அத்தை மகள்
கோவிலுக்கு நேந்து விட்ட ஆடு போல கிராமங்களிலே உறவுகாரகள் அத்தை/மாமா மகன்/மகளை பிறந்த உடனேயே நாள் குறிச்சி வச்சுடுவாங்க, உன் பையன், என் மகளை தான் கட்டனும், உன் மக, என் மகனை தான் கட்டணுமுன்னு,பிறந்த பிள்ளை பாலுக்காக அழுதுகிட்டு இருக்கும், பெருசுகள் எல்லாம் இந்த விசயத்தை விவரமா பேசிகிட்டு இருப்பாங்க.
பேசி முடிச்ச தினத்திலே இருந்து அந்த பெண்ணையோ, பையனையோ சின்ன வயசிலே இருந்து, நீ உன் மாமன் மகளை தான் கட்டனும், நீ உன் அத்தை மகளைத்தான் கட்டணுமுன்னு மனசிலே உரம் போட்டு வைப்பாங்க, ஏன்னா விவரம் தெரிஞ்ச உடனே வேற இடத்திலே துண்டு போட்டு கம்பிய நீட்டி விடக் ௬டாது என்பதற்காக.இப்படி குடும்பத்துக்காக நேந்து விட்ட பலி ஆடுகளில் நானும் ஒருவன், எனக்கும் எனது அத்தை மகள் என்று நான் பிறந்த உடனே முடிவு எடுத்து விட்டார்கள்.
எங்க ரெண்டு பேருக்கும் வெவ்வேறு ஊர் என்பதனாலே நாங்க இரண்டு பேரும் சந்திப்பதே அரிது, எனக்கு இப்படி ஒரு விவகாரம் நடந்து முடிந்த கதையெல்லாம் எனக்கு தெரிய வந்தது, நான் பத்தாம் வகுப்பு முடிந்த பின் கோடை விடுமுறைக்கு நான் எங்க அத்தை வீட்டுக்கு சென்ற போது தான்.
எங்க வீட்டிலே எனக்கு நிச்சயம் செய்து இருக்கிற இன்னொரு கல்யாண பலி ஆட்டைப் பத்தி அதிகமா எங்க அப்பாவாலே பேசமுடியாது, ஏன்னா அது எங்க அப்பா வழி சொந்தம், அப்பா சிலசமயம் என்னிடம் இதை பற்றி பேசும் போது அம்மாவின் காதிலே விழுந்து விட்டால், அடுத்த ரெண்டு நாளைக்கு அவரோட சேர்த்து எங்களுக்கும் பட்னி தான்.
அதனாலே எங்க அப்பா என்கிட்டே அடிக்கடி சொந்தம் ரெம்ப முக்கியம், ரெம்ப முக்கியமுன்னு, நான் என்னவோ ஆணழகன் மாதிரி எனக்கு துண்டு போட உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு அழகிகள் எல்லாம் வரிசையா இருக்கிற மாதிரி சொல்லுவாரு, ஆனா என் அம்மாவுக்கு எல்லாம் இந்த கவலை இல்லை, இவன் நாயா அலைந்சாலும் தெரு நாய் ௬ட திரும்பி பார்க்காதுன்னு தெரியுமோ என்னவோ.
எனக்கு நிச்சயிக்கப் பட்ட கல்யாண பலி ஆட்டை நல்லா தண்ணிய தெளிச்சி நல்லாவே தயார் பண்ணி வச்சி இருந்தாங்க, நான் அவளோட ஊருக்கு போன ரெண்டு நாளு என்௬ட பேசவே இல்லை. அடுத்த நாளிலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பித்து ஒதுக்கீடு பண்ணி வச்சி இருந்த இடம் இன்னும் கை மாறலைன்னு உறுதியாக்கிட்டு,இருந்த துண்டை பத்திரப் படுத்திட்டு ஊருக்கு வந்தேன்.
அடுத்த வருஷம் விடுமுறைக்கு அவ எங்க ஊருக்கு வந்தா, ஆனா எங்க வீட்டுக்குள்ளே வர முடியலை, இருந்தாலும் எனக்கு அவளை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. நிறைய பேசினோம், எனக்கும் அவளைப் பிடிக்க ஆரம்பித்து.
பன்னிரண்டு முடித்து கல்லூரி சென்றேன், எங்களது பயணம் கடிதம் மூலம் தொடர்ந்தது, இப்படி கடிதப் போக்குவரத்து நடை பெற்று கொண்டு இருந்த கால கட்டங்களிலே, ௬ட படிக்கும் நண்பர்கள் பலர் கல்லூரியிலே துண்டை போட்டு உசார் பண்ணிடாங்க, அதையெல்லாம் பார்த்து எனக்கும் மனசுக்குள்ளே "இவங்களுக்கெல்லாம் விழும் போது, எனக்கு விழாதா",அந்த கேள்விக்கு அப்புறமா துண்டு திசை மாற ஆரம்பித்து. அது மட்டுமில்லாம ஊரிலே தாவணி மட்டுமே பார்த்து பழகிய எனக்கு, நகரத்திலே அந்த நேரத்திலே இருந்த நவ நாகரிக உடைகளையும், குளிக்கவே இல்லைனாலும், முகத்திலே பற்பசை, முகப் பசைகளை அப்பிகிட்டு வரும் அழகு பெண்களைப் பார்த்து இந்த பச்ச மண்ணு கெட்டுப் போச்சி, எனக்கும் ஒண்ணு இப்படி கிடைக்காதான்னு கனவு காண ஆரம்பித்தேன்.
துண்டு திசை மாறினாலும் கடித போக்கு வரத்து தடை இல்லாமல் போய் கொண்டு இருந்தது, எதுவுமே கிடைக்கவில்லையென்றால் கைவசம் இருக்க வேண்டியதை காப்பாற்ற வேண்டிய நிலைமை. கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டு இருக்கும் போது ஊருக்கு போன நான் அவளோட தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கிட்டு வந்தேன், என்னைய நம்பி எங்க வீட்டிலே பத்து ரூபா ௬டக் கொடுக்கமாட்டாங்க,ஆனாலும் ஒரு பவுன் தங்கச்சங்கிலி கிடச்ச சந்தோசத்திலே சேட்டு ஆயிரம் ரூபா கொடுத்தார், அவருக்கு நல்லாவே தெரியும் நாங்க அடகு வச்சா அது கண்டிப்பா முங்கிருமுன்னு.
நான் சங்கிலி வாங்கிட்டு வந்த விஷயம் ஊரு பூரா தெரிஞ்சி, ஊரிலே இருந்த பெருசுகள் எல்லாம் விவகாரமா முடியுமுன்னே கால்கட்டை போட்டு விடலாமுன்னு சொல்ல, என் அம்மா மட்டும் அரை மனதோட என்னிடம் கேட்டுட்டு விட்டு முடிவு எடுக்கலாமுன்னு சொல்லி விட, அடுத்த முறை ஊருக்கு போன உடனே எல்லோரும் என்னைப் பார்த்து "எப்படா கல்யாணம்..? எப்படா கல்யாணம்? கேட்டாங்க, நானும் என்ன விவரமுன்னு வீட்டிலே அம்மாவிடம் விசாரித்தேன்.
"அவ மேல ஆசை இல்லைமையா சங்கிலியை வாங்கிட்டு போன?"
"அப்படீல்லாம் ஒன்னும் இல்லை.. சும்மா தான், இவ்வளவு தூரம் வருமுன்னு எதிர் பார்க்கலை, இப்ப என்ன செய்ய?"
"முதல்ல அவ சங்கிலியை திருப்பி கொடு?"
அவசர அவசரமா கல்லூரிக்கு ஓடிப் போய் கிடச்சவங்க கையிலே காலிலே விழுந்து சங்கிலியை திருப்ப ரூபா தேத்தி, சந்தோசமா இருந்த சேட்டு வையத்திலே மண்ணை அள்ளிப் போட்டுட்டு சங்கிலியை வீட்டுக்கு கொண்டு வந்தேன்.அம்மாவிடம் கொடுத்து கொடுக்க சொல்லியாச்சி, அதோட கடித போக்கு வரத்து நின்னு போச்சி.
கொஞ்ச நாளிலே நானும் வேலை தேடி சென்னை வந்தேன், ஊர் மக்களும் என்னையப் பத்தி மறந்து போய்ட்டாங்க, நானும் அவளை சுத்தமா மறந்துட்டேன், அவளுக்கு கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறதா கேள்விபட்டேன், இன்னும் கொஞ்ச நாளிலே தொல்லி முடிந்து விடும் என்று நினைத்து கொண்டேன்.
அடுத்த ஆறுமாசத்திலே என்கிட்டே பல பேரு பல நுறு முறை கேட்டாங்க, நான் வேண்டாம் என்று மறுத்து விட்டேன், இந்த தொல்லைக்கு பயந்தே ஊருக்கு பக்கமே வருவது கிடையாது, ஒரு வழியா அவளுக்கு கல்யாணம் முடிந்து விட்டது.
நானும் நிம்மதியா வேலை தேட ஆரம்பித்தேன், ஊரு பக்கமே போகம இருந்த நான் அடிக்கடி ஊருக்கு போனேன், கையிலே காசு இருக்கும் வரை வேலைதேடி அலைவேன், காசு காலி ஆனதும் திரும்பவும் ஊருக்கு வருவேன், இப்படியே காலத்தை ஓட்டினேன், ஆனா வேலை கிடைத்த வழி இல்லை, நான் எப்ப காசு கேட்டாலும் முகம் சுளிக்காம கொடுக்கும் அம்மா ஒரு நாள்
"நீ எப்படா வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்தப் போற, வேலை வெட்டி இல்லாத உனக்கு ஊருக்குள்ளே யாரும் பெண் கொடுக்க மாட்டேன்னு சொல்லிடாங்க, உன்னைய நினைச்சாலே எனக்கு கவலையா இருக்கு?"
பேசிகிட்டு இருக்கும் போதே யாரோ வாசல் முன்னால இருந்து கதவை தட்டினாங்க,வெளியே போய் பார்த்தேன், என் அத்தை மகள் வெளியே நின்று கொண்டு இருந்தாள், எனக்கு என்ன பேசுவதுன்னு தெரியலை, எங்க அம்மாவும் பின்னாலே வந்து, அவளை உள்ளே வரச்சொல்லி நலம் விசாரித்தார்கள், நான் பல வருஷம் முன்னாடி பார்த்ததை விட மிகவும் சந்தோசமா இருந்தாள்.போகும் முன்னே பத்திரிக்கையை கொடுத்து விட்டு போனாள்.
படித்ததிலே தெரிந்து கொண்டேன், அவளோட மகள் பெரிய மனுசி ஆகிவிட்டாள் அதற்கு அழைப்பு விடப் பட்டு இருந்தது.அத்தை மகளுக்கு கல்யாணம் நடந்து பதினைந்து வருடங்கள் ஆகி விட்டது என்றும், எனக்கு தலை முடி கொட்டி, பாதி முடி நரைத்து விட்டது என்று தெரிந்தாலும், இன்னும் வேலை கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தை விட வாய்ப்பை தவற விட்டு விட்டேனோ என்கிற வருத்தம் என் மனசிலே வந்தது.