செருப்படி விழும்
"செருப்படி விழும் இனிமேல என் பின்னாடி சுத்திகிட்டு அலைஞ்சன்னா?" அது தான் நான் முதல்ல அவனை பார்த்து பேசின வார்த்தை
"இந்தா... நல்லா புது செருப்பா போட்டுட்டு வரும் போது அடி, இப்ப நீ போட்டு இருக்கிற செருப்பை நடுத் தெருவிலே விட்டுட்டு போனா நாய் ௬ட மோந்து பார்க்காது, ஒரு கால் செருப்பு உயரமாகவும், இன்னொன்னு குட்டையாவும் இருக்கு, உங்க அப்பனை புது செருப்பு வாங்கி கொடுக்க சொல்லு, அப்புறமா வந்து என்னை அடி"
அப்படி சொன்னதும் எனக்கு என்ன செய்யன்னு தெரியலை, என்னை அறியாமலே சிரிப்பு தான் வந்தது.
அவன் யாருன்னு சொல்ல வேண்டிய கட்டாயம் நிலை, ஒரு ஆம்புளை பையனை செருப்பை கழட்டி அடிப்பேன்னு சொன்னதுக்கு ஆண்கள் சங்கம் கடைஅடைப்பு, மூக்கு உடைப்புன்னு போராட்டம் நடத்தக் ௬டாது என்ற தொலை நோக்கு பார்வையிலே நான் விவரத்தை சொல்லுறேன்.எங்க ஊரு புளியங்குடியில இருந்து பேருந்திலே தினமும் எங்க ௬ட வருவான், நான் குற்றாலம் மகளிர் கல்லூரியிலே படித்து கொண்டு இருந்த நேரம், அவன் எங்கே போகிறான்,எதற்கு பேருந்திலே வருகிறான் என்று எல்லாம் எனக்கு தெரியாது.கொஞ்ச நாளைக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சது அவன் என்னையை பார்க்கத்தான் வருகிறான்னு,வார கழுதை சும்மா பாத்துட்டு போறதை விட்டுட்டு பேருந்திலே போற வார எல்லோரிடமும் என் ஆளு .. என் ஆளு சொல்லி வச்சி இருக்கான், என்னிடம் எல்லோரும் நீ அவன் ஆளா .. நீ அவ ஆளா ன்னு கேட்டு ஒரே நச்சு.நானும் கொலை வெறி கோவத்தை எல்லாம் அடக்கி கிட்டு அமைதியாதான் இருந்தேன்.
ஒரு நாள் என்னோட தலை முடியை பேருந்திலே நான் உட்கார்ந்து இருந்த கம்பி கவ்வி விட்டது என்பதற்காக,கோபத்திலே அந்த இருக்கையையே பேர்த்து எடுத்து வெளியே போட்டுட்டான்,அடுத்த நாள் விவரம் தெரிஞ்சி எனக்கு வந்த கோபத்திலே தான் அப்படி திட்டினேன்,என்னோட சொந்த தலை முடியா இருந்தா ௬ட பரவா இல்லை, அது சவரி முடி.
அடுத்த நாள் வரமாட்டான்னு நினைச்சேன், ஆனா வந்துட்டான், பேருந்து கடையநல்லூர் பக்கம் போகும் போது, பேருந்தை காவல் துறை அதிகாரிகள் நிறுத்தி, உள்ளே இருந்த அவனை இழுத்து வண்டிக்குள்ளே அள்ளி போட்டுட்டு போய்ட்டாங்க.என் ௬ட படிக்கிற புள்ளைகள் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்தார்கள்.நான் புகார் கொடுத்த மாதிரி.
அப்பத்தான் பேருந்து நடத்துனர் சொன்னார் "அரசாங்க பேருந்து, அவங்க அப்பன் வீட்டு சொத்துன்னா நினைச்சாங்க" நான் செய்ய வேண்டிய வேலையை அரசாங்கம் செய்து விட்டதுன்னு நிம்மதியானேன்.அந்த வருஷம் எங்க ஊரிலே மழையே இல்லை,இப்படிப்பட்ட அரை லூசு பையன் இருக்கிற இடத்திலே எல்லாம், நான் வர மாட்டேன்னு சொல்லி மழை கொல்லத்துக்கு கிழக்கே வரலை, எங்களோட பகுதி விவசாயிகள் எல்லாம் தவியா தவிச்சி போனாங்க
திரும்பி வந்தவன் முன்னே மாதி இல்லாம என்கிட்டே பேச ஆரம்பித்தான், நானும் ஆரம்பித்தேன், இருவரும் பேசினோம், பேசினோம், இணைபிரியாமல் பேசினோம். அந்த வருஷம் எல்லாம் எங்க ஊரிலே விவசாயிகள் எல்லாம் கனமழையிலே நினைஞ்சி போய்ட்டாங்க,மழை விட்டாலும் எங்க பேச்சி மழை விடலை,பேசி முடக்கும் முன்னே என்னோட எங்க கல்லூரி படிப்பும் முடிஞ்சி போச்சி, படிப்பு முடிஞ்ச உடனே எனக்கு பேசி முடிச்சிட்டாங்க.என்ன செய்ய தெரியாம இருந்த நிலையிலே அவன் எங்க அப்பாவை வந்து பார்த்து பேச வந்தான்
அவன்கிட்ட எங்க அப்பா "மதமா இருந்தா சுலபமா மாறிடலாம், ஆனா சாதியை எப்படி மாத்துறதுன்னு கேட்டாரு?"
ரெண்டு பேரும் நிறைய பேசினாங்க, ஆனா முடிவிலே நாங்க நினைச்சது நடக்கலை. அதற்கு பின் நானும் அவனை பார்க்கலை.
இனிமேல கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லைன்னு தெரிஞ்சதும் எனக்கு வேலை தேட அனுமதி கிடைத்தது, ஊரை விட்டு வேலை தேடி வெளியூர் வந்தேன், அவனும் பின்னாடி வந்தான்.இடைவெளி விட்ட பேச்சுக்கள் மீண்டும் தொடர்ந்தது.ஊரை விட்டு வந்துவிட்டோம், எங்க வாழ்கையை தீர்மானிக்கும் உரிமை எங்க கையிலே இருந்தாலும், நாங்க ரெண்டு பேரும் திருமணம் செய்ய முயற்சி செய்யலை,நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி இருந்தா பத்தோட பதினோன்னா ஒரு மூலையிலே எங்க வாழ்க்கை ஓடி கொண்டு இருந்து இருக்கும்.
கடந்த இருபத்தி ஐந்து வருடமா சாதி விட்டு சாதி மாற சட்டம் வேண்டும் என போரடுறதினாலே எங்களை இந்த உலகம் அடையாளம் காணுது, இன்றைக்கு இந்தியாவிலே மிகப் பெரிய பத்திரிக்கையாகிய நீங்களும் என்னை சந்தித்து பேட்டி எடுக்குறீங்க, நாங்க ரெண்டு பேரும் காதலர்களாகவே செத்தாலும் வருங்காலத்திலே வரும் என்னைப் போன்ற சந்ததிகள் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை.நாங்க எங்க பயணத்தை முடித்தாலும், எங்களுக்கு பின்னால் யாராவது தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.