காத்து இருந்தேன், கண் பார்வை மங்கி கண்ணாடி போட்டது தான் மிச்சம், நானே ஒரு முறை உங்க கல்லூரிக்கு வந்தேன், ஆனால் உன்னைத்தவிர எல்லோரையும் பார்க்க முடிந்தது.

அடுத்த ஆறுமாதம் கழித்து என் வீட்டுக்கு உன்னோட கடிதம் வந்தது,பசலை நோயிலே வாடி மீண்டும் எனக்கு தூது அனுப்பி விட்டு இருப்பாய் என்று நினைத்து ஆசையிலே திறந்து பார்த்த எனக்கு முதல் வரியிலே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாய் "அறிவு கேட்ட கழுதை" என்று ஆரம்ப வரியிலே , நீ எழுதின முழு கடிதமும் பொது இடத்திலே படிக்க முடியாது என்பதாலே ஒரு வரியோட முடிக்கிறேன், கடிதம் முழுவதும் என் தந்தையை திட்டு விட்டு கடைசியிலே உனது மதிப்பெண் சான்றிதழ் நகலை இணைத்து இருந்தாய், அனைத்து பாடத்திலும் 90 விழுக்காடுக்கு மேல் எடுத்து இருந்தாய்.

நீ கல்லூரி முடிக்கும் வரைக்கும் இதே போல கடிதங்கள் வந்தது, கல்லூரி முடிந்ததும் நீயே என்னை சந்திக்க வந்தாய் வந்ததும் 

"அறிவாளி அப்பன் மகள் எப்படி இருக்கா?
என்னவோ நீங்க தான் அறிவுக்கு பிறந்தவங்கன்னு பெருமை அடிச்சான், இப்ப பார்த்தியா உன்னைய விட அறிவிலே நான் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை நிருபிச்சி இருக்கேன்"

ஏதோ பேச வந்த என்னை "பேசுன அடிச்சி ஆத்திலே போட்டுருவேன்" ன்னு மிரட்டுற மாதிரி சொன்ன. என்னால பேச முடியலை, அழ மட்டுமே முடிந்தது.

"நல்லா அழு, இப்படி பட்ட அறிவாளியை விட்டுடோமொன்னு நல்லா அழு, நான் உன்னை விட அதிக மதிப்பெண் எடுத்து உன்னை கை பிடிக்க இல்லை, எங்களுக்கும் அறிவு இருக்குனு புரிய வைக்கத்தான்"

நான் உண்மையிலே அழுவதற்கு காரணம் எங்க அம்மா இருந்து விட்டார்கள் என்று ௬ட நீ சொல்ல விடவில்லை.அம்மா இறந்த கொஞ்ச நாள்ல அப்பாவோட மனசும் மாறி இருந்தது, அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார், எப்படியாவது உன்னை எனக்கு திருமணம் செய்துவைப்பேன் என்று சொன்னார், தமிழ் படமா இருந்தா இந்த இடத்திலே அவுஸ்திரேலியாவிலே ஒரு பாட்டு வந்து இருக்கும், உங்க ஊரின் விலாசம் எடுத்து கொண்டு எனது தந்தையும் வந்தார். 

உங்க வீட்டுக்கு வந்து, இந்தியாவிலே மிகப் பெரிய அலுவலகத்திலே நல்ல வேலையிலே இருப்பதாக தெரிந்து கொண்டும், அறிமுகம் முடித்து விட்டு என்னைப் பற்றிய விவரங்களை சொன்னார் என் தந்தை, ஆனால் அதை கேட்டு உங்க வீட்டிலே எவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்து உன்னை களங்கப் படுத்த விரும்ப வில்லை, ஆனால் இந்த விசயங்கள் உனக்கு தெரியவில்லை என்று நான் அறிவேன்.

பட்ட அவமானத்திலே பாதி உயிரே போய் விட்டது, கொஞ்ச நாள் எதுவுமே பேசாத நடைப் பிணமாக மாறிவிட்டார், ஆறு மாதம் கழித்து உனக்கு நிச்சய தார்த்தம்  என்று கேள்விப் பட்டு, எப்படியாவது உன்னை சந்தித்து பேச வேண்டும் என்று, நானே வந்தேன், உன்னையும், உன் இந்நாள் மனைவியையும் மணக்கோலத்திலே பார்த்து விட்டு நானே ஊமை யாகி விட்டேன்.

கால ஓட்டத்திலே என் தந்தையும் காலமானார், தனித்து விடப் பட்டேன், உன் நினைவுகளோட மட்டும்,நீ என்னை மறந்து போனாலும், நீ அடிக்கடி சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை, நான் மூச்சி வாங்குறதே உன்னை சுவாசிக்கத்தான்" 

உன்னை 
சுமந்த நினைவுகளோடு 
முடிவில்லாமல்  
பயணிக்கும் பேதை 

நல்லா பாருங்க வரி, வரியா எழுதி இருக்கேன், அப்படினா கவிதைன்னு அர்த்தம். உன் நினைவுகளோட வாழ்கையிலே ரெம்ப தூரம் பிரயாணம் செய்து விட்டேன், முடிய வேண்டிய நேரம், பயணம் மட்டுமல்ல, முக்கோண காதல் கதைகளிலே, ஒரு காதலை காதலியை கழட்டி விட இந்திய கதை ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பெயர் தெரியாத வியாதி, ஆனால் சாவுக்கு மட்டும் தேதி குறிக்கும் வியாதி, அதே வியாதி தான் எனக்கும் இருக்கு.இவ்வளவு நாளா நான் சுமந்த உனது நினைவுகளை இந்த கடிதம் சுமக்கும் என்ற நம்பிக்கையிலே பிரியா விடை பெறுகிறேன்.

பொறுப்பு அறிவித்தல்:- படிச்சி முடிச்சவங்க ஆட்டோ அனுப்பணுமுன்னு ஆசைப் பட்டால் குடுகுடுப்பை க்கு அனுப்பவும், அவருக்கு வந்த கடிதத்தை நான் ஆட்டையைப் போட்டுட்டேன். 


21 கருத்துக்கள்:

Chitra said...

பொறுப்பு அறிவித்தல்:- படிச்சி முடிச்சவங்க ஆட்டோ அனுப்பணுமுன்னு ஆசைப் பட்டால் குடுகுடுப்பை க்கு அனுப்பவும், அவருக்கு வந்த கடிதத்தை நான் ஆட்டையைப் போட்டுட்டேன்.


..... இது வேறயா? சரியா போச்சு..... ஹா,ஹா,ஹா,ஹா....

சாந்தி மாரியப்பன் said...

ஆட்டையை போட்ட கடிதம் நல்லாருக்கு :-))

//"கருப்பு நெருப்போடவாடா?"//

ஹீரோ யாருன்னு புரிஞ்சுபோச்சு :-))))

ராமலக்ஷ்மி said...

டிஸ்கி சூப்பர்:)))!

Unknown said...

நசரு..

அந்தக் கடுதாசிய உங்கக்கிட்ட இருந்து ஆட்டயப் போட்டதா குடுகுடுப்பை ஒரு வருசத்துக்கு முன்னால சொன்னாரே? எது உண்மை?

ராஜ நடராஜன் said...

ஆரம்பிச்சிட்டீங்களா:)

ராஜ நடராஜன் said...

//"கருப்பு நெருப்போடவாடா?"//

கருப்பு நெருப்பு!இது கூட நல்லாயிருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//"அறிவு கேட்ட கழுதை" என்று ஆரம்ப வரியிலே//

என்னாது?ஸ்பெல்லிங்கா இல்ல மார்க் பத்தியா?

மார்க்குன்னா மார்க்குக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இருக்கா?

ராஜ நடராஜன் said...

டிஸ்கி!அவ்வ்வ்வ்வ்!

முகிலன் வேற என்னமோ சொல்றாரு?

Vidhoosh said...

//"மாப்பள அவங்க அப்பன் மண்டையை உடைக்கணும், அதும் என்கையாலே"//

அவர் உயரத்துக்கு .... எட்டிட்டாலும்.. ஹையோ ஹையோ...

///"கருப்பு நெருப்போடவாடா?"///
யாரு யாரு... யாருப்பா...

//நேருக்கு நேர நின்னு பார்த்தா நெத்தியிலே அடிப்பேன்,பின்னாடி பார்த்தா பிடதியிலே அடிப்பேன்///
அய்... அய்... எப்படிங்க.. எம்பி எம்பியா.. ???

///அவுஸ்திரேலியாவிலே ஒரு பாட்டு வந்து இருக்கும், ///
ஹையோ அவஸ்தையே... இந்த ஊரு எங்கண்ணே இருக்கு ...


//ஒரு காதலை காதலியை கழட்டி விட இந்திய கதை ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப்பட்ட பெயர் தெரியாத வியாதி, ஆனால் சாவுக்கு மட்டும் தேதி குறிக்கும் வியாதி, அதே வியாதி தான் எனக்கும் இருக்கு.///

பதிவேழுதோபோபியா

சந்தனமுல்லை said...

ஆகா....சிலபல உண்மைகள் வெளிலே வரும் போலிருக்கே! :-)))

சந்தனமுல்லை said...

ஸ்ப்பா...தமிழ்சினிமா எஃபெக்ட்...இடுகை முழுதும்!! :))

Anonymous said...

என்ன கொடுமை இது நசர்

ஹேமா said...

//உன்னை
சுமந்த நினைவுகளோடு
முடிவில்லாமல்
பயணிக்கும் பேதை...//

வாவ்...கவிதை கவிதை.(உங்களைமாதிரி கவுஜன்னு சொல்லமாட்டேன்.)

என்ன அழகா ஒரு கதையை கடி கடின்னு கடிச்சுத் துப்பியிருக்கு.ஆனா ரசனையாயிருக்கு.பொறுப்பு அற்வித்தல் எல்லாம் சரிவராது.
எழுதிக் கிழிச்சதில உங்க பேர்தான் இருக்கு.

குடுகுடுப்பை சார் ரொம்பக் கவலையா இருக்காரோ என்னமோ !

Anonymous said...

எடிட் விண்டோவுல வெச்சு டைப் அடிக்கலையா ? அலைன்மெண்ட் சரியில்லை.

ஒன்னு செய்யு. டைப் பண்ணதை ஒரு நோட் பேட்ல காப்பி செய்து போட்டு அதன் பிறகு தேவையற்ற வரி இடைவேளைய நீக்கிட்டு போஸ்ட் செய்யவும்.

நான் அதுக்கப்புறம்தான் படிப்பேன் அவ்வ்வ்

க.பாலாசி said...

//நான் ஆட்டையைப் போட்டுட்டேன். //

ஆகா... மொத்தமும் டவுண்லோடுதானா.... நடத்துங்க.....

எல் கே said...

enga irunthu dowload seyyapttadhu ithu. sonneengana avanga ootuku 2 auto appuram unga veetuku 2 auto anuparen

நசரேயன் said...

//செந்தழல் ரவி said...
எடிட் விண்டோவுல வெச்சு டைப் அடிக்கலையா ? அலைன்மெண்ட் சரியில்லை.

ஒன்னு செய்யு. டைப் பண்ணதை ஒரு நோட் பேட்ல காப்பி செய்து போட்டு அதன் பிறகு தேவையற்ற வரி இடைவேளைய நீக்கிட்டு போஸ்ட் செய்யவும்.

நான் அதுக்கப்புறம்தான் படிப்பேன் அவ்வ்வ்
May 5, 2010 5:42:00 AM EDT //

ரவி அண்ணே, உங்க யோசனை நல்லா வேலை செய்யுது.. நோட்பேடு காப்பி பண்ணி போட்டு இருக்கேன்.

Anonymous said...

பிடதியிலே ///

இங்கதான் நித்தி ஆசிரமம் இருக்கு. அது பிடறின்னு நெனைக்கறேன்.

vasu balaji said...

டிஸ்கில கூடவா அண்ணாச்சி. கருப்பு நெருப்புன்னு கடுதாசில சொல்லிட்டு தலைவருக்கு வந்ததுன்னு தள்ளிவுடப்பாத்தா நடக்காதுன்னேன்:)). இல்ல க.கா.அ.தலைவர் பதவிக்கு வேட்டு வந்துடுமோன்னு இப்புடி கத உடுதீயளோ? வில்லன் வந்தாத்தான் அடங்குவீரு போல.

நட்புடன் ஜமால் said...

செய்றதையெல்லாம் செய்துட்டு ஆட்டைய போட்ட கடிதமுன்னு சொல்லி ஆட்டோவ அங்கிட்டு திருப்ப பாக்குறியளா ... :)

கன்கொன் || Kangon said...

உங்கள் ஆக்கம் இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது...

வாழ்த்துக்கள்...

http://epaper.thinakkural.com/west/09_05_2010/images_full/09_05_2010_023.jpg

( http://epaper.thinakkural.com/ இல் 23ம் பக்கம் )