Sunday, May 15, 2011

உடன்பிறப்புகளுக்கு கலைஞர் கடிதம்!


சட்ட மன்ற தேர்தலில் தோல்வி, ஆட்சியில் தோல்வி, வளர்ச்சியில் தோல்வி, வாழ்கையில் தோல்வி என எங்கும் தோல்வி எதிலும் தோல்வி என துரத்தப்படும் உடன்பிறப்பே! இது தோல்வியல்ல, கடும் பணிசுமைகளுக்கு கிடைத்த தற்காலிக ஓய்வு.

மக்களுக்கு அயராது உழைத்துவிட்டோம் என்று ஓய்வு எடுக்க சொல்லிவிட்டனர்.சிறிது இளைப்பாறி மீண்டும் மக்கள் பணியை  தொடர்வோம்.ஒய்ந்து விட்ட நாம் வீழ்ந்துவிடவில்லை.ஒய்ந்திருக்கும் வேளையிலே எள்ளி நகையாடுவார்கள், இறுமாப்பாய் பேசுவார்கள், புன்முறுவலோடு, நன்முகம் காட்டி இயல்பாய் கடந்து சொல்வோம்.களங்கள் பல கண்ட கழகத்திற்கு போர்க்களம் காணும் நேரம் இன்னும் இருக்கிறது.வீழ்ந்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தவர்களை வெற்றி பவனியில் அரவணைக்கும் காலம் வரும்.

விடையில்லா கேள்விகளுக்கும் பதில் "மூன்று" எழுத்து, பதிலை பகுக்கும் "அறிவு" மூன்று எழுத்து, அறிவுக்கு உரமிடும் "ஆசான்" மூன்று எழுத்து,அனைத்திற்கும் வித்திட்ட "அன்னை" மூன்று எழுத்து, அவள் ஊட்டிய ”தமிழ்” மூன்று எழுத்து, தமிழோடு மக்களுக்கு செய்யும் ”தொண்டு” மூன்று எழுத்து,அதனை சார்ந்து செய்யும் கழகத்தின் பெயர் மூன்று எழுத்து.இதை கண்டு எடுத்த ”அண்ணா” மூன்று எழுத்து.இவைகள் இணையும் சக்தியிலே ௬டும் வெற்றியும் மூன்று எழுத்து, அந்தகனியை கனியை நாம் மட்டும் சுவைத்தால் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பொன்மொழி பொய்த்து விடும்.மாற்று கட்சியினரும் வெற்றிக்கனியை சுவைக்க நாம் தோல்விக்கு தோள் கொடுத்துள்ளோம்.
   
தோல்வியை கண்டு துவண்டு விடமாட்டோம். கழக வரலாற்றிலே, காணாத தோல்விகளை புதிதாக ஒன்றும் காணப்போவதில்லை, ஒப்பாரி வைத்து, ஓலமிடும் அளவுக்கு தோல்விகள் ஒன்றும் புதிதல்ல. முயன்றோம்-நின்றோம்-தோற்றோம்!முயல்வோம்-நிற்போம் -வெல்வோம்!கழகம் அழிந்துவிட்டது, கழகத்தை அழித்துவிட்டோம் என்று ஆனந்தக் ௬ச்சலிடும் அன்பர்கள் வரலாற்றை புரட்டிப்பார்க்க நினைவுபடுத்துகிறேன். தடம் புரண்ட வரலாறுகளை உலுக்கி,குலுக்கி திருத்தி இருக்கிறோம், இன்று தடம் புரண்டதையும் திருப்பி எடுத்து, திருத்தி எழுதுவோம்.

விட்டில் பூச்சிகளின் வெளிச்சத்திலே சூரியன் அழிந்து விட்டது என்பது சொல்வது,கண்ணை மூடிக்கொண்டு கொண்டு கையை வைத்து ஆதவனை மறைப்பதற்குச் சமம். இந்த தோல்வி வெற்றிக்கான அழிவில்லா விதைகளை விதைத்துள்ளது.விதைக்கப்பட்ட விதைகள் உயிர் பெற்று மரமாகி விண்ணை முட்டும் அளவு வளரும் தூரம், கிழக்குக்கும் மேற்குக்கும் உள்ள தூரத்தைப் போல நெடியதல்ல, இரவுக்கும், பகலுக்கும் இருக்கும் நேர இடைவெளியைப் போல மிகவும் குறுகியது.

கார்காலத்திலே துளிர் விட்ட இலைகள், இலையுதிர் காலத்திலேயே தன்னாலே தள்ளிவிடாமலே விழும்.பொறுத்திரு உடன்பிறப்பே! காதுகளை ௬ர்மையாக்கி, புத்தியை தீட்டி வைத்து கொண்டு மக்கள் பணி செய்ய காத்திரு! அண்டத்தின் சுழற்சியிலே ராத்தூங்கும் நம்மோடு சூரியன் தூங்குவதில்லை.  இன்னுமொரு உதயத்திற்கு காத்திரு, புது உலகம் நமக்காக காத்து இருக்கிறது சரித்திரமும், சாதனையும் படைக்க!


Saturday, May 7, 2011

கனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி


2G வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி இன்று மத்திய புலனாய்வு துறையினரால் கைது   செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டார்,மூத்த வக்கீல் ஜெத்மலானியின் வாதம் வீ ணாகப்போனது,இதை எதிர்பார்க்காத தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர், இதுகுறித்து பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். திமுகவின் அறிக்கையில் ஒரு திராவிட தாய்க்கு,ஆரிய தாய் சதி செய்த்துவிட்டாள். வடக்கு வளர்வது நின்று தெற்கு வளர்வது பொறுக்காமல், தெற்கின் வளர்ச்சியை தடுக்க இந்த கைது நடவடிக்கை என்பதை கழகம் உறுதியாக நம்புகிறது என்று அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.


பாஜக தலைவரின் அறிக்கையில் கைது நடவடிக்கை வரவேற்கதக்கது, ஆனால் மிகவும் தாமதமான நடவடிக்கை, இந்த வழக்கிலே சம்மந்தப்பட்ட பிரதமர், மற்றும் பிற தலைவர்கள் இன்னும் கம்பி எண்ணாமல் வெளியே இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். இதற்கு பதில் அளித்த பிரதமர், ௬ட்டணி கட்சிகளின் நடவடிக்கையை நான் கட்டுபடுத்த முடியாது , அது பொது குழுவிலே முடிவு செய்யப்படும். நான் எனது துறையைத் தவிர மற்ற துறைகளிலே மூக்கை நுழைப்பதில்லை என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 1c,2c என்ற பழக்கப்பட்ட எனக்கு 1g,2g என்றெல்லாம் ஒன்று இருப்பது இன்று செய்திதாள்களின் மூலமே அறிந்து கொண்டேன். இதற்கு மேல் நீங்கள் எதிர்பார்க்கும் பதிலை கட்சி தலைமை முடிவு செய்யும்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கைது நடவடிக்கை ௬ட்டணியை பாதிக்காது, கைதுக்கும், மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இந்த வெற்றி ௬ட்டணி 3G,4G என்று 100000G வரைக்கும் வழக்குகள் வந்தாலும் தொடரும். வட மாநிலங்களிலே கைது நடவடிக்கைய எதிர்த்து இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் மக்கள் அமைதியாக இருக்கின்றனர்,ஆனால் தமிழகம் தத்தளிக்கும் கத்தரி வெயிலிலும், மின் வெட்டுகளிலும் மக்கள் மனதிலே இருக்கின்ற சூட்டை விட, கைது நடவடிக்கை மக்களிடையிலே பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அனைவரும்  மெரினா கடற்கரையிலே ௬டி கடலும் பொங்குமா இந்த திராவிடத்தாய் கைது நடவடிக்கைக்கு ஆதரவாய் என்று எதிர்பார்க்கின்றனர்.


கழக பொதுக்குழு அவசமாக ௬ட்டப்படுகிறது என்ற தகவல் தெரிந்த உடனே, தமிழக பிற கட்சி தலைவர்கள் கலைஞரை சந்திக்கப்படை எடுத்துள்ளனர், தலைவர் விட்ட அறிக்கையிலே கழகம் தான் எனக்கு முதல் பிள்ளை, உறுப்பினர் அனைவருமே என் உடன்பிறப்புக்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தொலைகாட்சிக்கு பணம் வந்த விசயத்திலே புலனாய்வு துறை அறிக்கை, தேர்தல் அறிக்கை போல இருக்கிறது, தேர்தலை நடத்திய தேர்தல் கமிசன் எங்களை எதிரியாக பாவித்தது போல,புலனாய்வு துறையும் பாவிக்கிறது.நான் ஒன்று மட்டும் சொல்லிகொள்கிறேன் குடும்பத்துக்காக கட்சியை அடகு வைக்கமாட்டேன். சட்டப்படி எந்த வழக்கையும் சந்திப்போம். நானே கலைஞர் தொலைகாட்சியிலே குறள் சொல்லி சம்பளம் வாங்கும் ஒரு சாதாரண குடிமகன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


கைது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவி, நீதி இன்னும் தலை தூக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது,இந்த வழக்கிலே மட்டுமல்ல எந்த ஊழல்  வழக்கிலேயும்  சம்பந்தபட்ட அனைவரையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கைது செய்யவேண்டும்.ஆளுநர் விட்ட சிறப்பு அறிக்கையிலே தமிழகம் அமைதி பூங்காவாய் திகழ்கிறது,பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன் மாதிரியாக இருக்கிறது என்பதிலே எந்தவிதமான சந்தேகமே இல்லை.                

தமிழக மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் பயத்துடன் பஸ்சிலே பயணம் செய்துகொண்டு இருக்கிறார்கள். விடுமுறையை ஒட்டி, ரயில் நிலையங்களிலே மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. அறிக்கைய நாளேடுகளிலே படித்தவர்கள் இன்னும் அதிர்ச்சி கலையாமல் அப்படியே இருக்கின்றனர், அதிர்ச்சியிலே ஏற்படும் இதய பிரச்சனைகளுக்கு காப்பிட்டு திட்டம் கை கொடுக்கும் என்று தமிழக அரசின் செய்தி குறிப்பிலே செய்தி வெளியிட்டுள்ளது.தீக்குளிக்கும் தொண்டர்களுக்கு கழக கண்மணி வேந்தர் பட்டம் கொடுக்கப்படும். 


பொறுப்பு அறிவித்தல் : இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்திலே,நீங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது நலம்.


Sunday, May 1, 2011

என்னை கல்யாணம் பண்ணுவியா?

என்னை கல்யாணம் பண்ணுவியா என்கிற வசனத்தை முதல்ல துரைமார்கள் படத்திலே தான் பார்த்தேன், வைர மோதிரத்தை கையிலே எடுத்துகொண்டு வெள்ளையம்மா முன்னாடி மண்டியிட்டு கேட்பார், அதை கேட்டுட்டு மின்சாரத்தை தொட்டதுபோல கைய கால உதறி ஒரு நட்டுவக்காலி குதி குதிச்சி வராத கண்ணீரை வரவச்சி ஆமான்னு சொல்லுவதை கேட்ட வெள்ளையப்பன் செத்துப்போன குழியிலே இருந்து உயிரோடு வந்ததுபோல ஒரு சந்தோசப் பார்வைப் பார்த்து வெள்ளயம்ம்மா வாயிலே வாயை வைத்து பழசாறு குடிக்கிறதோட படத்தை முடிப்பாங்க.

இப்படிப்பட்ட கலைநயம் மிக்க படங்களைப் பார்த்து நானும் இந்த வசனத்தை யாரிடமாவது சொல்லணும் என்று நினைச்சிகிட்டே ஐந்து வருடம் ஓடிபோச்சி, ஆறாவது வருசத்திலே நான் அமெரிக்கா வந்துவிட்டேன். இங்க எனது   பொழுதுபோக்குகள் என்னண்ணன்னு பேச நேரமில்லை, அதைப்பத்தி பின்னாளிலே பார்க்கலாம்.

ஒரு நாள் அழகிய மாலை நேரத்திலே நான், வங்கியில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்பவர்(teller) முன்னே நிற்கிறேன்,தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம் வேலை செய்யாததாலே, மாலையிலே மருந்து குடிச்சி மட்டையாக பணம் எடுக்க வரிசையிலே காத்துகொண்டு இருந்தேன். எனது முறை வந்தபோது என்னை அழைத்தாள் ஒரு கருப்பழகி, அதாவது கருப்பம்மா, இவ்வளவு நாளும் வெள்ளையம்மாளுக்கு துண்டு சேவை செய்த நான் இன்று கருப்பமாவுக்கு சொம்பு அடிக்கப்போறேன். துண்டு விசயத்திலே நான் ஒரு பொதுநலவாதி என்று நிருபிக்கவே இந்த முயற்சி.

எனக்கு வணக்கம் வைத்துவிட்டு,வந்த விஷயம் கேட்டவளிடம் பணத்தேவையை சொன்னேன், அதற்கான வழிமுறைகளை முடித்துவிட்டு பணம் கொடுக்கும் முன் 

"உங்க கடன் அட்டைக்கு வெகுமதியா நீங்க செலவழிக்கும் ஒவ்வொரு நூறு டாலருக்கும் பத்து டாலர் திரும்பி வரும், உங்களுக்கு இந்த முறையை தேர்ந்து எடுக்க விருப்பமா ?"

"இந்த சேவைக்கு வருடாந்திர கட்டணம் ஏதும் இருக்கா?"

"இல்லை.. இலவசம்"

"இப்ப இலவசமுன்னு சொல்லிட்டு அப்புறமா காசை ஆட்டையப்போட்ட என்ன செய்ய, உங்களிடம் வந்து காசு கேட்கவா?"

அவங்களுக்கு ஒரே சிரிப்பு பதில் சொல்லமுடியாம, கருப்பம்மா சிரிக்கிற அளவுக்கு நகைச்சுவை சொல்லி இருக்கேன்னு நினைப்புக்கு போகும் முன்னேதான் அவள் அழகைப் பார்த்தேன், கருப்பா இருந்தாலும் அடுத்தவர்களை கவரும் முகம், அவளின் சிரிப்பு அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது. வர்ணிப்பு அம்புட்டுத்தான். சாணிய கரைச்சி ஊத்துற அகாடெமி விருது பெறனும்முன்னு வர்ணிப்புகளை ரெம்ப குறைத்துவிட்டேன்(இதெல்லாம் ஒரு பொழப்பா).

அதன்பின் அவளோட சிரிப்பை பார்க்க தினமும் ஒரு முறையாவது அவளை வங்கியின் கண்ணாடி வழியாக இருந்து பார்ப்பேன்,வாரத்திலே மூன்று முறையாவது பணம் எடுக்கும் சாக்கிலே அவளை சந்திப்பேன், ஒரு நாள் என்னிடம் 

"வெளியே தானியங்கி பணம் எடுக்கிற இயந்திரம் இருக்கும் போது நீங்க இங்க வர சிறப்பு காரணம்?" 

"உங்களைப்பார்க்க, உங்க சிரிப்பை பணத்தோட பையிலே அள்ளிப்போட்டு போகத்தான்"

கேட்டுட்டு சிரித்துவிட்டு

"வேற ஏதும் இருக்கா?"

"இன்னும் நிறைய இருக்கு, ஆனா அதை இங்க சொல்லமுடியாது"

"நான் கேட்டது வங்கி விசயமா?"    

"நான் கேட்டது வாழ்க்கை விசயமா?"

"நல்லாவே பேசுறீங்க"

"உங்க அழகைப் பார்த்தா பேச்சு நயாகரா அருவி மாதிரி வருது"

"ம்ம் பார்க்கலாம்"

"உங்க வேலை எப்ப முடியும்?"

முடியுறப்ப சொல்லுறேன், இப்ப நீங்க போகலாம். அடுத்த வாடிக்கையாளர் காத்துகொண்டு இருக்கிறார்.

எளவெடுத்த 
சனியன் 
நிம்மதியா 
இருக்க 
விட மாட்டானே

என்ற ஒரு இலக்கிய கவிதை(வரி வரியா இருக்குல்ல, வேற என்ன வேணும் கவிதைக்கு) மனதிற்குள்ளே நிழலாடி விட்டு சென்றது.அன்று மாலையே அவளை சந்தித்தேன்.

"குட்டிபோட்ட பன்னி மாதிரி எங்க அலுவலகத்தை சுத்தி வந்து என்னை சந்தித்துவிட்டீர்கள்?"

"நூறு சதவீத அர்ப்பணிப்பான உழைப்பு எனது வெற்றியின் ரகசியம்" 

"இன்று எனக்கு நிறைய நேரம் இல்ல, நாம ரெண்டு பேரும் காபி குடித்து விட்டு செல்லலாம்"

சரி என்று தலையாட்டிவிட்டு, காபியுடன் கடலையை முடித்தேன், அன்று முடிந்த சந்திப்பு மீண்டும் தொடர்ந்தது, காபியோட  நில்லாம சாப்பாடு வரை சென்றது. சந்திப்புகள் வளர்ந்துகொண்டு இருந்தாலும், இன்னும் என் மனசிலே உள்ள எண்ணத்தை சொல்லலை,அவளிடம் பேசும் போது, அவளுடைய தரத்திற்கு ஏற்றவாறு எனது பேச்சுக்கள் அமையும், கொஞ்சம் ௬டஅவளை சோர்வு அடைய செய்யாதவாறு பார்த்துகொள்வேன்.

 ஒரு நாள் நாங்கள் இருவரும் வார இறுதி நாட்கள் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது நான் அவளிடம்

"நடன விடுதிக்கு செல்வோமா, நாம ரெண்டு பேரும்"

"ம்ம் போகலாம் .. ஆனா இந்த வாரம் வேண்டாம், அடுத்த வாரம் செல்வோம்" என்று சாதரணமாக பதில் சொன்னாள்.என் மனசிலே அசாதாரண மாற்றம் இருந்தாலும் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. நாங்கள் நடன விடுதிக்கு செல்ல குறித்து வைத்து இருந்த நாளும் வந்தது, அவளை நடன விடுதி முன் சந்தித்தேன்.என்னைபார்த்து புன்னகை புரிந்தாள்.

"ஆட்ட விடுதிக்கு உள்ளே போகலா"

"ஒரு ரெண்டு நிமிஷம்"

ரெண்டு நிமிஷம் பத்து நிமிசமாச்சி, பதினைந்தாவது நிமிசத்திலே எங்களுக்கு பின்னால் இருந்து ஒரு குரல்

"யே பேபி..என்னைய நினைச்சி ஏங்குறியா "  என்று கேட்டவனிடம்

"அடி செருப்பால...நீ எல்லாம் ஒரு மனுசானா?"

"எம்மேல கோபமா?"

"இவனை பாத்து நல்லா கத்துக்கோ?" என்னை கை காட்ட

"ஒ.. இவ்வளவு நாளும் என்னிடம் சரியாப் பேசாததுக்கு இவன் தான் காரணமா?"

"ஒரு பெண்ணை எப்படி சந்தோசமா வச்சி இருக்கனுமுன்னு வெளிநாட்டு பன்னிக்கு தெரியுது, உள்ளூர் ஓணான் உனக்கு தெரியலையே"

பன்னின்னு சொன்னதுக்கு நானே கவலைபடலை, ஆனா ஒணான் பெயரைகேட்டு அண்ணாச்சி கடும்கோபத்திலே இங்கலிபிசிலே ஐஞ்சி நிமிசத்துக்கு விடாம ஒரே திட்டு, திட்டு முடிச்ச உடனே ரெண்டு பேரும் என்னையப் பார்த்தாங்க, நான் அமைதியாவே இருந்தேன், உடனே கருப்பமா

"இந்த திட்டை எல்லாம் கேட்டுகிட்டு என்னால சும்மா இருக்க முடியலையே" என்று புலம்ப, உடனே நான் கருப்பண்ணாச்சியிடம்

"நான் வெளிய பல்ல காட்டிட்டு மொக்கை அடிக்கிற ஆளா இருந்தாலும், உள்ளுக்குள்ளே பல்லகடிச்சிகிட்டு எழுதுற இலக்கியவாதி துங்கிகிட்டு இருந்தான், நீ இவளை திட்டி அவனை எழுப்பி விட்டுட்ட, இப்ப சொல்லுறேன் கேட்டுக்கோ, இனிமேல இவளை திட்டின உன் மண்டையிலே கொட்டுவேன்"

மறுபடியும் ரெண்டு பேரும் என்னையப்பார்த்தாங்க, உடனே கருப்பம்மா

"பக்கி .. பக்கி இவன் விடாம உன்னையதானே இவ்வளவு நேரமும் திட்டினான், நீ என்னைய திட்டாதேன்னு சொல்லுறே?"

சாதாரணமாவே அண்ணாச்சிமார் பேசுறது புரியாது, இந்த லட்சணத்திலே என்னை திட்டினா எப்படி புரியும், இருந்தாலும் சமாளிச்சேன்.

"உனக்காக எதையும் தாங்குவேன்"

"இவனுக்கு என் மேல இருக்கிற அன்பில கால் வாசி உன்னிடம் இருக்கா, இவன் காலை நல்ல கழுவி குடி, அப்பத்தான் உனக்கு புத்தி வரும்"

நான் உடனே "இப்ப தண்ணிக்கு எங்க போக, அதுமட்டுமில்லாம இந்த குளிரிலே சூவை எல்லாம் கழட்டனும்"

நான் சொன்னதை எல்லாம் பொருள் படுத்தாமல் அண்ணாச்சி கருப்பம்மா முன்னாடி மண்டியிட்டு பையிலே இருந்த மோதிரத்தை எடுத்து

"வில் யு மார்ரி மீ?" கேட்டுட்டு அப்படியே கருப்பம்மா கண்களைப் பார்த்து ஏக்கத்துடன் காத்துகொண்டு இருந்தார்.இதை சற்றுமே எதிர் பாராத கருப்பம்மா

"ஏய்ய்ய்ய்ய்...  நீ என்ன பண்ணுற.. நீ என்ன பண்ணுற .. நீ என்ன" என்று சொல்லிவிட்டு அவனைமட்டுமே பார்த்தாள். அவன் மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்து இருக்கவேண்டும்.கொஞ்ச நேரத்திலே ஆர்ப்பாட்டம் ஆரவாரம் இல்லாமல் அவன் கைகளை பற்றி கொண்டு ஆமா என்ற ஒரு வார்த்தை மட்டும் சொன்னாள்,நான் அந்த இடத்தை விட்டும்,அவள் என் மனதைவிட்டும் வெளியேற அந்த ஒரு வார்த்தை மட்டுமே போதுமானதாக இருந்தது.