Sunday, February 27, 2011

மனநோயாளியின் வாக்குமூலம்

"அப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, இப்ப எனக்கு எத்தனை வயசுன்னு தெரியலை, ஆனா ஏழு கழுதை வயசாகி இருக்கும்னு  நினைக்கிறேன்,என்னோட அஞ்சு வயசிலே அஞ்சுவைப் பார்த்தேன், அதுக்கு அப்புறம் அவளை பார்க்கவே முடியலை"

"ஏன் நீங்க முயற்சி செய்யலை, அவங்களை கண்டு பிடிக்க ஏன் முயற்சி செய்யலை, சொல்லுங்க .. சொல்லுங்க."

"யோவ், அவங்க அப்பனுக்கு வேலை மாற்றுதலாகி ஊருக்கு போய்ட்டான், அவரு அரசாங்க வேலை பார்த்தவர், எங்க அப்பா அரசாங்கம் உருவாக வேலை பார்த்தவர்(குடி மகன்), அதுவும் டவுசர் ௬ட போட தெரியாத வயசிலே   யாரைத்தேடி எங்க எப்படி அலைய முடியும்?"

"உன்னோட நிலையிலே இருக்கிறவங்க, ஐஞ்சு வயசிலே அம்பது வயசு ஆள் மாதிரி இன்னொரு ஆள் உள்ளே இருந்து உள்குத்து வேலை செய்வாரு"

"வேலைக்கு அரை கிழவன்களை எல்லாம் எதுக்கு வைக்கிறேன், ஒரு நல்ல பெண்ணை பார்த்து வைத்து இருப்பேனே?"


"உங்க உள்ளேண்ணத்திலே கலந்த உப்பு கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது, சொல்லுங்க நீங்க யாரு?"

"அடி செருப்பால, எத்தனை வாட்டி இந்த கேள்விய கேப்ப?"

"நீங்க சொல்லுற வாட்டி வடக்கூர்ல நிறைய பயன்படுத்துவாங்க, உங்க கிட்ட ஒளிந்து இருக்கிற ஐ.ஐ.டி யிலே படிக்க போய், அறிவு அதிகமாகி கஞ்சா அடிச்ச அந்த ஆசாமிய வெளியே கொண்டு வாங்க, அவனை இன்னைன்னு நான் பார்க்கணும்"

"ஏன் நீ அவன்கிட்ட கடன் வாங்கி கஞ்சா குடிக்கப் போறியா, அறிவு அதிகமா இருக்கிறவங்க எல்லாம் கஞ்சா குடிப்பாங்கன்னா,மருத்துவப் படிப்புக்கு தான் அதிக மதிப்பெண்ணும் அறிவும்  தேவைப்படுது(?), அப்ப நீங்க எல்லாம் கஞ்சா குடிக்கிறவங்களா?"

"உங்களுக்கு எப்பவாது உங்களுக்குள்ளே, வேற யாரும் இருக்கிற மாதிரி உணர்ந்து இருக்கீங்களா?"

"வேற யாரு மாதிரினா, பேய் பிடிச்ச மாதிரியா"

"அப்படியும் சொல்லலாம்"

"எனக்கு தெரிஞ்சு அப்படீல்லாம் தோணலை, எங்க தத்தா சாமியாடி, அவரு அடிக்கடி சொல்லுவாரு, பேய் எல்லாம் உன்னையப்பார்த்து பத்து மீட்டர் விலகியே நிக்குன்னு ,ஆனா நான் தண்ணியப் போட்டா பல பேர் சாமியாடுவாங்க என் மேல"

"அப்ப உங்க கிட்ட எதோ ஒரு சக்தி இருக்கு" 

"இந்த சக்திய வச்சி ஊரிலே பேய் ஓட்டுற கடை போட்டா யாவாரம் நல்லா நடக்குமா? எங்க தாத்தா சொன்னது நானே பேய் நிறத்திலே இருக்கேன், அதனாலே என்னைய பேய் பார்த்தா, அவங்க ஆள்கன்னு ஒதுங்கிபோகுமாம்"

அடுத்த நிமிடத்திலே பன்னி சில்லிப்பதுபோல சிலித்து, வயத்தை பிடித்துகொண்டு, பல தும்மல்களைபோட்டு, தலையிலே வைத்து இருந்த செயற்கை முடி விழுந்து, வழுக்கையுடன் இருந்தவரைப் பார்த்த மனநல மருத்துவர், 

"வி காட் ஹிம், ஹி இஸ் ஹியர்.. ஆபீசர்ஸ் யு மைட் வான்ட் டு செக் திஸ்" 

எல்லா அதிகாரிகளும், மருத்துவரை சுத்தி நிற்கிறார்கள்.

"பன்னி மாதிரி சிலிப்பை எதிர்பார்த்து காத்து இருந்தேன், அப்படி வந்தாதான்   தான் பிள மனிதனின் வரவு,இப்ப உள்ள இருக்கிறது யாருன்னு நீங்களே 
கேளுங்க"

௬டி இருந்த அதிகாரிகளில் ஒருவர், "நீங்க யாரு?" 

"யோவ் எத்தனை தடவை இந்த கேள்விய கேட்பீங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, இனிமேல இப்படி கேள்வி கேட்டா, நான் எழுந்து போய்டுவேன், விசாரணை ன்னு  சொல்லி சோறு தண்ணி கொடுக்கலை, அதான் வயத்த வலி வந்து விட்டது"

"அந்த தும்மலுக்கும், பன்னி சிலிப்புக்கும் என்ன அர்த்தம்?"

"ஜலதோஷம் பிடிச்சி இருக்கு, அதான் அப்படி"

"மருத்துவரே என்ன நடக்கு இங்க, அவரு சொல்லுறதை பார்த்தா இவனுக்குள்ளே யாரும் உள்ள இருக்கிற மாதிரி தெரியலையே, உண்மையிலே இவருக்கு மனநிலை பாதிப்பு, பிள மனித தாக்கம் இருக்கா?" 

"நீங்க எல்லோரும் கொஞ்சம் வெளியே போங்க, நான் அந்த ஆளை வெளியே கொண்டு வாரேன், இன்னொரு சிகிச்சை இருக்கு"

"என்னவேனாலும் சிகிச்சை கொடுங்க, அதுக்கு முன்னாடி திங்க ஏதாவது கொடுங்க" 

அனைவரும் வெளியே சென்றதும்

"விசாரணை முடிஞ்சதும் கோழி பிரியாணி வாங்கி தாரேன், மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது,அது காலை ஒடிக்கனும்,நானே மனநல மருத்துவர் என் மண்டையையே குடையுற நீ, என்னோட விசாரணையோட உண்மையான முகம் உனக்கு தெரியலை, இப்ப நீ உண்மைய சொல்லலை, உன்னையப் போட்டு தள்ளிட்டு,உனக்கு உள்ளே இருக்கிற பிள ஆட்கள் சண்டை போட்டு உன்னையே கொன்று விட்டதுன்னு உன் கதைய முடிச்சுருவேன், என்னை யாருன்னு நினைச்சே, ஒரு காலத்திலேயே போளி வித்த போலி, உன் பருப்பை என்கிட்டே வித்த, உன்னைய போளிக்கு  தொலி ஆகிடுவேன்"

"இப்ப உங்க உள்ள இருக்கிறது யாரு?"

"ம்ம்.. அமெரிக்க ஜனாதிபதி முனியம்மா"

"முனியம்மாவா?"

"போளி விக்கிறவன் மனநல மருத்துவர் ஆகும் போது முனியம்மா அமெரிக்க ஜனாதிபதியாக முடியாதா"

"அப்படினா நானும் ஒரு உண்மைய சொல்லுறேன், நான் மன நோயாளி இல்லை, உன்கிட்ட இருக்கிற போளி வித்த போலிய வெளியே கொண்டு வர கடமைப்பட்ட இந்திய உளவுத்துறை அதிகாரி, நாங்க உங்களை கைது செய்யுறோம்"

"என்னடா சொல்லுற"

மற்ற அதிகாரிகள் வர

"அவரு உண்மையத்தான் சொல்லுறாரு, நீங்க ஒரு போலின்னு உங்க வாயாலே சொல்ல நாங்க போட்ட நாடகம், எல்லோரும் நடிச்சோம், ஆனா நீங்க நடிக்கவே இல்ல, வாங்க சிறையிலே போளி சாப்பிடலாம்" 

"யோவ் .. கோடி .. கோடியா அடிக்கிறவங்களைஎல்லாம் விட்டுட்டு என்னையமாதிரி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கு அடிக்கிறவங்களை நொங்குறீங்களே  ஏன்?" 

"நோகாம நொங்கு திங்கத்தான், இப்ப நீங்க குற்றவாளி, அதனாலே சிறைக்கு ஒரு வாளிய எடுத்துகிட்டு போங்க"

அடுத்த நாள் செய்தி தாள்களிலே "பிரபல மனநல மருத்துவர் ஒரு போளி வியாபாரி" என்ற தலைப்பிலே சுவாரஸ்ய தகவல்களுடன் ....


Saturday, February 26, 2011

துரைமார்களும், தொப்பியும்



தமிழிலே அலை கடலாக ஓயாமல் ஆராய்ச்சி மணி அடிச்சி தவிச்சி போன கை இப்ப சொம்பு மணி அடிக்கிறது இங்கலிபிசுக்கு, அதாகப்பட்டதாவது துரைமார்களிடம் இருந்து கத்துகொண்ட கொண்ட பாடத்தை அப்படியே மனப்பாடம் பண்ணி, நாம பேசுறப்ப கொஞ்சம் முளகாய், காரம் தூவி அப்படியே பேசுவதிலே நம்மவர்களுக்கு இணை நம்மவர்களே என்பதற்கு எனக்கு தெரிந்த இந்த இரண்டு வார்த்தைகள் ஒரு உதாரணம், அதாவது ஹட்ஸ் ஆப், பைட் தி புல்லெட். நான் ஆரம்ப காலத்திலேயே இந்த வார்த்தைகளை கேட்டதும் அரண்டு போய் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆகிட்டேன்.

முதல்ல ஹட்ஸ் ஆப்னு கேட்டவுடனே, இவரு எதுக்கு சம்பந்தம் இல்லாம தொப்பிய கழட்ட சொல்லுறான்னு யோசித்தேன், ஆனா வார்த்தையிலே இருக்கிற உள்குத்து பெரிய குத்தா இருக்குன்னு கண்டுபிடிச்சி முடிக்கும் முன்னே எனக்கு சொன்னவரு காணாம போயிட்டாரு,தொப்பி விவரம் எப்படினா(?) இவன் எல்லாம் விளங்கமாட்டான்னு என்னையப் பார்த்து சொன்னவங்க எல்லாம் இன்னைக்கு மூக்கு மேல விரலை வச்சி பார்க்கிற மாதிரி சாதனை செய்தால், அவங்களைப் பார்த்து ஹட்ஸ் ஆப் டு யூன்னு புண் பட்ட மனசுக்கு ரெண்டு கட்டு பீடியும், ஒரு பீரும் வாங்கி கொடுத்து மனசை தேத்த சொல்லுவாங்க(?).

சாதனை செய்பவர்களை மீண்டும் சாதனை செய்ய தூண்டுவது,உடலையும்,மனசையும் முதலீடு பண்ணி நொங்கு எப்படி திங்கனுமுன்னு சொல்லி கொடுத்தவரை, நோகாம நொங்கு தின்னுகிட்டு பாராட்டுவது இந்த ஹட்ஸ் ஆப் டு யூ,இந்த சொல் எப்படி வந்து இருக்கும் என்று கால சக்கரத்திலே ஏறாம கொசுவத்திய சுத்தி பார்த்தோமானால், துரைமார்கள் அந்தகாலத்திலே முடி கொட்டினது, முடி கொட்டிகிட்டு இருக்கது, முடி முளைக்காத எல்லோரும் தொப்பிய வச்சி இருந்து இருப்பார்கள், அந்த காலத்திலேயே சாதனையாளர் வரும் போது, தொப்பிய கழட்டி காட்டி அவருக்கு மரியாதை செய்து இருக்கலாம்(?). அதன் பின் நாகரிகம் மாறி தலைக்கு விக் வச்சாலும்,ஆனா ஹட்ஸ் ஆப் டு யூ மாறலை, காலம் மாறினாலும் கருத்து மாறலை என்பதை நிலைநாட்ட சொற்கள் அப்படியே இருக்குன்னு சொல்ல முடியாது, ஏன்னா துரைமார்கள் இன்னும் புதுச்சொல் கண்டு பிடிக்கலை, கண்டு பிடித்து இருந்தால் ஹேர் ஆப் டு யூ ன்னு சொல்லி ரெண்டு தலை முடியை பிடிங்கி வச்சி இருப்போம்

இணையத்திலே இந்த தூய தமிழ் சொல்லாடல் அடிக்கடி பயன்படுத்துவதை நாம் பார்த்து இருப்போம்,அதாவது ஹட்ஸ் ஆப் டு யூ பார் யுவர் கும்மி, ரெண்டு பேருக்கிடையே அறச்சீற்றம்(வசனம் உதவி பாலா அண்ணன்) வரும் போது, நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சொல்லிக்கிட்டு ஒத்தை காலிலே நிக்கும் போது, அதுக்கும் ஒரு ஹட்ஸ் ஆப் டு ஆல். கோவமா பேசினாலும் தொப்பிய கழட்டு, மொக்கயா பேசினாலும் தொப்பிய கழட்டு. ஆணியே பிடுங்காம ஆணி அடிச்ச மாதிரி ஆணித்தரமா கருத்து சொன்னா தொப்பிய கழட்டனும், ஆனா எதுவுமே பேசாம இருந்தா முக்காடு போடணுமா, இதையெல்லாம் கேட்காம விட்டா காலைக்கடன் முடிக்கதுக்கு ௬ட ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்ல வேண்டிய நிலை வரலாம்(?).

பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்னு சொல்லுறதை விட்டுவிட்டு தொப்பியப்போடு, தொப்பிய கழட்டுன்னு பீட்டர் விட்டு பசும்பால் குடிக்கிற காலத்திலேயே   பயமுறுத்து வச்சி இருந்தாங்க.பழையன கழிதலும், புதியன புகுதலும் தமிழுக்கு மட்டும் தானா, இங்கிலிபிசுக்கு கிடையாதா, ஆயிரத்திலே பேசினதை, ஆயிரத்து தொள்ளாயிரத்திலும், இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சும் ஹட்ஸ் ஆப் டு யூ ன்னு சொல்லிக்கிட்டு இருக்கனுமா?

தொப்பி விசத்திலே கொலை வெறி எதிர்ப்பு தெரிவிக்க இன்னொரு சிறப்பு காரணம் இருக்கு, தொப்பி பொரும்பாலும் ஆண்கள் வைக்கிறது, ஆனா பெண்களும் சேர்ந்து இப்ப தொப்பிய கழட்டுறேன்னு சொல்லுறது ஆணாதிக்கத்தை சமுகத்தை பெண்களும் ஆதரிக்கிறார்கள் என்ற நுண் கருத்தை தொலை நோக்கு பார்வையிலே அணுக வேண்டிய இருக்கு, பெண்ணியக்க போராளின்னு பட்டம் வாங்க என்ன பாடு படவேண்டிய இருக்கு, இந்த பொழப்புக்கு நாலு டெக்ஸ்சாஸ் பசு மாடு வாங்கி மேய்க்கலாம்.தாய்குலங்களுக்கு நன்மை(?) செய்யும் பொருட்டாக, இனிமேல ஒரு பூவையோ, ரோசாவை தவித்து, அந்த பூவை காதலர்கள் ஒட்டுமொத்தமா கட்டுக்குத்தகை எடுத்து இருக்காங்களாம். இல்ல தங்க மோதிரமோ கொடுத்து, தொப்பி விசயத்தையே கழட்டி விட்டா மிகவும் நல்லதா இருக்கும், திறைமைக்கு பாராட்டுக்கு பதிலா மொய் வச்சி பரிசு கொடுத்தா சந்தோசம் தானே, அதனாலே இனிமேல பழைய சொற்களை கழித்து விட்டு, புதிய சொற்களைப் பயன்படுத்துவோம் என்று சொல்லி வாய்ப்பளித்த
அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெறுகிறேன்.

பொறுப்பு அறிவித்தல்: துப்பாக்கி குண்டை கடி என்ற சொல்ல பிறகு ஒரு நாளிலே பார்க்கலாம்.  



Tuesday, February 15, 2011

துரைமார்கள் பெயர்களும், தன் மானத்தமிழனும்

அதாகப்பட்டதாவது போன வரம் தீன்/டீன் ஒரு இடுகையைப் போட்டு, அயல் நாடுகளிலே வாழும் தமிழர்கள் தங்கள் பெயரை வெள்ளைக்கார துரைமார்கள் உச்சரிக்க முடியாம, ராப்பகலா தூக்கம் இல்லாம கஷ்டப்பட்டு, துக்கம் தொண்டைய அடைச்சதாலே, போராட்டம்,கலவரம் மற்றும் உண்ணாவிரதம் எதுவுமே இல்லாம தானாகவே முன் வந்து அவர்களின் கவலையைப் போக்க தங்களோட பெயர்களை அவங்க வாயிலே நுழையுற மாதிரி குப்புசாமி-குப்ஸ், சந்தியா-சாண்டி, ஜெயராமன்-ஜே இப்படி சுருக்கி துரைமார்கள் வாயிலே நெல்லை இருட்டுக்கடை அல்வா போல நுழையும் படியா மாத்தி வச்சிக்குறாங்க(?), ஆனா இந்தமாதிரி தன்மானத்தமிழர்கள் மட்டுமே பெயரை மாற்றி கொள்கிறார்களா என்றால் கண்டிப்பாக இல்லை.

மனவாடும், வடக்கூர்காரங்களும் தங்கள் பெயர்களை இதே காரணத்துக்காக மாற்றி வைத்து கொள்கிறார்கள்,கிரிக்கெட் தவிர  இந்த விசயத்திலும்  இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதிலே எனக்கு ஐயம் இருப்பதாக தெரியவில்லை .என் ௬ட வேலை பார்த்த அனப்பத்துல்லா என்ற மனவாடு அனப்ஸ் பேரை மாத்தி வச்சிகிட்டாரு, நான் அனபத்துல்லான்னு சொன்னாலே அவருக்கு கொலைவெறி கோபம்
வரும். யோவ் துரை மார்களுத்தான் உன் பேரை சொல்லமுடியாது, எனக்குமா முடியாது? ன்னு சொன்னவரிடம், பெயர் மரியாதை தெரியாத பக்கியா இருக்கியேன்னு தத்துவமா பேசிட்டு போனாரு,ஒரு நாள்  அவருக்கிட்ட சிக்காகோ போறேன்னு சொன்னேன், அவரு
அதுக்கு சிக்காகோ இல்ல சிகாகோனு சொன்னாரு, இவருக்கு துரைமாரே தேவலாம் போலன்னு நினைத்துகொண்டு பயணத்தை ரத்து பண்ணிட்டு தண்ணியப் போட்டு அவருக்கு நல்லா தண்ணி காட்டினேன், மனுஷன் அதுக்கு அப்புறமா, நான் என்ன சொன்னாலும் மறுத்தே பேச மாட்டாரு.

நம்ம பெயர்களைத்தான் துரைமார்களாலே உச்சரிக்க முடியாம ரெம்ப கஷ்டப் படுறாங்க, ஆனா யாரவது ஒருத்தர் துரைமார்கள் பேரை சரியா உச்சரிக்க முடியலைன்னு புகாரோ இல்ல அனுபவ குறிப்போ எழுதி இருக்கிற மாதிரி தெரியலை,படி அளக்கிற பகவான் கோவிச்சிக்குவாருன்னு வெளியே சொல்லாம இருக்கமா இல்ல, அயல் நாடு வந்து ஆணி பிடிங்கிட்டு இங்கிலிபிசு தெரியலைன்னு அடுத்தவங்க தப்பா நினைப்பாங்கன்னு தன்மானத்தை காக்க, வெள்ளையம்மா, வெள்ளையப்பன் பெயர்களை எல்லாம் கரைத்து குடித்தது போல நடிக்க வேண்டிய இருக்கு(?).

நானும் ஊரை விட்டு விமானம் ஏறும் முன்னே, அலுவலகத்திலே பல நூறு தடவை
சொல்லி அனுப்பினார்கள். நீ வேலைய ஒழுங்கா செய்யுறியோ இல்லையோ, ஆனா துரைமார்களுக்கு எந்த விதமான கண்ணிய குறைச்சல் வரும் படியா நடக்கக்௬டாது.
நானும் நல்லா கோயில் மாடு மாதிரி தலைய ஆட்டிட்டு வந்தேன், வந்த முதல் நாளே அறிமுகப் படலம் எல்லாம் முடிந்து, செய்ய வேண்டிய வேலையைப் பத்தி சொல்லி கிட்டு இருந்தாரு, ஒண்ணுமே புரியலைனாலும், புரிஞ்ச மாதிரியே நடிச்சேன். ரெம்ப அறிவாளியா இருக்கான்னு நினைச்சிகிட்டு, முடிஞ்ச உடனே எனக்கு மின் அஞ்சல் அனுப்புறேன்னு சொல்லிட்டு போனாரு, அவரு மின் அஞ்சல் அனுப்பியதிலே ஒண்ணுமே இல்லை, கேட்டு தெரிஞ்சிக்கலாமுன்னு அவரு அறைக்கு போயிட்டு ஜுஅன் (Juan), ஒரு சந்தேகம்னு கேட்டேன்.

"அவரு யாரு ஜுஅன்?"

"நீங்கதான்?"

"என் பேரு யுவன்.. என்னய்யா பேரை ௬ட சரியா சொல்ல தெரியலையே"

உங்க ஊரிலே ஜெ வை அமுக்கி வாசிக்கனுமுன்னே எனக்கு சொல்லி தரலைன்னு மனசிலே நினைச்சாலும், மன்னிச்சுருங்கன்னு முப்பது தடவை சொல்லிட்டேன். அவரு பேரை நூறு தடவை சொல்லி ஏத்தி வச்சிகிட்டேன்.கொஞ்ச நாள்ல வேலையிலே உலக திறமைய காட்டி (நம்புங்க) கொடி பிடிச்சிகிட்டு இருந்தேன்.எனது திட்ட அணியிலே இருந்தது எல்லாம் உடைஞ்சி போன ரஷ்யாவிலே இருந்து,என்னைய மாதிரி பஞ்சம் பிழைக்க வந்த பெருசுகள்.இவங்ககிட்ட வேலை பார்ப்பதிலே ரெம்ப வசதியான விஷயம், இவங்க பேசுற ஆங்கிலத்தை விட நான் நூறு மடங்கு நல்லாப் பேசுவேன்.அதனாலே நான் இவங்ககிட்ட எப்படி தப்பா பேசினாலும், சரியாப் புரிஞ்சுக்குவாங்க.

 ஒரு நாள் அணியிலே வேலை செய்த ஒருத்தர் பெயரை டோமொர்ட்ரின்னு சொல்லி ௬ப்பிட்டேன்,கேட்டவங்க எல்லாம் என்னைய எப்படியே பார்த்தாங்க, நானும் ரெம்ப அழகா பேரை உச்சரிக்கிறேன்னு நினைச்சி கொஞ்சம் சத்தமாவே ௬ப்பிட்டேன், நான் ௬ப்பிட்டவர்

"எங்க ஐயா எனக்கு ஆசையா வச்ச பேரை இப்படி கொலை பண்ணுறியே?"

வழக்கம் போல தப்பத்தான் சொல்லிட்டேன்னா, அவர்ட்டயும் ஒரு மன்னிப்பு கேட்டு வச்சேன்.அவரு டிமிட்ரியாம், அப்புறமா அதையும் ஏத்தி வச்சேன், ரஷ்ய துரைமார்கள் பெயரின் கடைசி பேரை எல்லாம் படிக்கவே மாட்டேன், அதுக்கு பதிலா நான் நாலு அடி ௬ட வாங்கிக்குவேன். சீனா சப்ப மூக்கன் பெயர்களும் அப்படித்தான், வாயிலே
நுழையாது.சி சான், சூன் சூன்னு பேரு இருக்கும்.

துரைமார்களுக்கு ஏகப்பட்ட சுருக்கப்பெயர்கள் இருக்கும், ராபர்ட்னு இருக்கிறதை பாப் மாத்தி வச்சுக்குவாங்க, இவங்க பெயரை மட்டுமில்லாம, தாத்தா, பாட்டி, வளர்ப்பு தாய், வளர்ப்பு தந்தை வைத்த சொல்லப்பெயரை எல்லாம் தெரிஞ்சிக்க வேண்டிய இருக்கு, காரணம் துரைமார்கள் எல்லாம் ஓடுற குதிரையா இருக்காங்க,நாமும் வளைந்து நெளிந்து அவங்க போக்குக்கு தண்ணி காட்ட வேண்டிய இருக்கு. இப்ப எல்லாம் ஒருத்தர் பெயரை பார்த்தாலே அவரு செல்லப்பெயர் என்னவா இருக்கும், அவரை நண்பர்கள் எப்படி ௬ப்பிடுவாங்க,முன்னாள் காதலி எப்படி ௬ப்பிட்டு இருப்பாங்க, இந்நாள் காதலி எப்படி ௬ப்பிடுவாங்க என்ற வரலாற்று புள்ளி விவரங்களும் கணனியே இல்லாம மண்டைக்குள்ளே எறிடுது.


Monday, January 31, 2011

எனது ஓட்டு கலைஞருக்கே

பொறுப்பு அறிவித்தல்:
ISO தர சான்றிதழ் பெற்ற அரசியல் இடுகை 

இணைய உலகத்திலே தற்போதைய சூழ்நிலையிலே கலைஞரை பத்தி குறை சொல்லி ரெண்டு திட்டு திட்டாம போய்விட்டால் தமிழினத்துரோகி என்ற அவப்பேருக்கு
ஆளாகக்௬டும் என்று நினைத்து இந்த இடுகையை எழுத வேண்டிய கட்டாயம். ஆப்பிரிக்காவிலே கொசு கடித்தாலும் காரணம் கலைஞர் என்று ஒரு மாயை உருவாகி இருப்பது உண்மை. இணையத்தின் எதிர்ப்பு புரட்சி தமிழக மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறதா இல்ல தமிழக மக்களின் மனநிலைய இணையம் பிரதிபலிக்கிறதா என்று தெரியவில்லை.

அடிப்படைய கலைஞரை திட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் அவரு பதிவுலகிலே இல்லை என்பதும் ஒரு மறுக்க முடியாத உண்மை, பதிவுலகிலே இருக்கும் ஒருவரை இப்படி எல்லாம் திட்ட முடியுமான்னு தெரியலை. பச்சைத்துரோகி, கிழபாடு என்பதெல்லாம் சாதாரணமா அவருக்கு கிடைக்கிற மரியாதைகள், கலைஞரை ஓட்டுப் போடக்௬டாது என்றால் யாருக்கு ஓட்டு போடவேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.தமிழ் நாட்டிலே இருக்கிறதே ரெண்டு பெரிய கட்சி, இதை விட்டா வேற யார் ஆட்சிக்கு வருவார்கள்.

பதிவுலக ஆதரவு வரலாறு சற்று திரும்பி பார்த்தோமானால், இலங்கையிலே போர் உச்ச கட்டத்திலே இருக்கும் போது, திருமாவளவனுக்கு ஒரு மிகப்பெரிய ஆதரவு படை கிளம்பியது, காங்கிரஸ் தமிழகத்திலே ஒழிய வேண்டும் என்று வீர சபதம் எடுத்து வெறி கொண்ட சிறுத்தையை வலம் வந்தவர். அவரது தலைமையிலே மாற்று அணி அமைய வேண்டும் என்று மனுப்போட்டு நின்ற நேரம் அவன் இந்திய ரயிலை விட மிக வேகமாக தடம் புரண்டு மறுபடியும் ஒட்டிகொண்டார். இப்படிப்பட்ட தன்மானம் மிக்க தலைவர்கள்  எல்லாம் இப்ப இன்னும் அதே நிலையிலே தான் இருக்காங்க, ஆனா இன்னும் இவர்களை நம்புறோம்(?).

கலைஞருக்கு மாற்று சக்தியாக இருக்கும் புரட்சி தலைவின் வராலாறுகளை புரட்டி பார்த்தோமானால், பொடாவை உருவாக்கிய மத்திய அரசை விட அதிக முறை பயன் படுத்தியவர் என்று விருது கொடுக்கும் அளவுக்கு உபயோகித்தவர்.தமிழர்க்காகவே  வாழும் அண்ணன் தன்மானத்தமிழன் வைகோ இப்போது வெளியே இருந்து இருந்தா புத்தகம் எழுத நேரமில்லை என்று அம்மா உள்ளே தள்ளிவிட்டதாக நினைத்துகொண்டு வேற எங்கும் போக வழி இல்லாமல் இன்னும் இருந்த இடத்திலே இருக்கிறார், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை என்று கலைஞர் சொன்னதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

புரட்சி தலைவி ஆட்சியிலே இருந்து இருந்தா, ஒரு வேளை இலங்கைக்கு படை எடுத்துப் போய், அவர்களை தோற்கடித்து அங்கே ஆட்சியப் பிடித்து இலங்கையை இந்தியாவுடன் இணைத்து இன்னொரு மாநிலம் ஆக்கி இருப்பார் என்று சொல்லமுடியுமா?, யார் ஆட்சியிலே இருந்தாலும், இந்த கொடுமைகள் தொடரும் என்பது மட்டும் உறுதி, இப்போது ஆட்சியிலே கலைஞர் இருக்கிறார், அதனாலே அவரை திட்டுகிறோம், இதே நிலையிலே தலைவி இருந்து இருந்தாலும் இதையே தான் செய்து இருப்போம்.மேலும் தமிழரின் ஒற்றுமைக்கு பதிவுலகமே ஒரு சான்று, இங்கு ஒற்றுமை என்பது அடுத்தவர் என் சட்டையப் பிடிச்சி இழுத்துவிட்டார் என்று இன்னொருவர் குறை சொல்லும் வரை என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கலைஞரை திட்டுவதாலே நமக்கு மனநிம்மதி கிடைக்கும் என்பதை தவிர வேறு ஏதும் பலன் இருப்பதாக தெரியவில்லை, இதை எல்லாம் சொன்னேன்னேனு எனக்கும் வேணா ரெண்டு திட்டு கிடைக்கலாம், இப்படி மக்களின் மன அமைதிக்கு மருந்தாக இருக்கும் அன்பு தலைவர் கலைஞருக்கு எனது ஓட்டு என்று சொல்லிகொள்வதிலே பெருமைப் படுகிறேன்.

இப்படிக்கு,
பஞ்சம் பிழைக்க அயல் நாட்டில் தஞ்சம் புகுந்த தமிழன்.


Sunday, January 30, 2011

விடுமுறை கால விருந்தும், மருந்தும்

ஒரு காலத்திலேயே மருந்தை தண்ணியா குடிச்சவன், கடந்த ஆறு வருசமா மருந்துன்னு தாளிலே எழுதி அதைதான் குடிச்சிக்கிட்டு இருக்கேன்,கடந்த  வருட விடுமுறை கொண்டாட்டத்திலே (நடந்து ரெண்டு மாசம் எழுத நேரமும் இல்ல, நடந்ததும் ஞாபகம் இல்ல) எனக்கு படி அளக்கிற பகவான் விருந்தும்,மருந்தும் பரிமாறப்படும் என்று அறிவித்தார்கள், அறிவிப்பு கேட்ட நாளிலே இருந்து மருந்தின் மலரும் நினைவுகள் மனதை கவ்வி கவுத்துப் போட்டது, அவங்க சொன்ன நாளிலே இருந்து கனவிலே விதவிதமான மருந்துகள் தென்பட்டது.

விருந்து கொடுக்கிற நாளன்று காலையிலே ஐந்து மணிக்கு எழுந்து, ஆறு மணிக்கெல்லாம் அலுவலகம் செல்ல தயாராகிட்டேன்.சும்மாவே பகல்ல என் முகம் தெரியாது, ஆனா அன்றைக்கு என் முகத்திலே அப்படி ஒரு பிரகாசம், காலையிலே எழு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று,சென்றதுமுதல் சாயங்காலம் விருந்து நடைபெறும் இடத்தை குட்டி போட்ட பூனை மாதிரி சுத்தி சுத்தி வந்தேன்.மதிய சாப்பாடும் இறங்கலை. மாலைக்கு சேமித்து வைக்க கொஞ்சம் இடம் வேணுமுன்னு மொத்தமா விட்டு வச்சேன்.

மாலையிலே முத ஆளா அரங்கத்திற்குள் நுழைந்தேன், ரெண்டு ௬ப்பன் கொடுத்தாங்க மருந்து வாங்க, கொடுத்த அடுத்த நிமிசத்திலே ரெண்டு ௬ப்பனையும் கொடுத்து வயிறை நிறைத்தேன்.நம்ம ஊரா இருந்தா மருந்து கொடுக்கிறவருக்கு பத்து ரூபாயைக் கொடுத்து ௬ப்பன் இல்லாமலே ரெண்டை புட்டி ஆட்டயப்போடலாம், ஆனா இங்க துரைமார்கள் ரெம்ப கண்டிப்பானவங்க,விருந்து உபசரிப்பு விதிப்படி நடப்பவர்கள், என்ன செய்யலாமுன்னு யோசனையா இருந்தப்ப, நம்ம ஊரு தாய்குலங்கள் மூணு பேரைப் பார்த்தேன்.அவங்க எல்லாம் மருந்து குடிக்க மாட்டாங்க என்று நம்பிக்கையிலே நேர அவங்ககிட்ட போனேன்.

"உங்களுக்கு எல்லாம் குடிக்கிற பழக்கம் இல்லன்னு தெரியும், அதனாலே உங்ககிட்ட இருக்கிற மருந்து ௬ப்பனை கொடுக்க முடியுமா?"

"ஒ.. தாராளமா" என்று நாலு ௬ப்பைனை கொடுத்தார்கள், ஆறு இருக்கணுமே, நாலு தானே இருக்கு என்றேன், என்கிட்டே இருந்த ரெண்டை ஒரு மனவாடு அப்பவே ஆட்டையப் போட்டுவிட்டான் என்று ஒருத்தங்க  சொன்னாங்க.அந்த மனவாடு என் ௬ட வேலைபார்க்கிற மனவாடா இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே வாங்கின நாலிலே ரெண்டை காலி செய்தேன். குடிப்பவர்கள் சிரமப்படுவார்களே என்று படி அளக்கிற பகவான் நிறைய நொறுக்கு தீனிகள் ஏற்பாடு செய்து வைத்து இருந்தார்கள், அதையும் நாம இருக்கும் இடம் தேடி வந்து, எங்க ஊரு திரை அரங்கிலே முறுக்கு விற்பதைப் போல கையிலே ஏந்திக் கொண்டு வந்தார்கள். நொறுக்கு தீனியிலே கவனம் செலுத்த எனக்கு நேரம் இல்லாத காரணத்தினாலே அடுத்த ௬ப்பைனை கொடுத்து ஒரு பாட்டிலை வாங்கி கையிலே வைத்து இருந்தேன்.பின்னாலே இருந்து ஒருவர் என்னை தட்டினார், அவரு என்னோட வேலைபார்க்கிற மனவாடு என்பதை தெரிந்து கொள்ள ஒரு நிமிஷம் ஆகிப்போச்சி. அவர் என்னிடம்

"எத்தனை போய் இருக்கு?"  
    
"ஏழாவது, உனக்கு?"

"எட்டு முடிந்துவிட்டது, இனிமேல ௬ப்பன் இல்ல, ஒரு நாய் நாலு ௬ப்பனை ஆட்டயப் போட்டுட்டான், உங்க சாம்பார் பெண் ஒருவரிடம் ரெண்டு ௬ப்பனை உசார் பண்ணிட்டு,உங்க தோழிகள் யாரவது இருந்தா சொல்லுங்கன்னு சொல்லி வைத்து இருந்தேன், நான் ஓசி ௬ப்பனை காலி பண்ணிட்டு போகுமுன்னே எவனோ ஆட்டயப்
போட்டுட்டான்,அது நான்னு தெரியாமலே, அவன் ௬ட சேர்த்து எனக்கு நாலு திட்டு திட்டிவிட்டு ௬ப்பனுக்கு ஆட்களைத்தேடி இருவரும் போனோம், போகும் முன்னே மனவாடு, ரெண்டு பேரும் போய் நடனமேடைப்  பக்கம் போகலாம் என்று சொன்னார்.

நான் உடனே "நடனமேடைப் பக்கம் போனால், என்னால ஆடமா வரமுடியாது" என்றேன்

"நீங்க ஒரு நடனகாரன்னு சொல்லவே இல்லை"

"கல்லூரியிலே நான் போடாத ஆட்டமே இல்ல,நான்தான் எங்க கல்லூரி மைக்கல்
ஜாக்சன்"

"நீ கண்டிப்பா ஆடியே ஆகணும்,வா போகலாம்"

ரெண்டு பேரும் நடனமேடைபக்கம் போனோம்.அங்க வெள்ளையம்மாக்களும்,
வெள்ளையப்பன்களும் நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள். சாதாரண நேரமா இருந்தா துரைமார்களை பார்த்து சிரிக்கவே மாட்டேன், பதிலுக்கு இங்கலிபிசுல பேச ஆரம்பிச்சிட்டா பதில் சொல்ல முடியாதுன்னு ஒதுங்கியே போவேன், ஆனால்
அன்றைக்கு ஆடுற எல்லோரிடமும் உலக பீட்டர் விட்டேன். அடுத்த அஞ்சு நிமிசத்திலே மனவாடு ஒரு சிலுசிலுப்பு சட்டைய கொண்டு வந்து என்னையப் போடச்சொன்னான், மாப்ள பாசமா சட்டையகொடுக்கான்னு நானும் போட்டுகிட்டேன். அடுத்த பாட்டு வரும் போது, இப்போது இந்திய மைக்கல் ஜாக்சன் நடனனமாடுகிறார் என்று அறிவிப்பு வந்தது.

நானும் அந்த முகரையப் பார்க்கணுமுன்னு திரும்பினா எல்லோரும் என்னையப் பார்த்துகிட்டு இருந்தாங்க, அப்பத்தான் எனக்கு தெரியும் நான் தான் அதுன்னு, என்ன செய்யன்னு தெரியலையே, யோசிக்க நேரமில்லை, சுத்தி இருந்த ௬ட்டம் எல்லாம் கை தட்டி ஆரவாரம் பண்ணினாங்க,மனவாடு மண்ணை கவ்வ வச்சிட்டானேன்னு,எனக்கு  தெரிஞ்ச ஆட்டத்தை போட்டேன், அதாவது கையையும் காலையும் உதைச்சி உடற்பயிற்சி செய்தேன்.என்னோட ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நிமிடமே ௬ட்டம் கலைய ஆரம்பித்து, அடுத்த நிமிசத்திலே ஒரு வெள்ளையம்மா வந்து என்னோட சிலுசிலுப்பு சட்டைய கழட்டிட்டு இனிமேல இந்த பக்கம் வந்த அடி பிச்சிருவேன்னு சொல்லிட்டாங்க, அதோட பாட்டையும் மாத்திட்டாங்க.

பக்கத்திலே இருந்த மனவாடு "நீ என்னைக்காவது ஆட்டம்னு தாள்யாவது எழுதிபார்த்து இருக்கியா, உன்னைய மைக்கல் ஜாக்சன் சொன்னதுக்கு என்னையும் மேடை பக்கம் வராதேன்னு சொல்லிட்டாங்க. சும்மா இருந்தா உண்மையச்சொல்லி இருப்பேன், மருந்து உள்ள போனதாலே மலையே புரட்டுற பலம் இருப்பதாலே, அவன்கிட்ட மேடை சரியில்லைன்னு சொன்னேன். அவன் என்கிட்டே உன் மூஞ்சியிலே என் பீச்சாங்கைய
வைக்கன்னு சென்னை பாசையிலே திட்டிட்டான்.

நடனமேடைய விட்டு வெளியே வந்த நாங்க ரெண்டு பேரும், வடக்கூர்காரட்ட ஆட்டையப் போட்ட ௬ப்பனை வைத்து, மறுபடியும் ஒரு பாட்டிலை ஏத்திட்டு மீண்டும்  நடனமேடைப் பக்கம் போனோம். அங்க நாங்க முதல்ல ௬ப்பன் வாங்கின பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள், அவங்க நடனத்தை ரசித்துக்கொண்டு இருந்தார்கள். என்னனு தெரியலை திடிர்ன்னு ஒரு ஞானோதயம், பெண்ணிய போராளிய மாறனுமுண்ணு மனசிலே எண்ணம் வந்து விட அவங்ககிட்ட போய் நீங்களும் நடனம் ஆடலாமேன்னு சொன்னேன். அவங்க எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்க, அரைமணி நேரத்துக்கு பெண்ணுரிமை காவலர்கள் எழுதியதை சொன்னேன்,என்னோட  தொல்லை தாங்க முடியாமல் அவங்களும் மேடை ஏறி ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினாங்க.

பாட்டு முடிஞ்சதும் அவங்க கீழே இறங்க ஆரம்பிக்கும் போது, இன்னும் ஒரே ஒரு பாட்டுன்னு கெஞ்சி மறுபடியும் மேல போகவச்சேன்,இப்படியே சொல்லி சொல்லி, பத்து பாட்டு முடிஞ்சி போச்சி, களைப்பிலே மயங்கி விழுற மாதிரி ஆகிட்டாங்க, இருந்தாலும் நான் ஒரு பாட்டுன்னு சொன்னேன்.அவங்க பக்கத்திலே நின்ற மனவாடைப் பார்த்தது ஏதோ சைகையிலே சொன்னாங்க, அவன் என் கிட்ட மாப்ள என்கிட்டே  இன்னும்  ரெண்டு ஒசிக்௬ப்பன் இருக்குன்னு சொன்னதும், ஓடியே போயிட்டேன். அடுத்த ஒரு பாட்டிலையும் காலிபண்ணிட்டு வந்து பார்த்தால்,அந்த மூணு பெண்களை காணும், உடனே அறை முழுவதும் தேடிப்பார்த்தேன், கண்ணுக்கு தென்படலை. உடனே மனவாடுக்கிட்ட

"அந்த பெண்களை எங்கன்னு கேட்டேன்"

"டேய் நீ அவங்களுக்கு பண்ணின கொடுமைக்கு, உன்னையெல்லாம் நடுத்தெருவிலே நிக்க வச்சி சுடனும்"

"மகளிர் உரிமை காவலனா மாற நினச்சது தப்பா?"

"நம்ம ஊரா இருந்தா, உன்னைய மகளிர் காவல் நிலையத்துக்கு ௬ட்டிட்டு போய் இருப்பாங்க, எத்தனை பாட்டுக்கு தான் அவங்க ஆடுவாங்க,மேடைய விட்டு வெளிய போக இருந்தவங்களை கை எல்லாம் பிடிச்சி மேடையிலே மறுபடி ஏத்தி விட்ட,உன்னையெல்லாம் சங்கிலியிலே கட்டிபோட்டுதான் குடிக்க சொல்லணும்,இனிமேல பெண்களை முன்னேத்துறேன்னு நினைச்சி இந்த மாதிரி அழிச்சாட்டியம் பண்ணின, உன் தலையிலே கல்லைத்தூக்கி போட்டுருவேன்"

"இவ்வளவு நடந்ததா எனக்கு தெரியவே இல்லையே!!!!"

"நீ உன் நிலையிலே இருந்தாதானே தெரியும்"

"நான் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் நாளைக்கு"

"நீ உண்மையிலே நல்லது செய்யணுமுன்னு நினைச்சா, இந்த சம்பவம் நடந்ததா வெளிக்காட்டதே, குடி போதையிலே உங்க சாம்பார்வாடு என்ன செய்யுறேன்னு தெரியாம,உங்களை கொடுமைப்படுத்திட்டான்னு நான் அவங்க கிட்ட சொல்லி சமாளிக்கிறேன்"

"இப்ப என்ன செய்ய?"

"பெட்டிய கட்டிட்டு வீட்டுக்கு போகலாம் வா"

வீட்டுக்கு வந்து சேர நடுநிசி ஆகிப்போச்சி, இவ்வளவு நேரமும் வீர வசனம் பேசிகிட்டு வந்த  நான் வீட்டுக்கு வந்த உடனே வாயே திறக்கமுடியலை,பெண் உரிமை காவலனா, பெண்ணியக்க போராளியா மாற நினச்ச எனக்கு அடுத்த ரெண்டு வாரத்துக்கு வீட்டிலே கஞ்சி இல்லாம போச்சி.இப்ப எல்லாம் மருந்து கனவிலே ௬ட வருவதில்லை.  


Wednesday, January 26, 2011

கணித்துறையும்,கடவுச்சொல்லும்


கணித்துறையிலே வேலை பார்க்கிறவங்க கடவுச்சீட்டு ௬ட இல்லாம இருக்கலாம்,ஆனா கடவுச்சொல் இல்லாம இருக்க முடியாது, வெள்ளைக்கார துரைமார்கள் நமக்கு ஓசியிலே உலகவிசயம் முதல், உள்ளூர் பட்ட சரக்கு வரை பேசுவதுக்கு பல இலவச மென் பொருட்கள் கொடுத்து இருந்தாலும், அதை எல்லாம் பாவிக்க தனிப்பட்ட பெயரும்,கடவுச்சொல்லும் அவசியமாக  இருக்கிறது. துரைமார்கள் தண்ணியப் போட்டுட்டு நடுத்தெருவிலே நட்டுவாக்காலி ஆட்டம் ஆடிகிட்டே இலவசமா முத்தபடம் காட்டினாலும், தனிமனித உரிமைய ரெம்ப மதிப்பவர்கள், அதாவது பல் இருக்கவன் பக்கடா திங்கான் என்ற பொன்னான பழமொழிக்கு ஏற்ப வாழ்பவர்கள்,நோகாம நொங்கு திங்கவருகிட்ட போய், நீ ஏன் நொங்கு திங்கன்னு கேட்க௬டாது, அவரு கேட்டவரு நொங்கை கழட்டி விட்டுடுவாரு.

இப்பேர்ப்பட்ட மகான்கள் தயாரித்த மென் பொருட்களை பாவிக்கிற எல்லோருக்கும் கடவுச்சொல் பத்தி நல்லா தெரிந்து இருக்கும், மின் அஞ்சல் முகவரி ஆகட்டும், மின் அரட்டை முகவரியாகட்டும் எல்லாமே கடவுச்சொல்லிலே இருக்கிறது நம்மோட ரகசியங்கள், உங்க கடவுச்சொல்லை ஆட்டையப் போட்டுவிட்டால், ரகசியங்கள் எல்லாம் வெளியே வந்து நாம ஒரு பொதுஜனம் ஆகிடுவோம். துரைமார்கள் ஒண்ணு ரெண்டு மென் பொருட்கள் கொடுத்து இருந்தா கடவுச்சொல் ஞாபகம் வைத்து இருப்பது சுலபம், ஓசியிலே கிடைக்கிறது என்பதற்காக கிடைக்கிற எல்லாம் இடத்திலேயும் துண்டு போட்டு வைக்கிற என்னைமாதிரி ஆட்கள் கடவுச்சொல் ஞாபகம் வைக்க சம்பளத்துக்கு ஆள் வைக்க வேண்டிய வரும்.

இந்தமாதிரி மென் பொருட்களுக்கு  எல்லாம் கடவுச்சொல் ஒரு தடவை கொடுத்தப் போதும், நாம மாத்தாத வரை ஒண்ணும் பிரச்சனை இல்லை, ஆனா அலுவலகங்களிலே வேலை செய்பவர்கள் கடவுச்சொல்லை நிரந்தரமா வைத்து இருக்க முடியாது, வேலை பார்க்கிற நிறுவன கொள்கைப்படி ஒவ்வொரு நாப்பதுநாளுக்கு ஒரு தடவையோ மாதம் ஒரு முறையோ கடவுச்சொல்லை மாத்தணும். அதாவது செய்யுற வேலையும், வாங்குற ௬லியும் நிரந்தரம் இல்லைன்னு மறைமுகமா சொல்லுறதுதான் இந்த கொள்கை. கடவுச்சொல் மாத்தும் போது, இப்ப பயன்படுத்திக் கிட்டு இருக்கிற முன்னாள் காதலன்/காதலி(?) பெயரையோ, இதுக்கு முன்னாடி பயன்படுத்திய காதலன்/காதலிகள்(?) பெயரையோ பயன் படுத்த முடியாது. ஆண் பெண் ரெண்டு பெயரையும் எழுதி நான் ஒரு பொதுநலவாதி என்று நிருபித்துள்ளேன்(பதிவுலகம் ஒரு மனுசனை என்ன பாடு படுத்துது பாருங்க).

கடவுச்சொல் வைப்பதற்க்கெனவே பல சூத்திரங்கள கடைபிடிப்பார்கள், அடுத்தவங்களாலே கண்டு பிடிக்க முடியாத படி கடவுச்சொல் வைப்பதிலே அலாதி பிரியம். கடவுச்சொல் எப்படி இருக்கனுமுன்னு கணணி ஜோசியம் எல்லாம் பார்ப்பாங்க(?).என்னதான் திடமா கனமா கடவுச்சொல் வைத்தாலும்,கொடுத்த சரக்கை சரியா செய்யலைனா, அடுத்த நாளே அலுவலகம் போக முடியாது. நானும் வேலைக்கு சேர்த்த புதுசிலே இப்படித்தான் கடவுச்சொல்லை கண்டு கலங்கி, முதலிலே பிடிச்ச நடிகர்கள், நடிகைகள் பெயர்கள், கொஞ்ச நாள் கழித்து, நான் போட்ட துண்டுகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து, அவங்க பேரு, அப்புறமா பஸ்ல பேரு கேட்டவங்க ,ரயில்ல எக்ஸ்குஸ்மி சொன்னவங்க, ஆடோவிலே அல்லோ சொன்னவங்க இவங்க பேரு எல்லாம் வைத்து முடித்து விட்டேன், ஆனா கடவுச்சொல் முடியவில்லை.

சூத்திரம் போட்டு கடவுச்சொல் போட்டுப்பார்த்தேன் தற்கொலைன்னு வந்தது.சூத்திரம் எழுதுவதும், தற்கொலையும் ஒண்ணுதான்னு அப்படியே திட்டத்தை கை விட்டேன். ஆனாலும் கடவுச்சொல் இம்சை தாங்க முடியலை. என்ன செய்யன்னு தெரியலை, சோறு தண்ணி இறங்கலை. சும்மாவே வேலை செய்ய மாட்டேன், அதுவும் கவலை வந்துவிட்டால் வேலையைப் பத்தி யோசிக்கவே மாட்டேன்.கடவுச்சொலை பற்றி   யோசித்தேன், யோசித்தேன், விடையே கிடைக்கலை.

ஆங்கிலத்திலே புளி வித்தாலும், நான் ஒரு டமில் புலி என்பது ஞாபகம் வந்தது, உடனே கடவுச் சொல் கவலை, பகலவனை கண்ட பனிபோல, தண்ணி அடிச்சிட்டு வண்டி ஓட்டும் போது காவல் துறையைப் பார்த்ததும் ஓடிப்போகும் போதைபோல என்னைவிட்டு ஓடிப்போனது. என்னோட கட்டுக்கடங்கா தமிழார்வ போதை தனிய நான் முதல்ல வைத்த கடவுச்சொல் "கொய்யால", அந்த பேரு வச்ச அடுத்த நாளே மறந்து போச்சி, ஆலுவலக கணணியிலே நுழைய முடியலை,அருகிலே இருந்த நண்பர்  பொறுமை இழந்து "கொய்யால நீ என்ன பேருதான் மாத்தின", நான் சொன்னேன் "கொய்யால", இந்த வரிசை ஆரம்பித்த நாள் முதல் இந்த நாள் வரை கடவுச் சொல்லுக்குக்கு பஞ்சமே வந்ததில்லை, இந்த வகையிலே ஒரு சில உதாரணங்கள் "முட்டாள்", "மடையன்". இந்த மாதிரி மிகப்பெரிய பட்டியலே இருக்கு என்னிடம் வேண்டுமா உங்களுக்கு?


Sunday, January 9, 2011

கிரிக்கெட்டும் சமுதாய சீர்கேடும்

பொறுப்பு அறிவித்தல் ஒன்று : தலைப்பிலே தான் காரம் அதிகமா இருக்கு, இடுகையிலே காரம் குறைவாத்தான் போட்டு இருக்கேன், படிச்சி முடிச்ச உடனே உப்பு சப்பு இல்லைன்னு தோணலாம்.

பொறுப்பு அறிவித்தல் ரெண்டு : நீங்க கொலைவெறி கிரிக்கெட் ரசிகரா இந்த இடுகைய தவிப்பது நலம்.

பொறுப்பு அறிவித்தல் மூன்று: இந்தியாவின் இறையாண்மை மற்றும்  பொறைஆண்மை அதுக்கு சட்னி சாம்பார் எல்லாம் கிரிக்கெட் விளையாட்டிலே தான் இருக்கிறது என்று
நினைப்பவர்களாக இருந்தாலும், இந்த இடுகையை தவிப்பது நலம்.

பொறுப்பை பொறுப்பா அறிவிப்போர் சங்கத்திலே உறுப்பினரா இருப்பதினாலே, இவ்வளவு  பொறுப்பா பொறுப்பை அறிவித்திருக்கிறேன்.சமுக சீர்திருத்த கருத்துக்களை தெரிவித்து முற்ப்போக்கு, பிற்ப்போக்கு எழுத்தாளர் வரிசைப் பட்டியலிலே முதல் வரிசைக்கு வர முயற்சி எடுக்கலை என்பதை தாழ்மையோடு தெரிவித்துக்கொண்டு இடுகைக்கு கடந்து செல்லலாம்.

அதகப்பட்டதாவது பல வருசங்களுக்கு முன்னாலே ஊரிலே ரப்பர் பந்தையும், களி மட்டையை எடுத்துக்கொண்டு ஊருக்கு ஒதுக்கு புறமா பீடி குடிக்க ஒதுங்கும் போது தான்  கிரிக்கெட் எனக்கு பரிச்சயமானது.களி மட்டையிலே இருந்து கிரிக்கெட் மட்டை வாங்க போய் மட்டையாகிட்டு வந்த நாள்முதலிலே இருந்து இன்றைய வரைக்கும் கிரிக்கெட் ரத்தத்திலே கலந்து விட்டது.இந்த அளவுக்கு கிரிக்கெட் பைத்தியம் ஆகிபோவேன்னு நினைக்கவே இல்லை.

ஆரம்பத்திலே நான் ஆடுற ஆட்டத்திலே கவனம் இருந்தாலும், தொலைகாட்சிகளின் அறிமுகத்துக்கு பின்னால் அடுத்தவங்க ஆடுற ஆட்டத்திலே கவனம் செலுத்த ஆரம்பித்தேன், கொஞ்ச நாளிலே கிரிக்கெட் ஆட்டம் தொலைகாட்சியிலே பார்க்கவில்லை என்றால் சீக்கு வந்த கோழி மாதிரி மனசு சுருண்டு படுத்துக்குவேன்.சோறு தண்ணி இல்லாம பத்து நாள் வேணா பட்டினி கிடப்பேன், ஆனா கிரிக்கெட் பார்க்கமா ஒரு நிமிஷம் ௬ட இருக்க முடியாது.

கிரிக்கெட் ஆட்டம் பார்க்க ஆரம்பித்து விட்டால், உலகத்திலே உள்ள எல்லா மூட நம்பிக்கைகளையும் கடை பிடிப்பேன், அதாவது இந்தியாவுக்கு எதிரா ஆடும் அணிக்கு விக்கெட் விலலைனா ஒத்தை கண்ணிலே பார்க்கிறது, தொலைக்காட்சி பெட்டிக்கு  பின்னாடி முதுகை வச்சி பார்க்கிறது. முத ஓவர் கன்னி ஓவர்(கிரிக்கெட் கண்டுபிடிச்சவன்  ஆணாதிக்கவாதியோ?)  ஆகிட்டா எதிரணிக்கு விக்கெட்டே விழாது, டவுசரை போட்டுக்கிட்டு ஒத்தை காலிலே நின்னு பீடி குடிக்கிறது, இப்படி பல வேலைகளை ரெட்டையா செய்யாமா ஒத்தையா செய்வேன். இப்படி 999 விதமான மூட நம்பிக்கை பட்டியல்களை வைத்து இருந்தேன்.ஆட்டம் நடக்கும் போது ஊரிலே தீ மிதிப்பு நடந்தா, அங்கேயும் போய் பூக்குழி இறங்கி இருப்பேன். நல்லவேளை இதுநாள் வரைக்கும் அப்படி நடக்கலை.

உலகத்திலே உள்ள அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களின் பெயரை மட்டுமல்லாம, அவங்களோட முத சம்சாரம், ரெண்டாவது சம்சாரம்,நடப்பிலே யாரை வச்சி இருக்கா போன்ற கிசு கிசு தகவல்களையும் சேகரித்து வைத்து இருந்தேன். இந்த அர்பணிப்பை படிப்பிலே காட்டி இருந்தால் இன்று நானும் ஒரு விஞ்ஞானியாகி இந்தியாவிலே சம்பளம் குறைவாக கிடைகிறது என்று நாசாவிலே சேர்ந்து தாய் நாட்டுக்கும், மண்ணுக்கும் பெருமை சேர்த்து இருப்பேன்.

கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமால், ஆட்டம் முடிஞ்ச உடனே, அதைபத்தி சிலாகித்து போற வாரவங்களிடம் பேசிக்கொண்டு இருப்பேன், ஆக வாழ்கையிலே நான் என்னையப் பத்தி பேசினதை விட கிரிக்கெட் பத்திதான் நிறைய பேசி இருக்கேன். அந்த ஆட்டத்திலே அவர் அப்படி அடித்து இருக்கவேண்டும். இவருக்கு முன்னால் அவரை களத்திலே இறக்கி விட்டு இருக்க வேண்டும் என்று விமர்சனம் சொல்லுவேன். இந்தியாவிலே இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு கோச் வேலைக்கு ஆள் எடுத்தால் குறைந்த பட்சம் ஒரு 50 கோடி பேரு தயாரா இருப்பாங்க.

ஆட்டம் நடக்கும் போது மின்சாரம் தடைபட்டுவிட்டால், திட்டு மழையாய்ப் பொழியும், இருந்தாலும் அடுத்த வினாடியே பல தொல்லை பேசிகளை அழைத்து நடப்பு ஓட்டம் விவரம் சேகரிப்பேன்.ஆட்டத்திலே இந்தியா ஜெயித்தா வாய் பூராம் பல்லா இருக்கும், தோத்திட்டா பாகிஸ்தான் ௬ட சண்டை போட்டு தோத்த மாதிரி பல் போன கிழவன் போல சோகம் ஆகிடுவேன். கிரிக்கெட் ஆட்டத்திலே இந்தியா தோல்வி அடைந்து விட்டது என்றால், அதற்கு அப்புறமா எந்த நிலையிலே இருந்து முந்திய ஆட்டம் பார்த்தேனோ, அந்த நிலைக்கு மறுபடி போகவே மாட்டேன், வெற்றி அடைந்தால்  அதே நிலையிலே இருந்து பார்ப்பேன் அடுத்து இந்தியா தோல்வி அடையும் வரை.

இப்படி கொலைவெறியா கிரிக்கெட் பார்த்து, நான் ஒரு பொறுப்பான இந்திய பிரஜை என்று நிருபித்து கொண்டு இருந்த காலத்திலே தான், நடக்கிற போட்டியின் முடிவை முன் ௬ட்டியே ஒரு கமிட்டி முடிவு செய்து, அந்த கமிட்டி செயல்பாட்டின் படி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் நிச்சக்கப்படுகிறது என்று செய்தி தாள்களிலே அடிப்பட்டது, பக்கத்திலே சமந்தப்பட்ட வீரர்கள் வடக்கூர்காரிகளிடம் பல்லை காட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படமும் பார்த்தேன், ஆக இவங்க நோகாம நொங்கு திங்கதுக்கு, நான் நொண்டி நொண்டி தொலைகாட்சி பார்த்தது எல்லாம் வீணாப் போச்சேன்னு நினைச்சேன்.

விளையாட்டை விட்டு வெளியே வந்து யோசித்துப் பார்த்தால், இவங்க விளையாட்டுக்குள் நுழையுறதே வடக்கூர் நடிகைகளுக்கு துண்டு போடத்தானா என்ற எண்ணம் வந்தது.மேலும் அதுவும் ஒரு விளையாட்டு, அதை விளையாட்டாத்தான் பார்க்கணும் என்ற என்னோட அறிவுக்கண் திறந்தது. இந்தியாவிலே கிரிக்கெட் மட்டுமா இருக்கிறது, இன்னும் அநேக விளையாட்டுக்கள் இருக்கிறது, அவைகளை  கிரிக்கெட் போதை மறைத்துவிட்டது, செய்தி தாள்களிலும் மற்ற விளையாட்டுக்கள் மாற்றான் தாய் பிள்ளைகள் போல சித்தரிக்கபடுகிறது.இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதே பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை.

இரத்தமும் சதையுமா இருந்த நானும் கிரிக்கெட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தோம், கிரிக்கெட் பத்தி பேசலைனா வாழ்கையே சூனியமா போய்டுமே என்று நினைத்த காலம் மெல்ல மாற ஆரம்பித்தது.கொஞ்சம் கொஞ்சமாக விட்டு வந்து, முழுவதும் விலகிவிட்டேன்,நான் பார்ப்பதை நிறுத்திவிட்டாலும், கிரிக்கெட் இன்னும்  அழிந்து விடவில்லை, பார்ப்பவர்களும் இன்னும் நின்று விடவில்லை.