Monday, September 20, 2010

நீலச்சிலுவை சங்கம்

நீலச்சிலுவை சங்கம் என்று ஒன்று இருப்பதே எனக்கு ஏழு கழுதை வயசு ஆகும் வரை தெரியாது, ஊரிலே குரைக்கிற நாயை கல்லை கொண்டு எறியுறதும், ஓடுற நாயை கட்டையை கொண்டு அடிக்கிறதும் தான் தலையாய கடமையாக இருந்தது கொஞ்ச காலத்துக்கு, அப்ப எல்லாம் எனக்கு வேலை வெட்டி இல்லாம (இப்ப மட்டும் என்ன) நல்லா இருந்த சுவரிலே உட்கார்ந்து குட்டி சுவர் ஆக்கிக்கொண்டு இருந்தேன்.

நான் பத்திரிகை செய்திகள் படிக்க ஆரம்பித்த போது சிந்துபாத் கதையை ஆர்வமாக படிப்பேன்,கொஞ்ச காலத்திலேயே கதை எப்ப முடியும் என்று அருவருப்பாய் பார்ப்பேன், அந்த நேரத்திலே என் கண்ணிலே பட்டது இந்த நீலச்சிலுவை சங்கம்.சங்கம் என்றாலே மனதிலே பயம் வந்துவிடுகிறது.விலங்குகளை காப்போம் என்று இவர்கள் கொடுக்கிற பேட்டிகளை கண்டு அடி கலங்கித்தான் போய்விட்டேன்.அதன் பின் கொஞ்ச நாளைக்கு நாய் கடிக்க வந்தாலும், நானும் நாய் மாதிரி குரைச்சி தப்பிச்சி ஓடிடுவேன், நாய் அடிச்சா சங்கத்திலே இருந்து என்னை கைது பண்ணிடுவாங்க என்ற பயம் தான் காரணம்.

சில சமயங்களிலே அவங்க சங்கத்திலே இருந்து நாங்க காப்பாத்திய விலங்குகள் என்று படம் போடுவாங்க, அந்த படத்திலே எல்லாம் சடை வச்சி நாய்க்குட்டி, இல்லைனா மீசை வச்ச கருப்பு, நீல நிற பூனை  குட்டிகள், நானும் அந்த மாதிரி நாயும் பூனையும் ஊரிலே இருக்கிறதா என்று நாயா அலைந்து பார்த்து கால் தேய்ந்ததே மிச்சம். சில சமயம் நாய்களை நகராட்சி வண்டியிலே வந்து அள்ளிப் போட்டுட்டு போவாங்க, சட்டம் தன் கடமையை செய்கிறதோ இல்லையோ, சங்கம் தன் கடமையை செய்கிறது என்று நினைச்சுக்குவேன். அந்த நாய்கள் எல்லாம் புகைப் படத்திலே வருதான்னு தினமும் பத்திரிகை செய்திகளைப் பார்ப்பேன், அந்த நாய்களும் திரும்பி வராது, பத்திரிக்கையும் படம் போடாது, கொஞ்ச நாள் கழிச்சி மறுபடியும் வண்டி வரும் நாய்களை அள்ளிட்டு போகும்.

விவரம் தெரிஞ்ச ஒருத்தரிடம் விசாரித்தேன், இந்த நாய்களை எல்லாம் எந்த காப்பத்துக்கு கொண்டு போறாங்கன்னு, அவர் சொன்னார் அவைகளுக்கு நகராட்சி செலவிலே குடும்ப கட்டுப்பாடு பண்ணி, கொள்ளி வைப்பாங்கன்னு சொன்னார். நீலச்சிலுவை அமைப்பை பத்தி சொன்னேன், அதெல்லாம் துட்டு அதிகமா வச்சி இருக்கிற மாநகர பணக்காரங்களின் சமுக சேவை, அவங்க சேவை மாநகரம் தாண்டாது. 

சரக்குக்கும்  தண்ணிக்கும்  வித்தியாசம் தெரியாத வயசிலே இருந்து, தண்ணியும்,சரக்கும்  கலந்து வைத்த பாட்டிலே சரக்கை மட்டும் உரிய தெரியும் வயசு வந்த உடனே, நீலச்சிலுவை பத்தி ஆராய்ச்சி செய்ய ஆராம்பித்தேன், மணி அடிச்சிருச்சின்னா அது இடுகையாகிடுமுன்னு அவங்களுக்கு தெரியாது. இப்ப தெரிந்து இருக்கும் ஆராய்ச்சியின் சக்தி என்னவென்று,அதாகப்பட்டதாவது இந்த சங்கத்தோட நோக்கம் என்னவென்றால் எனக்கு தெரிந்த வரைக்கும் நாய்க்கும், பூனைக்கும் சொம்பு அடிக்கிறதுதான், அதும் எப்படி பட்ட நாய், பூனை ன்னு நல்லா பார்த்தீங்கன்னா தெரியும்,அந்த நாய் ஜெர்மன் நாயா இருக்கும், பூனைக்குட்டி அமெரிக்காவிலே 
இருந்து வந்து இருக்கும். 

நம்ம ஊரு தெருவிலே எம்புட்டு நாய் இருக்கு என்னைக்காவது ஒரு நாள் அதிலே ஒண்ணை கையிலே எடுத்து வச்சி புகைப்படம் எடுத்து பத்திரிக்கையிலே போட்டு இருப்பாங்களா,வீட்டிலே கோழி பிரியாணி, ஆட்டு இறைச்சி பிரியாணி சாப்பிட்டு கையிலே நீல நிறத்திலே பச்சையை குத்திட்டு, நாம் விலங்குளை காப்போப்போன்னு ஊரு ஊருக்கு போய் சொம்பு அடிக்கிறது என்ன நியாயம்.இந்தியாவிலே எல்லோரும் செல்வச் செழிப்பா இருக்காங்க, இந்த நாயையும், பூனையும் காப்பாத்த ஆளே இல்லையேன்னு, யாரு அவங்க காலிலே விழுந்து கெஞ்சுனாங்களா, இப்படி எந்த வித கோரிக்கையும் இல்லாம, ஓடிபோய் வெள்ளைக்கார துரைமார்களின் நாய்க்கும், பூனைக்கும் சொம்பு அடிப்பதை, ஒரு வரிகாட்டாத இந்திய குடிமகன், தன்மானத் தமிழின் பார்த்தக்கொண்டு சும்மா இருப்பானா(போற போக்கிலே வந்துவிட்டது).

பூனைம், நாயும் தான் விலங்குகளா, பன்னி குட்டி, ஆட்டு குட்டி, கழுதை குட்டி 
எல்லாம் மனுஷன் வரிசையிலையா வருது.என்றைக்காவது எந்த ஒரு விலங்குகள் நல அமைப்போ ஒரு பன்னிகுட்டியோ, கழுதைகுட்டியோ காப்பாத்தி எங்க சங்கத்திலே வட்டியில்லா கடன் கொடுத்து இந்த கழுதையும்,பன்னியையும் வளர்க்கிறோம் என்று சொல்லிருப்பார்களா?, இவங்க உதாசீனப் படுத்தினதாலோ என்னவோ, என்னைய பல வருசமா வீட்டிலே கழுதை,பன்னின்னு திட்டுவாங்க, இந்த சங்கத்து மக்கள்  கழுதையும்,பன்னியையும் செல்லப் பிராணியா வளர்த்து இருந்தா இன்னைக்கு விவகாரம் இவ்வளவு தூரம் விபரிதம் ஆகி இருக்காது. எனக்கு கிடைத்த 
திட்டுகளாவது மிச்சம் ஆகி இருக்கும்,இந்த ஆராய்ச்சி இடுகையும் மிச்சம் ஆகி இருக்கும். 

ஐயா இந்த உலகத்திலே கேள்வி கேட்பது சுலபம், ஆனா பதில் சொல்லுவது எவ்வளவு கஷ்டம் என் போன்ற மாப்பிள்ளை விசுபலகை(பெஞ்ச்)( நான் ஒரு தமிழ் புலி) மாணவர்களுக்கு நல்லாவே தெரியும் இருந்தாலும், இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சியிலே கேட்க  வேண்டியதை கேட்காமல் விட்டு விட்டானே இந்த மொக்கை எழுத்தாளன் என்று பின்னாளிலே ஒரு அபச்சொல் வந்துவிடக் ௬டாது என்கிற நல்ல எண்ணத்திலே நான் கேட்க்கிறேன், விலங்குகள் நல காப்பகம் என்று பெயர் வைத்துகொண்டு பூனைக்கும், நாய்க்கும் சொம்பு அடிப்பதற்கு பதிலா, உயர்தர நாய், பூனை நல காப்பகம் என்று பெயர் மாற்றினால் என்ன?
     
பெயர் மாற்றம் அறிவிக்க பட்ட அடுத்த வினாடியே இந்த இடுகை நீக்கப்படும் என்பதை தாழ்மையோட தெரிவித்து கொள்கிறேன். வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி ௬றி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.


18 கருத்துக்கள்:

பழமைபேசி said...

ஆணியே துப்புரவா இல்லை போலிருக்கே? இடுகை மேல இடுகை வந்துட்டே இருக்கூ???

பழமைபேசி said...

ஆமா, புளியங்குடிக்கு திரும்பி என்னைக்காவது ஒரு நாள் போகத்தான போறீர் ஓய்?? ஞாவகத்துல வெச்சிகிடுங்க இராசா!!!

பழமைபேசி said...

எழுத்துப் பிழைக வராம பிழைச்சிப் போனதைப் பார்த்தா, இது நியூயார்க் மண்டபத்துல இருந்து வந்த சரக்கு போலிருக்கூ??

ஆள் வெச்சி... விசாரிக்கத்தான் கெடக்கு!!!

சாந்தி மாரியப்பன் said...

//விலங்குகள் நல காப்பகம் என்று பெயர் வைத்துகொண்டு பூனைக்கும், நாய்க்கும் சொம்பு அடிப்பதற்கு பதிலா, உயர்தர நாய், பூனை நல காப்பகம் என்று பெயர் மாற்றினால் என்ன?//

கேள்வி கேட்பது சுலபம்.. பதில் சொல்லுவது கஷ்டம்ன்னு ஒரு எளுத்தாளரே சொல்லியிருக்காருங்க. அதனால எஸ்கேப்ப்ப்ப்ப் :-)))

ராமலக்ஷ்மி said...

நல்ல ஆய்வு. நல்ல கேள்வி.

//எனக்கு கிடைத்த திட்டுகளாவது மிச்சம் ஆகி இருக்கும்,இந்த ஆராய்ச்சி இடுகையும் மிச்சம் ஆகி இருக்கும்.//

நல்ல ஆதங்கமும்:))!

Chitra said...

இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆராய்ச்சியிலே கேட்க வேண்டியதை கேட்காமல் விட்டு விட்டானே இந்த மொக்கை எழுத்தாளன் என்று பின்னாளிலே ஒரு அபச்சொல் வந்துவிடக் ௬டாது என்கிற நல்ல எண்ணத்திலே நான் கேட்க்கிறேன்


......என்னே ஒரு நல்லெண்ணம்!

vasu balaji said...

தளபதி நிஜம்மாகவே நீங்க அடுத்த கட்டத்துக்கு நவுந்துட்டீரு. துண்டுக்கு வேலை வந்துரும் போலயிருக்கே:)சூப்பர்

பவள சங்கரி said...

வழக்கம்போல ரொம்ப நல்லாயிருக்குங்க.......வாழ்த்துக்கள்.

Anonymous said...

மொக்கை....மகா மொக்கை... சாமிகளா...தாங்க முடியல.....
ஒண்ணுமே இல்லாத விசயத்த இவ்வளவு ஆராய்ச்சி செஞ்சு அதுக்கு ஒரு இடுகைய போட்டு :) .... நசர் அண்ணே, எங்கேயோ போய்கிட்டு இருக்கீங்க...

Unknown said...

இந்த புளு கிராஸ் ஆளுங்க வீட்டுக்கு சென்னையில இருக்கிற அத்தனை தெரு நாய்களையும் அனுப்பி வைக்கணும் ...

Thenammai Lakshmanan said...

நீலச்சிலுவை சங்கம் என்று ஒன்று இருப்பதே எனக்கு ஏழு கழுதை வயசு ஆகும் வரை தெரியாது, //

அட 49 வயசு ஆகியே பல காலம் ஆச்சா..:)) இஃகி இஃகி

Thenammai Lakshmanan said...

இவங்க உதாசீனப் படுத்தினதாலோ என்னவோ, என்னைய பல வருசமா வீட்டிலே கழுதை,பன்னின்னு திட்டுவாங்க, இந்த சங்கத்து மக்கள் கழுதையும்,பன்னியையும் செல்லப் பிராணியா வளர்த்து இருந்தா இன்னைக்கு விவகாரம் இவ்வளவு தூரம் விபரிதம் ஆகி இருக்காது//ஹாஹாஹா முடியல.. ப்ளிஸ் கண்ரோல் தேனு...

Thenammai Lakshmanan said...

ஆமா ஃப்ரொபைல் பிச்சர்ன்னு ஒண்ணு போடாம என்ன ABCD எல்லம் போட்டு வைச்சி இருக்கிங்க..:))

க.பாலாசி said...

ஸ்ஸ்ஸ்ஸப்பா... முடியல சாமீ... கலக்கலான போஸ்ட்.. சொல்றதும் சரிதான்...

ஹேமா said...

நசர்....சொல்ற விஷயம் நல்லாத்தான் இருக்கு.ஆனா ஏழு கழுதை வயசுன்னா எத்தனை வயசுன்னு சொல்லுங்க.உங்களுக்கு எத்தனை வயசுன்னு கணக்குப் பண்ணப் போறேன் !

சிங்கக்குட்டி said...

//இந்த ஆராய்ச்சி இடுகையும் மிச்சம் ஆகி இருக்கும்//

:-) :-) :-)

thiyaa said...

நல்ல ஆய்வு.

'பரிவை' சே.குமார் said...

நல்ல ஆய்வு. நல்ல கேள்வி.