Friday, June 26, 2009

ஓசையில்லா மனசு

பயண களைப்பு இன்னும் தீராத நிலையிலும், அவனைப் பற்றி யோசித்த களைப்பிலே இன்னும் கடுப்பாகி போனாள் கலை, இத்தனை வருஷம் கழித்து அவனை பார்ப்பேன் என்றும் நினைக்காத நிலையிலே, இன்று அவனுக்கு மேலாளர் ஆன்சைட்ல, அவன் பண்ணின காரியத்துக்கு அவன் மேல ஆத்திரம் விறகு கட்டை மாதிரி பத்தி எரிந்தாலும், அதை அணைக்க அவளை சாந்தப் படுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தாள், அன்று என்ன நடந்ததுனு கொசுவத்தியை அவளே சுத்த மனம் இல்லாம இருக்கும் போது நான் சுத்தினா நாகரிகம் இருக்காது.அந்த இடத்தை விட்டு வேற ப்ராஜெக்ட் போகும் எண்ணம் இருந்தாலும், இந்த சந்தர்ப்பத்திலே அவனுக்கு நல்ல படம் காட்டனும் என்ற எண்ணமும் இருந்தது.

வியாபார உக்தியிலே நீங்க எதை கொடுத்தாலும் ரெண்டு மாசத்திலே முடித்துவிடுவோம்,இந்த வசனத்தை எல்லா முதாலளிமாரிடம் பேசியே தான்னோட முதலாளிக்கு வருமானத்தை ஈட்டும் நாணயமானவர்களினால் கிடைத்த ப்ராஜெக்ட் இது,அதனாலே அது ஒரு வாரத்திற்கு அவளால் வேற சிந்தனைக்கு இடம் இல்லாம போனது, கடைசி வரைக்கு அப்படியே போய் இருந்தால், நான் இதை எழுதி உங்களை இப்படி கொலைவெறி மொக்கை போட வேண்டிய அவசியம் இருந்து இருக்காது, அடுத்த வார வெள்ளி கிழமை கலை அலுவலகத்தை விட்டு அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தாள் மறுநாள் நயாகரா சுற்றி பார்க்க சொல்ல இருப்பதால், தனக்கு வேண்டிய பொருட்களை ஷாப்பிங் பண்ண கிளம்பினாள்.

அலுவலகத்துக்கு கிழே மணி நின்று கொண்டு இருந்தான். கலை வருவது தெரிந்ததும் அவளிடம் பேச்சு கொடுத்தான்.

"கலை, உன்௬ட கொஞ்சம் தனியாப் பேசணும்"

"எனக்கு நேரமில்லை, அதுமில்லாம இந்த மாதிரி வழி மறித்து பேசுறது, எனக்கு பிடிக்காது"

"இந்த பைல்ல இருக்க டாகுமென்ட்ஸ் படிச்சிட்டு வாங்க, திங்கள் கிழமை சந்திக்கலாம்" அவள் கையிலே கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

"ஸ்டுப்பிட்" ன்னு சொன்னது அவனுக்கு கேட்கலைனாலும், சொன்னதிலே அவளுக்கு சந்தோசம். வீட்டிக்கு போய், அதை ஒரு மூலையிலே விட்டு எரித்தாள்.

திங்கட் கிழமை, மணியின் மேலாளர் அழைப்பு விடுத்தார் காலையிலே,ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் முன்னே கிளைன்ட் எஸ்காலேசன் எப்படி வந்ததுனு யோசனையிலே அவர் கதவை திறந்து உள்ளே போன மணி.அங்கே கலையும் இருந்தாள்.அவளைப் பார்த்ததும், காரணம் என்னவா இருக்கும் என்பதை ஊகித்தாலும், என்னனு தெரிஞ்சிக்க உள்ளே நுழைந்தான்.

"மணி, நான் உங்களுக்கு ப்ராஜெக்ட்க்கு ப்ரோபோசல் எழுத சொன்னா, நீங்க உங்க லைப் க்கு ப்ரோபோசல் எழுதி கொடுக்குறீங்க"

"வாட் டூ யு மீன் ?"

"ஐ மீன், வாட் டூ யு மென்ட் ஹியர்" கையிலே உள்ள கடிதத்தை காட்டினாள்.

"நரேஷ், அது என்ன கடிதமுனு கலை சொன்னாங்க?"

"காதல் கடிதம் !!!"

"கலை நீங்க அதை கொஞ்சம் படிச்சி காட்டுங்க?"

"அன்புள்ள கலைக்கு,

இது எப்படி நடந்ததுன்னு எனக்கு தெரியலை,என்னோட அனுமதி இல்லாம நடந்து இருக்கு, உங்களிடம் யாரவது கேட்டால், உங்களுக்கு இதிலே விருப்பம் இல்லைன்னு சொல்லிடுங்க"
அன்புடன்
மாணி வண்ணான் "


"மாணி வண்ணான்???"

"ரமேஷ், ரெம்ப நாள் கழிச்சி தமிழ்ல எழுதினேன், அதான் இப்படி"

"ரெம்ப முக்கியம் இந்த எழுத்து பிழை ரமேஷ், இதை இவன் ஏன் எழுதனும் ?"

"கலை இது காதல் கடிதமா ?,எனக்கு ஒண்ணுமே புரியலை, ஒரே பின்நவினத்துவம் மாதிரி இருக்கு ?"

"உனக்கு காரணம் தெரியும், ஏன் எழுதினேன்னு?"

"வாட் நான்சென்ஸ் திஸ், எனக்கு எப்படி தெரியும்?"

சரி, நானே சொல்லுறேன், ரமேஷ் நான் சொல்வது உண்மை, ஒரு சிறு விளக்கம் கொடுத்தான், ரமேஷ் அதை கேட்டு விட்டு கலையிடம் விசாரித்தான்.அவளால அதுக்கு பதில் சொல்லமுடியாமல் மவுனமா இருந்தாள்.

"இப்ப சொல்லுங்க ரமேஷ், நான் செய்ததிலே என்ன தப்பு இருக்கு?"

"மணி,கலை நாம செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு, நீங்க ரெண்டு பெரும் பேசி ஒரு முடிவு எடுங்க, ஆனால் ப்ராஜெக்டை பாதிக்க ௬டாது, எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு,நான் கிளம்புறேன்" அடுத்த நிமிஷம் இருவரும் தனித்து விடப்பட்டனர்.

"நீ நல்லவன்னு பேர் எடுக்க, அடுத்தவங்களை கெட்டவங்க ஆக்காதே" என்று அவன் எழுதிய கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு சென்றாள்.

ஒருவாரம் கழித்து,மணிக்கு மொபைலுக்கு போன் வந்தது இந்தியாவிலே இருந்து அவன் அம்மாவிடம் இருந்து சம்பிரதாய பேச்சுகள் எல்லாம் முடிந்து அவனிடம்

"டேய் நான் போன வாரம் போட்டோ அனுப்பிய வீட்டிலே இருந்து தகவல் சொல்லி அனுப்பி இருக்காங்க"

"அம்மா வாரம் ஒரு போட்டோ அனுப்பி வைக்குறீங்க, எந்த பொண்ணு, எந்த போட்டோ?"

சரி..சரி.. நான் மறுபடியும் அனுப்பி வைக்கிறேன், நீயே பாரு, இன்னொரு விசயமும் இருக்கு, அதையும் அனுப்பி வைக்கிறேன்"

"என்ன அது?"

"மெயில் பாரு புரியும்?"

போன் அனைத்து விட்டு மெயில் செக் பண்ணினான், அதிலே வந்த புகைபடத்தை பார்த்து விட்டு,அவனால் நம்ப முடிய வில்லை,பின் குறிப்பிலே இருந்த நம்பர் க்கு போன் பண்ணிய போது எதிர் முனையிலே

"ஹலோ, கலை ஹியர், மே ஐ நோ, ஹூ இஸ் ஆன் தி லைன்" பதில் சொல்லாம போன் இணைப்பை துண்டித்தான்.

மறுபடி வீட்டுக்கு போன் பண்ணினான்

"அம்மா, நீங்க சரியான போட்டோ தான், அனுப்பி வச்சீங்காளா?"

"ஆமா, அது தான் போட்டோ"

"இந்த பெண்ணை சம்மதிக்க வாய்ப்பு இல்லையே!!!!!"

"இந்த பெண்ணோட அப்பாவிடம் நேத்து பேசினேன், அவங்க பெண்ணு இப்ப அமெரிக்காவிலே தான் இருக்கு, அது கிட்டயும் உன் போட்டோவை அனுப்பி சம்மதம் கேட்டு தான் முடிவு எடுத்து இருக்கு, அந்த பெண்ணோட போன் நம்பர் அவரு தான் கொடுத்தாரு, நீயே பேசிக்கோ"

"சரி, நீங்க போன் வையுங்க"

அன்று மாலை கலை அலுவலகத்தை விட்டு வெளியே வரும் போது

"கலை, நான் காபி குடிக்க போகிறேன், நீயும் வருகிறாயா?"

"நான் காபி குடிக்கிறது இல்லை"

"அப்ப டீ?"

"கம் ஆன் மணி, ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்?"

"என் ௬ட நீ வரலையா?"

"நான் முன்னமே பதில் சொல்லிட்டேன்"

"சரி , நாளைக்கு பார்க்கலாம்" என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் பக்கத்து
"ஸ்டார் பக்ஸ்" கடைக்குள் நுழைந்தான்.கடையிலே காப்பியை வாங்கி விட்டு திரும்பிய போது அவனுக்கு எதிரே கலை நின்று கொண்டு இருந்தாள்.

"வரலைனு சொன்னே?"

"மனசை மாத்திகிட்டேன்"

"ம்.. எனக்கும் தெரியும் ?"

"வாட் டூ யு மீன்?"

"யு நோ, வாட் ஐ மென்ட்?"

"நீ சின்ன வயசிலே எனக்கு கொடுத்த காதல் கடிதத்துக்கு தண்டனை கொடுக்க முடிவு பண்ணிட்டேன்"

"அதை ஏத்துக்க நானும் தாயார் தான்"

இருவருமே சிரித்து கொண்டனர்,அதற்க்கு மேல அங்கே நிற்பது நாகரிகம் இல்லை என்ற காரணத்திலே அப்படியே ப்ரோக்ளின் பிரிட்ஜ் க்கு வந்து அப்படியே கிழே போனால் தண்ணீர் அதை தொட்டு விடும் முன் எழுத்து வருது..

கதை,
திரைகதை,
வசனம்
நசரேயன்

ஆனா எழுத்தை பார்க்க யாரும் இல்லை, எல்லோரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள்.


Wednesday, June 24, 2009

முதல் காதல் சந்திப்பு

கிட்டததட்ட பத்து வருஷம் துண்டை கையில வச்சிக்கிட்டு கிடைக்கிற இடம் பார்க்கிற இடம் எல்லாம் போட்டு பார்த்தேன், துண்டு போட்டு துவண்டது தான் மிச்சம்.என் மேல பரிதாப பட்டோ, என் அழகை பார்த்து பரிதாப பட்டோ நான் போட்ட கடைசி துண்டை திரும்பி வரலை.என்னோட பத்து வருஷ லட்சியம் இப்பத்தான் நிறைவேறி இருக்கு.அழகா இருந்ததா தான் காதல் வரும் என்பதை கட்டுடைத்த தெய்வீக காதல் இது. நான் அம்மாவாசை சிகப்பு, அவ அதுக்கு அடுத்த நாள் சிகப்பு.நான் கருப்பு அஜித்(வாலிக்கு முன்னாடி), அவ கருப்பு சினேகா

இது நாள் வரை மொபைல் போன் இருப்பதையே மறந்த நான் இப்பெல்லாம் காலையிலே எடுத்த போன் எப்ப வைப்பேன்னு எனக்கே தெரியாது, சில சமயங்களில் மொபைல் கம்பெனியிலே இருந்து போன் பண்ணி உங்களால எங்க சர்வர் டவுன் ஆகுது, நீங்க போனை ஆப் செய்யுங்க சொல்லுவாங்க, அப்படி விடாமல் அடைமழை பேச்சி நடந்து கிட்டு இருக்கு, இத்தனைக்கும் நான் அவளோட பேச ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆச்சி.போன் பில் கட்ட முடியாம கையிலே கழுத்திலே கிடந்தது எல்லாம் வட்டி கடைய நோக்கி அடிச்சி பிடிச்சி ஓடினாலும் போன் சத்தம் நின்ன பாடில்லை.

துண்டு போட்டதிலே நான் மஞ்ச துண்டு போட வேண்டிய சோகம் இருந்தும் அதிலே ஒரு சுகமும் இருக்கு நான் போடுற மரண மொக்கையை கேட்கதுக்கும் ஒரு ஜீவன் இருக்குன்னு நினைக்கும் போது ,இன்னறைக்கு முதல் நாளா நானும் அவளும் வெளியே சந்திக்கிறோம்.


நான் அரைமணி நேரத்துக்கு முன்னமே அந்த இடத்திருக்கு வந்தேன், முன் பதிவு செய்து ஒரு இடத்திலே அமர்ந்தேன், நாங்க குறித்த நேரம் சென்று அரை மணி நேரம் கழித்து ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள். அவ அழகாய் இருந்தாலும் ரசிப்பதற்கு நேரம் இல்லாமல் வருத்தத்தோடு ஹோட்டல் மெனு வை பார்த்து கொண்டு இருந்தேன், வந்தவள் என்னெதிரே அமர்ந்தாள், அப்பத்தான் அவளை நல்லாப் பார்த்தேன்,அவள் வேறு யாருமல்ல அவளேதான்.

"ரெம்ப நேரமா காத்து கிட்டு இருக்கீங்களா, கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சி"

அவ முகம் அரை இஞ்சிக்கு வீங்கி இருப்பதன் காரணமும், தாமதமா வந்ததின் காரணமும், எனக்கு அவளை கண்டு பிடிக்க முடியாம போன காரணத்துக்கும் விடை கிடைத்தது.எப்போதுமே விடை கிடைக்க முடியாத கேள்விகளுக்கு விடை கிடைப்பதுதான் காதலின் மகத்துவம் என்பதை தெரிந்து கொண்டேன்.

நான் கடை திறக்க முன்னாடி வந்து காத்து கிடக்கேன்னு உண்மையை சொல்லி, என்னை காக்க வைத்து விட்டோமே என்ற உணர்விலே அவ பிஞ்சி மனசை பிஞ்சிபோகப் பண்ண விரும்பலை,அதனாலே வாழ்கையிலே பொய்யே சொல்லாத நான்,அய்யன் வள்ளுவன் மேல பாரத்தை போட்டு

"நானும் கொஞ்சம் தாமதமாத்தான் வந்தேன்னு ஒரு பொய்யை சொல்லி சமாளிச்சேன்."

அப்புறம் கொஞ்ச நேரம் என்ன பேசுறதுன்னு தெரியாமா விட்டத்தை பார்த்து கொண்டு இருந்தோம், போன் சூட்டுல கரிஞ்சி போற அளவுக்கு கடலை போட்டாலும், நேரிலே முன்னபின்னே அனுபவம் இல்லாததாலே, வாய்வரைக்கும் வந்த வார்த்தைகள் எல்லாம், வழி தெரியாம மறுபடி கிழே போய்விட்டது.இப்படியே ஊமை படம் காட்டிக்கொண்டு இருந்தால் கடைப்பக்கம் வந்தவங்க எல்லாம் சொல்லாம கொள்ளாம தலை தெறிக்க ஓடிவிடுவீங்கனு தெரியும்,அதனாலே நானே ஆரம்பித்தேன்.அதற்குள் அவள்

"நாம இங்கே எதுக்கு வந்தோம்"

"போன் பில் கட்டி முடியலை, காசு கட்டுப்பாடு பண்ண இப்படி குடும்ப கட்டுப்பாட்டை மீறி சந்திக்கிறோம்"

"பரக்கா வெட்டி மாதிரி இருந்தா எப்படி?"

"போன்ல உன் குரல் குயில் மாதிரி இருந்தது, அதைப் பத்தி தான்.."

"அப்ப நேரிலே...."

"குயிலோட குயில் குழைஞ்சி பேசுற மாதிரி இருக்கு"

ஒ..அப்படியா

"சாப்பிட்டா இன்னும் நிறைய பேசலாம்"

வேண்டியதை எடுத்து வரச்சொன்னோம்,நான் தான் காசு கொடுக்கணும் என்பதாலே கொஞ்சம் அளவாத்தான் நான் சாப்பிட முடிவெடுத்தேன்.

இப்படி வில்லங்கமா ஆரம்பித்த பேச்சு, விவகாரமா ஆகாம, உள்ளூர் கதையும், உலக கதையும் புரணி பேசாமல் அளவா பேசி அன்பா முடிச்சிகிட்டோம்.நாங்க சம்பாசனைகளையும், சாப்பாட்டையும் முடிச்சிட்டு கிளம்பும்போது மழை பெய்ய ஆரம்பித்தது, காணததை கண்டதைப் போல மழையே சந்தோசப் பட்டு விட்டது போல என நான் நினைத்து கொண்டேன்.இது சோக மழையா சந்தோஷ மழையான்னு தெரியலை, என்னாலே நாலு விவசாயீங்க நல்லா இருந்தா சரிதான்.

நான் அவளை வழி அனுப்பி விட்டுட்டு திரும்பியபோது என்னைப் பார்த்து ஒருத்தர் சிரித்து கொண்டு இருந்தார், என்னிடம் வந்த அவர்

"உன்னை இப்படி பார்க்கிறதிலே ரெம்ப சந்தோசம், ஒரு நாலு வருசமா நீயும் பொண்ணு தேடி அலுத்து போன,இப்பவாது பொண்ணு கிடைச்சி இருக்கே"


"எல்லாம் உங்க தயவுதான்"

"சொன்னதோடு இருக்கப்புடாது,பேசினதை விட அதிகமா புரோக்கர் கமிசன் கொடுக்கணும், நான் உனக்காக எவ்வளவு பரிஞ்சி பேசி இந்த பெண்ணோட அப்பாவை சம்மதிக்க வைத்தேனு உனக்கு தெரியும், உன் போட்டோவை பார்த்து இருளடைந்து போனவரை வெளிச்சத்துக்கு கொண்டு வர நான் பட்ட கஷ்டம் என்னோட கல்யாண தரகர் வாழ்கையிலே ஒரு மைல் கல்,இதை ஒரு சாதனையா நான் எல்லோரிடமும் சொல்லி கிட்டு இருக்கேன்."

சபையிலே உண்மையை உடைச்சி மானத்தை வாங்கின அவரிடம் சரி என தலை ஆட்டிவிட்டு கிளம்பினேன் சோகமான சந்தோசத்திலே


Tuesday, June 23, 2009

கேள்விகளுக்கு சில கேள்விகள்

முன் அறிவிப்பு:
என்னை சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்த கடையம் ஆனந்த்,ரம்யா, சந்தனமுல்லை, கோமா,Keith Kumarasamy ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்(வேற யாரு பேராவது விடுபட்டு இருக்கானு தெரியலை),பரிச்சையிலே முன்னாலே இருக்கிற நண்பனை பார்த்து எழுதியே தேர்ச்சி பெற்ற ஒரு மாண்புமிகு மாணவன் நான் , கேள்விகளுக்கு சொந்தமா பதில் எழுதுறதை விட கஷ்டமான விஷயம் வேற ஒன்னும் இல்லை,இதெயெல்லாம் படிச்சிட்டு இவனைபோய் ௬ப்பிட்டோமேனு வருத்தப் படக்௬டாது, அதற்காக இந்த முன் அறிவிப்பு

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எனக்கு வீட்டிலே வச்ச பேரு அதுதான், ஸ்கூல வாத்தியாருக்கு பேரு வாயிலே நுழையாததாலே, என் பேரை மாத்திட்டாரு.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல

3. உங்கள் கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
பிடிக்கலைனு சொன்னா ஆடோவிலே ஆள் அனுப்பி ஆட்டோகிராப் வாங்குவீங்களா ?

4.பிடித்த மதிய உணவு என்ன?
என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன்,ஓசி சோறு
போட்டா சொல்லி அனுப்புங்க

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
ஒ.. தாரளமா ..காசா பணமா முடியாதுன்னு சொல்ல

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு நீச்சல் தெரியும் அதனாலே கடல்ல, குளத்திலே தான் குளிப்பேன் , குற்றால அருவியிலேயும் குளிப்பேன். அதுக்காக வீட்டிலே குளிக்க மாட்டேன்னு நினைச்சுக்காதீங்க

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?.
பார்க்கிற ஆளைப் பொறுத்தது

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?.
தன்னம்பிக்கை(+)
தன்னம்பிக்கை (-)


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
வேலை வெட்டி இல்லாமல் பதிவு எழுவதற்கு திட்டுவதும், நல்லா இருந்தா பாராட்டுவதும்

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாருன்னு சொன்னா என்ன செய்வீங்க ?

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ரெண்டு பேன்ட்,சட்டை எடுத்து கொடுக்கப் போறீங்களா ?

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
தினமும் வீட்டுல வசவு பாட்டு தான்

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு .

14.பிடித்த மணம்?
சொந்த தோட்டத்து மல்லிகை

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

குடுகுடுப்பை - அனுபவத்தை காசு கேட்காம அள்ளி கொடுக்கும் வள்ளல்


vidhoosh
-கவிதை, கட்டுரை, கதை என பன்முகத்தன்மை கொண்டவர்

உருப்புடாதது_அணிமா - எவ்வளவு மொக்கை போட்டாலும் சலிக்காத ஆளு, நானும் அவரும் ஒரே நிறம்.


16.பிடித்த விளையாட்டு?

கில்லி, கோலிகுண்டு, பம்பரம்(தரையிலே விடுவது)

17.கண்ணாடி அணிபவரா?
இன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகலை

18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
படம் பார்த்ததுக்கு காசு கேட்காத எல்லா படங்களும் பிடிக்கும்.

19.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க

20.பிடித்த பருவ காலம் எது?
பள்ளி பருவம்

21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்
எனக்கு மாத்த உரிமை இல்லை

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பதில் ஒன்பது - திருப்பி படிங்க
23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கனடா,அமெரிக்கா

24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
இருக்குன்னு சொல்ல ஆசையாத்தான் இருக்கு, சொன்னா நம்ப மாட்டீங்க.
பதிவுகளில் கொலை வெறி கும்மி அடிப்பது தனித் திறமையா ?

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
அல்லி பால் இருக்கும் போது அரளிப் பால் குடிப்பது .

26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நானே ஒரு சாத்தான், எனக்குள்ளே எப்படி சாத்தான் வரும்

27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
முந்தல் - புளியங்குடி (உண்மைதான் நம்புங்க)

28.எப்படி இருக்கணும்னு ஆசை?
அப்படி வரைமுறை படிஎல்லாம் வாழ எனக்கு தெரியாது, எதையும் எதிர் பார்க்காம கிடைச்சதை வைச்சி சந்தோசமா வாழ முயற்சிப்பதுதான்

29.கணவர் இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
இது எனக்கு இல்லை

30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஒரு ரெண்டு வருஷம் கழிச்சி ரெண்டு வரியிலே பதில் சொல்லட்டுமா ?

31..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஒவ்வொருவருக்கும் தனிதன்னையும், திறமையும் இருக்கு, அதை பட்டியலிட்டால் நாலு முழு பதிவு போட வேண்டிய வரும்

32.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?
புத்தகம் படிச்சி பல வருஷம் ஆகுது

பின் குறிப்பு : அடுத்த தடவை எல்லாம் கொஞ்சம் கேள்விகளை குறைங்க சாமிகளா


Monday, June 22, 2009

தீண்டா நட்பு

கல்லூரி முடிச்சி ஆறு மாசம் பல இடங்களில் தேடி அலைந்து பெங்களூரில் வேலை கிடைத்தது, முதல் நாள் வேலைக்கு சென்றேன், அறிமுக படலங்களை எல்லாம் முடித்து, நான் செய்ய வேண்டிய வேலையை பற்றி திட்ட மேலாளார் விளக்கினார், என்னுடன் வேலை செய்ய வேண்டிய நபர் விடுமுறையிலே இருப்பதாகவும் அவர் திரும்பி வந்த பின் இன்னும் விளக்கமாக பேசுவோம் என சொன்னார்.

நான் வேலையிலே சேர்ந்து ஒருவாரம் கழித்து என்னிடம் புதிதாய் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தனர், நாங்கள் செய்ய வேண்டிய வேலையை பற்றி கலந்துரையாடினோம்,நாங்கள் செய்ய வேண்டிய வேலை அதிகம் இருப்பதால் பெரும்பாலும் தாமதமாகவே இரவு வீட்டுக்கு சொல்ல நேரிடும் என்று என்னிடம் சொன்னார்கள். நான் ஒருபெண் என்பதால் இரவு பத்துமணிக்கு மேல் என்னை வீட்டுக்கு போக சொல்லி விடுவார்கள்.சக திட்ட தோழன் என்பதால் நானும், அவரும் நல்ல நண்பர்கள் ஆனோம்,குடும்ப விசயங்களை பகிர்ந்து கொள்வோம்.

ஆரம்பத்திலே என்னிடம் சகசமாக பழகினாலும், கொஞ்ச நாள்களில் அவன் நடவடிக்கைகளில் எனக்கு சந்தேகம் வந்தது, அவன் என்னை நடத்தும் முறைகளை வைத்து, காலையிலே அலுவலகத்திலே வந்ததும் என்ன காலை உணவு சாப்பிட்டாய் என்று கேட்பான், நானும் பதில் சொல்வேன், சில நேரங்களில் நான் சாப்பிட வில்லை என தெரிந்தால் எனக்கு ஏதாவது வாங்கி கொடுப்பான்.முதல் இரண்டு முறைகளில் எனக்கு சந்தோசமாக இருந்தாலும் அதன் பின் எனக்கு சங்கடமாகிப் போனது.

இரவு நேரங்களில் நான் வீட்டுக்கு சொல்ல ஆட்டோவை அழைத்து வந்து விடுவான், நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டான், மறுப்பு சொல்ல முடியாமல் நானும் சம்மதிப்பேன், சில நேரங்களில் ஆட்டோ வின் பின்னே அவனும் வண்டியிலே வீடுவரை வருவான், என்னை ஒருகுழந்தையை போல நடத்துவதாக எண்ணிய அவன் மேல் எனக்கு வெறுப்பு அதிகமானது.

சில சமயங்களில் அவன் என்னை காதலிக்கிறானா என்ற சந்தேகமும் எனக்கு ஏற்பட்டது,அவனின் செயல்பாடுகள் என்னை மிகவும் பாதித்தது, கொஞ்ச நாளிலே நான் அதிகம் வெறுப்பவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தான், அவன் மீது உள்ள கோபத்தை காட்ட அலுவலக பணிகளில் அவனுக்கு நான் செவி சாய்ப்பதில்லை, இருந்தாலும் அவன் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அவன் மீது இருந்த கோபத்தீயை அணைக்க நான் அவனிடன் பேச முடிவு எடுத்தேன், அவனிடன் நேரிடையாக சொன்னேன், உன் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்க வில்லை, நீ என்னை காதலிகிறாயா? என கேட்டேன், அவன் அதற்கு ஏதும் பதில் சொல்லாமல், என கேள்விக்கு பிடி கொடுக்காமல் பேசினான், எனக்கு ஆத்திரம் அதிகமானதே தவிர பிரச்சனை தீரவில்லை. இறுதியிலே நான் உண்மையை சொன்னேன் நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன், உன்னிடம் அப்படி எண்ணம் இருந்தால், அதை மறந்து விடு என்றேன்.நீ செய்யும் செயல்கள் என்னை தீராத மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது, என்னை நீ உன்னில் ஒருத்தியாகவோ, இல்லை உனக்கு பிடித்தவர்களில் ஒருத்தியாகவோ நடத்த வேண்டாம். நட்பின் வட்டத்தை நீ மீறுவதைப் போன்ற பிம்பத்தை என்னால் ஏற்க முடியாது.

அவன் முகத்தை வைத்து அகத்தை என்னால் உணரமுடியவில்லை,எனக்கு வாழ்த்துகள் ஒன்றை தவிர வேறு ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றான், என மனதின் இருளும் என்னை விட்டு கடந்து சென்றது, அன்றிரவு ஒருகுழந்தையை போல உறங்கினேன், மறுநாள் காலை எனக்குள் ஒருபுது மாற்றம், புதிதாய் பிறந்ததை போல, வழக்கத்துக்கு மாறனா உற்சாகத்துடன் அலுவலகம் சென்றேன்.

அலுவலக வழக்கமான வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, என பக்கத்து இருக்கையை திரும்பி பார்த்தேன், எப்போதும் எனக்கு முன்னால் வரும் அவன் அன்று வரவில்லை, அன்று போனது அடுத்த நாளும் போனது, ஆனால் அவன் வரவில்லை.அடுத்த வாரம் அலுவலகத்திலே புதிதாய் ஆள் வேண்டி விண்ணப்பம் செய்தார்கள், அப்போது தான் எனக்கு தெரிந்தது அவன் இனி வேலைக்கு வரப் போவதில்லை என்று, புது அலுவலகத்திலே உடனே சேர இருந்ததால், அவனால் நேரிலே வந்து அனைவரிடம் விடை பெற்று செல்ல முடியவில்லை என திட்ட மேலாளார் சொன்னார்.என்னால் அன்று முழுவதும் வேலையிலே கவனம் செலுத்த முடியவில்லை, நடந்தவற்றிற்கு நான் காரணமாய் இருக்குமோ என்று என்னுள் ஒருகுற்ற உணர்வு.

அடுத்த வாரத்திலே புது ஆள் அவனுக்கு பதிலாக வேலைக்கு வந்தார், மீண்டும் அலுவலக பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன், புதிதாய் வந்தவர் என்னிடம் வேலை வாங்குவதிலே கவனம் அதிகமாக இருந்தது, என்னால் வேலைக்கு சம்பந்தமில்லாத விசயங்கள் பேச முடியவில்லை,அவர் எனக்கு மேல் அதிகாரியாக மட்டுமே இருந்தார்.இப்போது யாரும் என்னிடம் கேட்பதில்லை நான் காலையிலே என்ன சாப்பிட்டேன் என்று, நான் இரவு வேளைகளில் ஆட்டோவில் செல்லும் போது யாரும் என் பின்னால் வருவதில்லை, இருந்தும் என் நினைவுகள் என்னால் தீண்டப் படாத நட்பை தீண்டும் பாதையிலே இன்றளவும் அவனை சுற்றி நிழலாடுகிறது.


Thursday, June 18, 2009

குங்குமத்துக்கு என்ன ஆச்சி!!!

குங்குமத்துக்கு என்ன ஆச்சின்னு தெரியலை, என்னோட மொக்கை இடுக்கை எல்லாம் வெளியிட்டு இருக்காங்க,இது வெளி வந்ததும் எனக்கு தெரியலை, நண்பர் ஜீவன், நண்பி ரம்யா இருவரும் சொல்லித்தான் எனக்கே தெரியும். இந்த வார அதவாது 25/06/2009.இதழிலே பக்கம் 110-111 வெளி வந்து இருக்கு.அதாவது காதனும் காதலியும் என்ற தலைப்பிலே எழுதிய மொக்கை தான் அது.

குங்குமத்திலே எல்லாம் வெளிவந்தாலே இனிமேல மொக்கை எல்லாம் எழுத மாட்டேன்னு நினைக்காதீங்க, உடல் மண்ணுக்கு,உயிர் தமிழுக்கு, எழுத்து மொக்கைக்கே என்று வாழ்பவன் நான், இடுக்கைகளிலே எந்த மாற்றம் இருக்காது, கடை வழக்கம் போல செயல் படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படியெல்லாம் சொன்ன இதுவும் என்னோட கனவுலதான் வந்து இருக்கும்னு நீங்க நினைக்க வாய்ப்பு இருக்கு.அதோட அத்தாட்சியையும் கிழே இணைத்து இருக்கேன் பாருங்க, என்னோட சேர்த்து மயாதி எழுதிய கவிதையும் பிரசுரமாகி இருக்கிறது.

குங்குமம் இதழுக்கு ஒரு விண்ணப்பம், அப்படியே சன் பிச்சர்ல இருந்து ரெண்டு பேரை ௬ட்டிட்டு வந்து என்னோட வில்லு, நான்கடவுள், வாரணம் ஆயிரம், எந்திரன்,கந்தசாமி விமசர்சனங்களையும்,இனிமேல எழுதபோற அசல்,வேட்டைக்காரன் விமர்சனத்தையும் காட்டுங்க, இதுக்கு பேருதான் இடத்தை கொடுத்தா மடத்தை பிடுங்குறதுன்னு எங்க ஊரு புளியங்குடியிலே சொல்லுவாங்க.



நான் ரெம்ப அடக்க ஒடுக்கமானவன் சுய விளம்பரம் அதிகம் விரும்ப மாட்டேன் சொன்னா நம்புவீங்கதானே.


Wednesday, June 17, 2009

திருவிழா நாடகங்கள் - நடிகைக்கு அடி

முன்னாள் மொக்கை இங்கே, நடப்பு கிழே
*******************************************************************************
விறகு கட்டையை எடுத்துகிட்டு என்னைத்தான் அடிக்க வாராருன்னு பயந்து போயிட்டேன், வந்தவரு நேர அதை அவரோட தங்கமணிக்கு அடுப்பு விறகுக்கு கொடுத்தாரு, என்னிடம் வந்தவரு எலே இந்தா சின்ன நோட்டு ஒரு காட்சி எழுதி காட்டுன்னு சொன்னார். நானும் எழுதி கொடுத்தேன், ஒரு சில குறைகளை சுட்டி காட்டி என்னிடமே எல்லாத்தையும் எழுத கொடுத்தாரு.

வீட்டு பாடம் எழுதாம பள்ளிக்கு போய் இம்போசிசன்(Imposition) எழுதின முன் அனுபவத்திலே,அந்த வருஷம் நாடக நடிகர்களுக்கு அவர்களின் காட்சிகளை எல்லாம் நானே எழுதி கொடுத்தேன், எல்லாம் எழுதி முடித்தவுடன் ஒரு ரெண்டு ரூபாய் கொடுத்து டீ வாங்கி குடிச்சுக்கோ ன்னு சொல்லிட்டாரு, அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சி இந்த தடவையும் மேடை மேல ஏறி நடிகைகளை பார்க்க முடியாதுன்னு.

நாடக நடக்கும் நேரத்திலே மேடையிலே வலது பக்கத்தில் ஒலி,ஒளி அமைப்பிலே இருந்து இருவர் நிற்பார்கள், அவர்களின் வேலை, காட்சிக்கு ஏற்ப திரை சீலைகளை மாற்றுவர், வீடு என்றால் வீடு படம் போட்ட திரை சீலை பின்னால் இருக்கும், இது எப்படி அவர்களுக்கு தெரியும், நாடக நோட்டிலே ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்கும் முன்னே இருக்கும் முன்னே அந்த காட்சி எங்கு நடைபெறுகிறது, அதிலே பங்கு பெரும் நட்சத்திரங்கள் உட்பட தகவல் இருக்கும்.நாடக அமைப்பிலே இருந்து ஒருவர் காட்சி வாரியாக அது நடைபெறும் இடம், அதிலே பங்கு பெரும் நட்சத்திரங்கள், அந்த காட்சியிலே பயன்படும் பொருட்கள் அடக்கிய பட்டியல் வைத்து இருப்பார், அவர் அந்த காட்சிக்கு தேவையான பின்புலத்தை திரை சீலை மாற்றுபவருக்கு சொல்லுவார்.இவரு மேடையோட ஒரு பக்கத்திலே இருப்பாரு.

மேடைக்கு இடது பக்கத்திலே ஒருவர் நின்று கொண்டு நாடகத்திலே வரும் வசனங்களை கதா பாத்திரங்களோடு பேசுவார், பேசவேண்டிய வசனம் மறந்து போய் தலையை சொரிந்து கொண்டு மேடையிலே நிற்காமல் இருக்க ரெம்ப உதவியா இருக்கும்.

இதிலே நான் எந்த இடத்தை, ஏன் தேர்ந்து எடுத்தேன்னு காரணம் சொல்லி உங்களை கலவரபடுத்த விரும்ப வில்லை,எப்படியே கஷ்டப்பட்டு உழைச்சி வலது பக்கத்தை இடத்தை பிடித்து விட்டேன்.

ஒவ்வொரு காட்சி முடிந்ததும் நாடகம் பார்க்கிற மக்கள் சோர்ந்து போகாமல் இருக்க, ஒலி,ஒளி அமைப்பாளர் காட்சிக்கு சம்பந்தமான பாடலை பாடுவார், இந்த நேரத்திலே அடுத்த காட்சிக்கு தேவையான பொருட்களை தாயார் செய்வதும், நடிகர் நடிகைகைகளை தயார் செய்வதும் வழக்கம், எல்லாம் தயார் ஆனாவுடனே விசில் அடிக்கப்படும், உடனே அந்த காட்சியிலே நடிக்க வேண்டியவர்கள் மேடைக்கு வருவார்கள்.அதோட அந்த வேலை முடிந்து விடும், அப்புறம் வேடிக்கை பார்ப்பேன்.நாடக நடிகைகளை பக்கத்திலே இருந்து பார்த்ததிலே எங்க ஊரு காரங்க அவர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடியதை எல்லாம் பார்த்து நானும் நாடகத்திலே நடிக்கணும் முடிவு பண்ணினேன்.

அடுத்த வருஷம் கல்லூரியிலே சேர்ந்து இருந்தேன், திருவிழாவுக்கு விடுமுறை இல்லாததாலே,நடிகையோட ஆடிப் பாடனும் என்பதற்காக அவசர விடுமுறை எடுத்து வந்தேன்.கலைவெறி என்னை விட வில்லை,பழைய படியே நாடக நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுத்தேன், அந்த வருஷம் யாரையும் தாக்கி நகைச்சுவை செய்ய வழி இல்லை. அவங்க நகைச்சுவைக்கு ஊறுகாயா இருந்தவர் காலமாகி விட்டதாலே அவரை தாக்கி எழுத முடியலை.

நாடகத்தோடு இருந்த ரெண்டு வருட தொடர்பிலே எனக்கு ஒரு ஆசை வந்தது. நான் யாரிடம் சொல்லாமல் ஒரு ஐந்து காட்சிக்கு நகைச்சுவை ன்னு நான் நினைச்சி எழுதி நாடக அமைப்ப்பாளரிடம் கொடுத்தேன்.

எழுதியதை படித்து விட்டு என்னை பார்த்தவர், "ஏல நீயா எழுதினியா, யாரவது எழுதியதை சுட்டுட்டு வந்துட்டியா"

"நான் தான் எழுதினேன்",அவர் நம்பின மாதிரி தெரியலை,ஆனா எப்படியே எழுத்து பிடிச்சி போய் நாடகத்திலே சேத்துகிட்டாரு.எழுதினதுக்கு பரிசா என்னையும் நடிக்க சொன்னாரு அவரு சொன்ன உடனே தூக்கம் எல்லாம் காணமப் போச்சி, எப்படி நடிக்கனுமுனு நானே ஒத்திகை பார்ப்பேன்.நாடகம் நடக்கும் தேதி வரைக்கும் நடிகர்கள் மட்டுமே ஒத்திகை எடுப்பார்கள், நாடக நடிகைகள் நாடகம் நடக்கும் அன்றைக்கு காலையிலே தான் ஊருக்கு வருவார்கள்.அதுநாள் வரைக்கும் ஒத்திகை அறை பக்கம் போகாத நான், அன்றைக்கு காலையிலே போய் காத்து கிடந்தேன்.

நாடக நடிகர்கள், நடிகைகள் நெருங்கி நடிக்கனுமுன்னு அவங்களுக்கு பிரியாணி, சோப்பு, சீப்பு, பாசிமணி, ஊசி மணி எல்லாம் வாங்கி கொடுப்பாங்க, என்னோட பொருளாதாரம் ரெம்ப மோசமா இருந்ததினாலே நான் வீட்டிலே இருந்து காசை திருடி இதெல்லாம் நானும் வாங்கி கொடுத்தேன்.

நான் அப்பத்தான் கல்லூரியிலே நடன குழுவிலே சேர்ந்து நடனம் கத்து கொண்டு வந்தேன்.

பாடலுக்கு ஒத்திக்கை செய்யும் போது என்னைப் பார்த்த நாடக நடிகை

"ஏன் அந்த கருப்பு அண்ணாச்சி பாட்டை போட்டு உடற்பயிற்சி செய்யுறாரு, அங்கே உடம்பிலே எழும்பும் தோலும் நல்ல வெளியே தெரியுது, இந்த உடற்பயிற்சி தேவையா?"

நவின நடன அமைப்பு அவங்க கண்ணுக்கு இப்படி தெரியுதே ஒரே வருத்தமா போச்சி.என்னோட ௬ட நடிக்கிற நடிகையோட காலிலே விழுந்து என் ௬ட நான் அமைக்கும் நடனத்துக்கு ஏத்த மாதிரி ஆட சம்மதிக்க ஆரமித்தேன், முதல்ல மறுத்த அந்த நடிகை ஒரு பவுடர் டப்பா வாங்கி கொடுத்த உடனே சம்மதித்தார்கள்.

பாட்டுக்கு ஒத்திகை பார்க்கும் போது நான் கையை காலை ஆட்டும் போது அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி விழுந்துட்டாங்க. எல்லோரும் ஓடி வந்து தண்ணி எல்லாம் தெளிச்சு பார்த்தாங்க, ஒன்னும் பிரயோசனம் இல்ல.எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு

(அவங்களுக்கு என்ன ஆச்சின்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாமா)


இந்திரலோகத்திலே மக்கள் ஆட்சி

முன்னாள் மொக்கை இங்கே, நடப்பு மொக்கை கிழே
*********************************************************************************
சும்மா
கிடந்த சங்கை தி கெடுத்த ஆண்டி கதை போல னது எமன் கதை, எம்.ஜி.ஆர் சண்டை போட்டு ரெம்ப நாள் ஆனாலும் மனுஷனுக்கு பெலம் இன்னும் அப்படியே இருக்கு. கிழே விழுந்த இந்திரனும், அடி வாங்கி கிழே விழுந்த எமனும் இரு திலகங்களின் நிற்கும் இடத்திற்கு வாராங்க. எமன் நெளிஞ்சு வழிஞ்சு வாரதை பாத்த இந்திரன்

"எமனாரே வேட்டியிலே ஓனான் விழுந்தது போலே ஏன் அப்படி நெளிகிறீர்"

அவரின் பதிலை எதிர் பாராமல் நடந்தவற்றை அறிந்து கொண்ட இந்திரன் திலகங்களை பார்த்து

"என்ன மானிடர்களே இங்கு நடப்பதற்கு யார் பொறுப்பு?"

"நான் பொறுப்பு அல்ல எமனாரை கேளுங்கள்" மக்கள் திலகத்தின் பதில்.

"ஏன் உன் குரல் கம்மலாக இருக்கிறது "

"அதற்கும் நான் பொறுப்பு அல்ல, நீங்க எம்.ஆர் ராதாவை கேட்க வேண்டும்"

"என்ன ஆணவ பேச்சு"

"அதற்கும் நான் பொறுப்பு அல்ல, நீங்க பிரம்மனை அல்லவா கேட்க வேண்டும்."

எரிச்சலுடம் "உங்களுக்கு வாய் காது வரை நீள்கிறது."

இதற்கு பதில் மக்களிடம் இருந்து,"இதற்கும் அவர் பொறுப்பு அல்ல "

இதை எல்லாம் முன்னமே அனுபவப்பட்ட எமனார், இந்திரரே இவர்கள் பேசி ஜெயிப்பதை விட இந்த மேலோகத்தில் கஷ்டமான விஷயம் வேறு ஒன்றும் இல்லை,ஒருவன் பேசியே கொல்கிறான், ஒருவன் பேசாமலே கொல்கிறான்.

"அப்படியா, இதோ இவர்களை இப்போதே அழித்து விடுகிறேன் பார்."

தனது கதாயுதத்தை சுழற்றி இரு திலகங்களை நோக்கி சுழற்ற மக்கள் திலகம் அதை பிடுங்கி அட்டையினால் செய்யப்பட்ட கதாயுதத்தை கையால் முறித்து கசக்கி போடுகிறார்.

"அண்ணே அட்டையை வச்சி நம்மளை எல்லாம் இவ்வளவு நாள் ஏமாத்தி இருக்காரு, நீங்க எப்படி இதை கண்டு புடிச்சிங்க?"

"தம்பி எனக்கு சினிமாவிலே நடிப்பை தவிர எல்லாம் தெரியும் என்பது நாடறிந்த விஷயம்.அதனாலே எனக்கு சுலபமா கண்டு பிடிக்க முடிச்சது"

ஆகா.. இன்னைக்கு இந்திரருக்கும் சங்கு ஊதிடுவாங்க போல தெரியுது, என்னையாவது ஒரு அடியோட விட்டுடாங்க, இவரை என்ன பண்ணபோராங்களோ என அடி விழுந்த எமனின் நினைவுகள்

மக்கள் திலகம் ஆயிரத்தில் ஒருவன் உடை வாளை எடுத்து ஒரு சுழற்று சுழற்ற இந்திரன் ஆடைகள் எல்லாம் அவிழ்ந்து விழுந்தன The Mask of Zorro மாதிரி. இந்திரனுடைய கோலம் அலங்கோலமானது கோவணத்துடன்.

இந்திரனுடைய கோலம் எல்லோருடையும் விட எமனுக்கு கடும் கோபத்தை உண்டு பண்ணியது.

"இந்திரரே கொடியில் போடுகிற கோவணம் எல்லாம் எப்படி காணாமல் போனது என்பது இப்போதல்லவா தெரிகிறது "

மக்கள் திலகம் தன் வாளை எமனுக்கு நேராக நீட்ட " என்னை விட்டுறுங்க நான் கோவணம் ௬ட கட்டவில்லை"

நடிகர் திலகம் ரசிகர்களை பார்த்து "இந்திர லோகத்திலும் இனிமேல் மக்கள் ஆட்சி தான், அனைவரையும் சிறை பிடியுங்கள்"

மக்கள் திலகம் வாழ்க.. நடிகர் திலகம் வாழ்க என்ற ஆரவாரம் மேலோகம் முழவதையும் ஆட்கொண்டது.

"அண்ணே நீங்க நாடோடி மன்னனிலே தமிழ் திரைவுலகிலே புரட்சி செய்தீர்கள், பின்பு மக்கள் தலைவனாக புரட்சி செய்தீர்கள், இந்த இந்திர லோகத்திலேயும் உங்கள் திருக் கரங்களால் புரட்சி செய்து இருக்குறீர்கள், நீங்க இந்த அரியணையிலே ஏறி எங்களை ஆட்சி செய்ய வேண்டுமென உங்க ரசிகர் சார்பாகவும், என ரசிகர் சார்பாகவும் கேட்டு கொள்கிறேன்"

"அரியணை எனக்கு புதிது அல்ல, ஆனால் நீயே நடிப்பிலே பல அரியனைகளை கண்டும், மக்கள் பணிக்கு இன்னும் அரியணை ஏறவில்லை என்ற மனக்குறை எனக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தான், அந்த குறை நிறைவேறும் முன் உன்னை இங்கு அழைத்து வந்த எமனார்க்கும்,இந்திரனுக்கும் பாடம் புகட்டவே யாம் வந்தோம், இந்த அரியணை உனக்குரியது, நீயே இதற்கு தலைவன், ரத்தத்தின் ரத்தங்களாகிய ரசிகப் பெருமக்களின் வேண்டுகோளும் அதுவே" என ௬றி தான் கையிலே வைத்து இருந்த கிரிடத்தை நடிகர் திலகத்திக்கு அணிவிக்கிறார் மக்கள் திலகம்."


மக்கள் திலகம் வாழ்க, நடிகர் திலகம் வாழ்க என்ற கரவொலி அடங்க வெகுநேரம் ஆகிற்று